Thursday, May 28, 2009

உரையாடல் - 5 (x-group, சேகர்) - [[மீள்வாசிப்பு]]

இவ்வுரையாடல் x-group என்னும் தளத்தில் பெண் குழந்தைகளை முத்தமிடுவதில் எல்லை தேவையா? என்னும் பதிவில் இடம்பெற்றது.

வெகுஜனப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்திருந்த சாதாரணமான கட்டுரை ஒன்றை முன்வைத்து தத்துவார்த்த ரீதியிலான உரையாடல் ஒன்றைச் சாத்தியப்படுத்தும் நோக்கிலே இவ்வுரையாடல் நிகழ்த்தப்பட்டது. 'பெண்குழந்தைகளை முத்தமிடுவது தொடர்பான' சாதாரண மக்கள் நிலைப்பாட்டை அதன் உளவியல் தளத்தில் அணுகும் நோக்கமே இங்கே முக்கியத்துவம்பெற்றது.

சமூகத்தின் பால் ரீதியான உளவியல் பிளவுநிலைகள் குடும்ப உறவுகளிலும் பெருமளவான தாக்கத்தைச் செலுத்துகின்றன. கட்டமைக்கப்பட்ட பால் பிளவு உருவாக்கும் மனநிலையே சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பெருமளவு ஆதிக்கம் செலுத்துகின்றது. ஒருவகையில் சமூகத்தை இயக்குகின்றது எனவும் கூறலாம். துவித எதிர் இருமைக்குள் அகப்பட்ட பால் தெரிவுகள் இன்று அதைத்தாண்ட முயற்சிப்பதை நாம் அவதானித்தவாறே இருக்கின்றோம். மேற்கில் இதுதொடர்பான உரையாடல்கள் அதிகளவில் இடம்பெறுவதை எம்மில் பலர் அறிவதில்லை. சமூகவியல் தளத்தில் இதன் தேவைப்பாடுகளும் உரையாடல்களும் உச்சநிலையை அடைந்ததை அடுத்து அதன் உயிரியல் நிலைப்பாடுகளும் சாத்தியங்களும் பல்வேறுவகைப்பட்ட புலமையாளர்களால் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் ரீதியாகவும் அவை முக்கியத்துவம்பெற்றுவருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

சிக்மன் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வு புதிய வெளியொன்றைத் திறந்துவிட்டதோடு உளவியல் பகுப்பாய்வுத் துறையை முக்கியத்துவம்பெற்ற தனித்துறையாக மாற்றிவிட்டது. அதன் பின்பு சிக்மன் பிராய்டின் மாணவரான யூங் அவர்களால் சிக்மன் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வு முறை தனியே பாலியலை மையமாக வைத்தது என்று கூறப்பட்டு நிராகரிக்கப்பட்டது. (பிராய்டின் பாலியல் மைய உளவியல் பகுப்பாய்வு முறைக்கு பல்வேறு காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றார்கள். விக்டோரியல் காலத்தைய ஆணாதிக்கம் சார் கருத்து நிலையும் பாலியல் இன்பம் என்பதைத் தவறாகக் கருதும் போக்கும் முக்கியமான காரணமாகக் கூறப்படுகின்றது. அத்துடன் சிகமன் பிராய்ட் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு ஆளாகியிருந்தார் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அந்த அடிப்படையில் பிராய்டின் பாலியல் மைய உளப்பகுப்பாய்வு முறை தோற்றம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. அவர் தனது உளப்பகுப்பாய்வின் அடிநாதமாக பாலியல் வெளிப்பாட்டு உந்துகையை கட்டமைத்தது அவரது உளவியல் சார்ந்த நிலைப்பாடு எனவும் கூறப்படுகின்றது.) அதன் தொடர்ச்சியில் இன்று உளவியல் பகுப்பாய்வு முறை பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்துவிட்ட போதிலும் சிகம்ன் பிராய்டும் அதன் சில அடிப்படைகளைத் தகர்த்த யூங் உம் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றார்கள். சிக்மன் பிராய்டின் உளப்பகுப்பாய்வு முறையில் மனம் மூன்று விதமான பிரிவுகளைக் கொண்டது. இத், ஈகோ, சுப்பர் ஈகோ ஆகிய மூன்று பிரிப்புக்களை வைத்துக் கொண்டு மனத்தை அணுக முற்படுகின்றார். இதில் இத் என்பது பிராய்டைப் பொறுத்தவரை முக்கியமானது. நனவிலி மனம் அடக்கிவைக்கப்பட்ட ஆசைகளால் சூழப்பட்டது. பிராய்டைப் பொறுத்தவரை இத் இன் பெரும்பகுதிக் கூறுகள் பாலியல் ஆசைகளால் நிரம்பியவை என்பதும் அவற்றின் பிணைப்பு சக்தியே மனிதனின் சராசரி நடவடிக்கைகளை ஏதோவொரு விதத்தில் பாதித்துக் கொண்டிருப்பது என்பதுமாகும். பிராய்டைப் பிற்காலத்தில் ஆண்மையமான உளப்பகுப்பாய்வை முன்வைத்த ஆணாதிக்கவாதி என்று பெண்ணியவாதிகள் விமர்சித்ததற்கு பிராய்டின் லிங்க மையவாதமே காரணமாக அமைந்திருக்கக்கூடும்.

அதன்பின்பு மிஷேல் ஃபூக்கோவால் எழுதப்பட்ட The History of Sexuality நூலும் அவர் காலப்பகுதிக்குச் சமாந்தரமாக வாழ்ந்த லக்கான் மற்றும் டெல்யூஸ்-கட்டாரி போன்றோரும் பிராய்ட் மற்றும் யூங்கின் உளவியல் பகுப்பாய்வின் பாலியல் மையம் சார் கருத்துக்களை அடுத்த தளங்களுக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

பாலியல் அறத்தின் பன்மைகள் தொடர்பான தனது கருத்தியல் வெளிப்பாடு மூலம் ஃபூக்கோ ஏற்கனவேயான ஒற்றை அறம் தொடர்பான கருத்தியலைச் சிதைக்க முனைந்தார் எனக்கூற முடியும். இது பிராய்டின் உளவியல் பகுப்பாய்வின் அடிப்படையைச் சிதைக்கும் முயற்சி எனக்கூற முடியும். ஹிஸ்டீரியா நோய்க்கூறுகளுக்குள்ளான பெண்களின் அடிப்படையே பாலியல் வெளிப்பாடு தொடர்பான கட்டுப்பாட்டு நிலை எனக்கூறப்படுகின்றது. பாலியல் நிலைப்பாடுகள் சார்ந்த அதிகாரம் ஒற்றை அறம் என்ற கருத்தியலூடு மட்டுமே தீக்கப்பட முடியும். பாலியல் அறத்தின் பன்மைத்துவம் என்பது உள ரீதியில் பாலியல் சார் விடுதலையை அளிக்கின்றது. இதன் மூலம் பாலியல் சார் உளவியலால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைப் பற்றிப் பேசியதில் ஃப்பூக்கோ முக்கியத்துவம் பெறுகின்றார். பிராய்ட் உளவியல் வைத்தியர் என்ற நிலைப்பாட்டில் இருந்து முன்வைத்த கருத்துக்கள் ஃபூக்கோவால் தத்துவாசிரியர் என்ற நிலைப்பாட்டில் இருந்து பெரும்பாலும் அதன் சமூகவியல் தளத்தில் எதிர்கொள்ளப்பட்டது.

லக்கானை பிராய்டின் தொடர்ச்சியாகவே ஆய்வாளர்கள் குறிப்பிட்டாலும் லக்கானது கருத்தியல் பிராய்டின் கருத்த்யலில் இருந்து பல இடங்களிலும் மாறுபடுகின்றது. முக்கியமாக லக்கான் உளவியல் பகுப்பாய்வு முறையில் மொழியியலை முதன்முறையாகப் பிரயோகித்தார். சமூகத்தில் மொழி முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மனிதர்களது சிந்தனை முறையில் பெரும் தாக்கத்தை விளைவிப்பது. இந்நிலையில் மொழியியலை உளப்பகுப்பாய்வுடன் இணைத்தது லக்கானை முக்கியப்படுத்தியது. பின் அமைப்பியல் காலத்தில் மொழியியல் முக்கியத்துவம் பெற்றது இதற்கான காரணமாகக் இருக்கக் கூடும். (லக்கானது 'படிமம்', 'குறியீடு' போன்ற கருத்தியலின் பாதிப்புக்கள் போத்ரியால் வரை இருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.) ஒருவகையில் சசூரினது மொழியியல் அடிப்படையை பிராய்டின் உளப்பகுப்பாய்வுடன் இணைத்தவர் என லக்கானைக் கூற முடியும். பிராய்டைப் பொறுத்தவரை உளநோயாளர்களை அவர் ஒரளவுக்காவது வரையறுக்க முடியும் எனக் கருதியவர். ஆனால், லக்கான் அவ்வாறு கருதவில்லை. லக்கானைப் பொறுத்தவரை அனைவருமே உளவியல் நோயால் பீடிக்கப்பட்டவர்களே. ஒவ்வொருவரது அணுகுமுறையும் வெவ்வேறு விதமாக இருக்கின்றது என்பது அவரது வாதம். அதுமட்டுமன்றி 'உளவியல் குறைபாட்டு நிலையை' ஏற்ற இறக்கங்களுடன் கூடிய ஒன்றாக லக்கான் கருதியதில்லை. அவற்றை 'வித்தியாசங்கள்' என்ற நிலைப்பாட்டுடன் அணுகியமையில் இருந்து லக்கானது முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.

டெல்யூஸ்-கட்டாரி இரட்டையர்கள் பிராய்டை உளவியல் சார்ந்து மறுத்தார்கள். ப்ராய்டின் நனவிலி 'விருப்பு' என்பதன் பாலியல் அடிபடையில், அவர்களைப் பொறுத்தவரை 'விருப்பம்' என்பது கூட ஒரு அங்கமே தவிர அது இரு தன்னிலைகளுக்கிடையிலான தொடுப்பு அல்ல என்பது. இவர்களை படிப்பதற்கு மரபார்ந்த வாசிப்பு முறை நமக்கு உதவாது. நாம் நம்மை வேறொரு தளத்தில் கொண்டு போய் வாசிக்கும் போது மட்டுமே டெல்யூஸ்-கட்டாரியை விளங்கிக் கொள்ள முடியும். அவர்கள் இவ்வுலகத்தையே Mechanical Engineering அணுகுமுறையில் அணுகினார்கள். உடன் எபது கூட பல உறுப்புக்களால் ஆனது என்றும் அவை சில இடங்களில் தொடுக்கப்பட்டுள்ளன சில இடங்களில் தொடுப்பற்றி இயக்கமுறுகின்றன என்பதாகக் கூறினார்கள். அதாவது சிந்திக்கக்கூடிய ரோபோ போன்று மனிதனை அணுகியிருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. இதன் மூலம் வித்தியாசம் என்பதனூடாக அணுகினார்கள். இதன் காரணமாகத்தான் ஆண் எதிர் ஆணற்ற தன்மை என்ற பிராய்டின் கருத்தியலை பேணியவர் லக்கான் என்று பிற்காலப் பெண்ணியர்கள் லக்கான் மீது விமர்சனம் செய்த போதிலும் அவர்களால் பல இடங்களிலும் டெல்யூஸ்-கட்டாரியை ஆதரிக்க முடிந்திருக்கின்றது.
Deleuze and Guattari's concept of sexuality is not limited to the connectivity of just male and female gender roles, but by the multi-gendered flows that a "hundred thousand" Desiring-Machines create within their connected universe.

ஜூடித் பட்லர் இனது நேர்காணல் ஒன்றை ஒருவருடத்திற்கு முன் வாசித்திருந்தேன். அது பல புதிய வெளிகளை எனக்குத் திறந்து விட்டிருந்தது. துவித எதிர் இருமை இயல்பை வலியுறுத்தும் பால்வேறுபாட்டை அவர் தூக்கிக்கடாசுவது மாத்திரமல்லாது அதற்கு இடைப்பட்ட பல்வேறு சாத்தியங்களைப் பற்றிப் பேசுகின்றார். விஞ்ஞானம் அவற்றை இரண்டாக மாத்திரம் தானே ஏற்றுக்கொள்கின்றது என்பதைக் கூட அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 'ஆண்குறி' மற்றும் 'ஆண்குறி அற்ற தன்மை' என்பதை வைத்துக் கொண்டு இன்பம் துய்ப்பிற்கான பாலியல் மன எழுச்சியை வரையறுத்துவிட முடியாது. /'பால்' என்பதை உயிரியல் ரீதியான வேறுபாடு மட்டுமே என்ற பார்வைக்குள் வைத்து பாலியல் என்பது நிகழ்த்துகை சாரப்பட்டதே என்ற கோட்பாட்டினடிப்படையில் நகருபவர். பால் சம்பந்தப்பட்ட இயல்புகளனைத்தும் சமூகத்தால் சுமத்தப்பட்டவை- கட்டமைக்கப்பட்டவை- என்பதாக தமது கருத்தியலை வளர்த்துச் செல்பவர். உதாரணமாக ஆணுக்கு 0 என்ற இலக்கத்தையும் பெண்ணுக்கு 1 என்ற இலக்கத்தையும் வளங்கும் போது, இடைப்பட்ட வெளியில் உள்ள முடிவிலி சாத்தியங்களையும் இருப்புக்களையும் கொண்டுள்ள தசமதான எண்களின் இருப்பினூடே இயல்புகள் மாறுபட முடியும் என்பதே இவர்களது வாதம். { 0.123, 0.199, 0.589, 0.999 } இன்னும், அவற்றின் இருப்புகள் கூட நிலையானதல்ல, அவை இயங்குகைக்கு உட்பட்டவை தமது இருப்புக்களை தானம் பற்றிய இருப்பு சார்ந்து மாற்றக்கூடியவை என்பதாக இக்கருத்தியல் மேலும் வளர்ச்சி பெறுகின்றது. இது பிளவுறும் தன்னிலைகள் சார் கருத்துடன் தொடர்புடையது. இங்கே ஓரினப்பாலுறவாளர்கள் தமக்குள் ஆணாகவும் பெண்ணாகவும் உருவகப்படுத்தல் என்பது சமூகம் நிகழ்த்தும் 'பாலியல்பு' தொடர்பான கட்டமைக்கப்பட்ட வன்முறையின்பாற்பட்டவையே../ என நான் முன்பொருமுறை எழுதியது ஞாபகம் வருகின்றது. இவை கருத்தியல் ரீதியானதாக இருப்பினும் - சமூகம் மற்றும் பால்வேறுபாடுகள் என்பதே கருத்தியல் ரீதியான கட்டுமானம் என்ற நம்பிக்கையில் இருந்து மட்டும் வரும் விடயம் அல்ல. கருத்தியல் ரீதியான மாற்றங்களில் உயிரியல் ரீதியான மாற்றங்களைச் சாத்தியப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஜூடித் பட்லர் அளித்துச் செல்கின்றார். (அரசியல் போராட்டங்களுக்குச் சமாந்தரமாகக் கூட இவற்றை வைத்துப் பார்க்க முடியும்.) ஜூடித் பட்லரைப் பொறுத்தவரை பெண் பாலியல் இன்பம் என்ற பெரும் தொடைக்குள்ளான உப தொடையே ஆணின் பாலியல் இன்பம் எனக்குறிப்பிடுகின்றார். பெண்ணினது பாலியல் இன்பம் என்பது அளவற்றுப் பெருகுவது. சுழற்சித் தன்மை மிக்கது. ஆணின் பாலியல் இன்பம் அவ்வாறனதல்ல. ஆரம்பம்-உச்சம்-முடிவு என்ற வகைமாதிரிக்குள் கட்டுப்பட்டது. பெண்ணின் பாலியல் இன்பத்தைத் திருப்தி செய்ய முடியாத நிலையில் ஆணால் வழங்கப்பட்டதே அல்லது திணிக்கப்பட்டதே தற்போதைய உறவுநிலைகளும் பாலியல் இன்பம் தொடர்பான கருத்தியல் கட்டுமானங்களும். ஜூடித் பட்லரைப் பொறுத்தவரை அவர் ஓரினச்சேர்க்கையாளர்களில் ஆண-ஆண் என்பதை அவ்வளவாக கவனத்தில் எடுக்கவில்லை. பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் அடையும் இனபமே பாலியர் சார்ந்து இவ்வுலகத்தில் அடையப்படும் அதி உச்ச இன்பம் என்பது அவரது கருத்தின் சாராம்சம்.

ஜூடித் பட்லரின் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் Brown University ஐச் சேர்ந்த மூலக்கூறு, உயிரணுவியல் மற்றும் உயிர் இராசாயனத்துறைச் சேர்ந்த Anne Fausto-Sterling இனது Sexing the Body: Gender Politics and the Construction of Sexuality அமைகின்றது. ஜூடித் பட்லர் போன்று அளவற்றுப் பெருகும் பால்வேறுபாட்டு நிலகளைப் போலன்றி ஆனால் ஜூடித் பட்லரின் கருத்தியலுக்குச் சாதகமாகப் பேசுகின்றார் Anne Fausto-Sterling. மராபார்ந்த முறையில் அமைந்த ஆண எதிர் பெண் வேறுபாடுகளை மறுத்து ஐந்து விதமான பாலியல் நிலைகள் பற்றிப் பேசுகின்றார் Anne Fausto-Sterling.

The treatment of intersexuality in this century provides a dear example of what the French historian Michel Foucault has called biopower. The knowledge developed in biochemistry, embryology, endocrinology, psychology and surgery has enabled physicians to control the very sex of the human body. The multiple contradictions in that kind of power call for some scrutiny. On the one hand, the medical "management" of intersexuality certainly developed as part of an attempt to free people from perceived psychological pain (though whether the pain was the patient's, the parents' or the physician's is unclear). And if one accepts the assumption that in a sex-divided culture people can realize their greatest potential for happiness and productivity only if they are sure they belong to one of only two acknowledged sexes, modern medicine has been extremely successful.

மேலதிக வாசிப்பிற்கு - The Five Sexes: Why Male and Female Are Not Enough

உண்மையில் பாலியலையும் அது சார் உளவியலையும் பற்றிப் சமூகத்தில் பரந்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பு என்னிடம் உண்டு. ஆனால், எமது சமூகப்பரப்பில் அது மிகத்தவறாக விளங்கப்படும் ஆபத்து இருக்கின்றது. எனது உரையாடலை மீள்வாசிப்புச் செய்யும் மேற்படி கட்டுரையில் சில போக்குகளை மேலோட்டமாக குறிப்பிட்டுள்ளேன். இன்னும் மேலதிகமான விடயங்களை எதிர்காலத்தில் இது தொடர்பாக எழுத நேரின் குறிப்பிட முடியும்.

ஏற்கனவே உரையாடலில் குறிப்பிட்ட விடயத்தையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

* * * * * * *

சாதாரண சமூகச்சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை பிராய்டின் உளவியல் வரையான உரையாடலை எதிர்பார்த்து நிற்கின்றது. சமூகம் மீதான பிராய்டின் உளவியல் பார்வை என்பது தனியே பாலியலை மையப்படுத்தி முன்வைக்கப்பட்டதென்ற குற்றச்சாட்டு அதற்கு பின்வந்த எத்தனையோ உளவியலாளர்களால் வைக்கப்பட்டுவிட்டது. பூக்கோவும் அதற்கு பின்னான டிலீஸ்-கட்டாரியும் அதைப் புரட்டி போட்டுவிட்டனர்.

இன்னும் பெண்ணியம் சார்ந்து அதன் குறைபாடுகள் பெண்ணியர்களால் காரசாரமாக விவாதிக்கப்பட்டுவிட்டது. ஆணாதிக்க உலகு சார்ந்தே அவரது பார்வை முன்வைக்கப்படது. அதுவும் இன்று பலவகைகளில் மாற்றம் பெற்றுவிட்டது. இன்னும் சமூகம், கலாச்சாரம் சார்ந்து இதன் பார்வைகள் வெவ்வேறு பரிமாணம் எடுக்கக்கூடியவை. மேற்கில் வளரும் குழந்தையையும் ஆசியாவின் ஏதோ ஒரு பகுதியில் வளரும் குழந்தையையும் ஒரே பார்வைக்கு உட்படுத்திப் பார்க்க முடியாது. இருவகைத் தளங்களும் பார்வை நோக்கில் தாம் சமூகம் சார்ந்து இயங்கும் சுழற்சியின் மையப்புள்ளியினது 'அளவை' களை முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும். மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் எனும் பார்வை வீச்சுக்குள்ளேயே இக்கட்டுரையை வகைப்படுத்திவிட முடியும். ஆயினும் பின்னூட்டங்கள் அவ்வீச்செல்லை தாண்டி ஈடிபஸ் மனச்சிக்கல் வரை வந்துவிட்டது. மேலே குறிப்பிட்டது போல பிராய்டின் உளவியல் பார்வைகள் பாலியலை மையப்படுத்தி துவித இருமைகளுக்குள் ஆட்பட்டவை. ஆண், பெண் என இரு புள்ளிகள் பற்றி அலைவுறுபவை. பிற்குறிப்பில் எக்ஸ்-குழு சொன்னது போல உலகம் அதை தாண்டி வெகு தூரம் வந்தாயிற்று.
இதில் நான் சொல்ல வந்தது ஈடிபஸ் சிக்கலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் சார்ந்தவை. ஈடிபஸ் என்ற பெயர் வரக்காரணமானதே சுவாரசியமான? கதைதான். ஈடிபஸ் கிரேக்க மன்னனாக இருந்தவன். இவன் தாயின் மீது காதல் கொண்டு தாயுடனான உறவின் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவன். பின் தகப்பனை கொன்று அரியாசனத்தை கைப்பற்றிக்கொண்டவன். அவனது பெயரை வைத்தே பின்னர் பிராய்டால் உருவகப்படுத்தப்பட்ட மனச்சிக்கல் அழைக்கப்பட்டது. சேக்ஸ்பியரின் புகழ்பெற்ற 'ஹம்லெட்' இனது கதையும் இவ் ஈடிபஸ் சிக்கலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது.
....This paper shows how the Oedipus complex theory can be applied to Hamlet, the main character of "Hamlet" by William Shakespeare and the issues that he faces concerning his mother and girlfriend. The paper shows that the intense rage that Hamlet projects onto Queen Gertrude (his mother), Ophelia (his girlfriend) and women in general compiles this version of Oedipus complex triangle. Hamlet finds himself strangely drawn to the act of matricide whether or not he blatantly expresses it, because he partially blames his mother for the circumstances leading up to his father's death, although he has a strange sexual affinity towards her. The paper describes how Hamlet releases his frustration about his father's death indirectly on Ophelia while raising to the surface strong undercurrents of an Oedipal complex with Gertrude as its center...
விளாதிமிர் நபகோவின் 'லொலிட்டா' எனும் புகழ்பெற்ற நாவல் 'எலக்ற்ரா' மனச்சிக்கலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே. தகப்பன் வயதை ஒத்த ஆடவனுடன் காதலுறும் சிறிய பெண் பற்றியது. இவ்வாறான மனச்சிக்கலை? கொண்டவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள். இன்னும் எல்லோருமே ஏதோவொருவகையில் இச்சிக்கலால் பீடிக்கப்பட்டவர்களே. அவரவர் பொறுத்து அதன் ஆளுகை வீதத்தில் மாறுபடுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்னும் ஜேம்ஸ் ஜோய்ஸ் ஐ இவ்விரு சிக்கல்களும் வாய்க்கப்பெற்றவரென சொல்வர். ஜேம்ஸ் ஜோய்ஸ் தனது தாயாருடன் உறவைப்பகிர்ந்து கொண்டவர் எனக்கூறப்படுகிறது. அதே நேரம் பிற்காலத்தில் தனது மகளுடனும் உறவைப்பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. சமப்பாலுறவுகள் போன்றே வரலாற்றின் நெடிய வழியெங்கும் புறநடையாக ஈடிபஸ்-எலக்ற்ரா சிக்கல்களும் நடைபோட்டு வந்துள்ளன. ஆயினும் சமப்பாலுறவுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் போன்று இவ்வகைமாதிரிகள் பெறவில்லையென்றே கூறவேண்டும். அதற்கு சிறுவர் உரிமை போன்ற விடயங்கள் காரணங்களாக இருந்து இருக்கலாம். லொலிட்டா போன்றவை பிற்காலத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அவ்வகையில் china town, American Beauty போன்ற திரைப்படங்களும் இம்மையக்கருத்தில் வெளிப்பட்டன. அமெரிக்கன் பியூட்டி மனச்சிகலுக்கு உள்ளான சமுதாயமாகவே ஈடிபஸ் மனச்சிக்கல் சமூகத்தை காட்ட முயற்சித்தது. தனது தகப்பனிடம் காதல் வயப்படும் நண்பியையும் அவளையும் சுற்றிப் பின்னப்பட்ட கதையே அது. நமது தமிழ்ச்சூழலிலும் அது பற்றிய படைப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சாரு நிவேதிதாவின் உன்னத சங்கீதம் சிறுமியுடனான நடுத்தரவயது ஆணின் உறவை நியாயப்படுத்திச் செல்கின்றது. அவ்வாறே சோபாசக்தியின் 'ம்' கூட, (அது அரசியல் நாவல் என்ற போதிலும்) ஏதோ ஒரு வகையில் எலக்ற்ரா சிக்கலை நியாயப்படுத்தியே தமது பார்வையை முன்வைக்கின்றன. (கவனிக்க- வன்புணர்வு அல்ல.) ஆயினும் அவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்ள தவறவில்லை. அதை பற்றிய விவாதங்கள் இன்னும் தேவையானவையே. சமூகச்சூழலில், நியாயப்படுத்தல்கள் கொண்டுவரும் காரணங்கள் சிறுவர் மீதான பாலியல் வன்முறை அல்லது நிர்ப்பந்தத்திற்கான ஏதுவாய்களாக இருக்கமுடியும் என்பது உண்மைதான். முதிர்ச்சியடையாத சிறுவர் பாத்திரத்தை கதைக்களன் ஆக்குவது, சிறுவர் உரிமை தொடர்பான பிரக்ஞை உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.
சோபாசக்தியின் 'ம்' இல் வரும் இக்கருதுகோள் தொடர்பான விடயத்திற்கு பொடிச்சி சொல்லும் காரணங்கள் ஏற்புடையனவே...
//...குழந்தையை புணர்ந்தவனை பெடோபைல் (pedophile) எனச் சட்டம் தரம் பிரிக்கிறது; அவனும் இச் சமூகத்தின் victim என்பதாக ஷோபாசக்தி. அவனுக்கு, வாழ்நாளெல்லாம் தேடிப் பெறாத ‘பரிசுத்தமான காதல்’ அவனது குழந்தையிடம்தான் இருக்கிறது. அவன் நிறைய சொல்கிறான். சொல்லிக்கொண்டேட இருக்கிறான். சிறுமி தனது பக்கத்தைச் பேசவே இல்லை. ''அவளது இருஇதழ்களின் நடுவே தோல் வளர்ந்தது”
வன்முறையாளரின் நோக்கிலிருந்து இந்த பிரதி பேசுகிறது; -இதில், முதிர்ச்சியற்ற, பரிசுத்தமானவளாய் இருக்கிற, பிரதியாசிரியரால், பேசுவதற்கு எவ் வார்த்தையும் அனுமதிக்கப்படாத, அந்த சிறுமியுடைய பக்கத்தை அவள்தானே சொல்ல முடியும்? அந்தப் பக்கத்திற்கான பதில், பிரதியில் அவளது மெளனம் மட்டுமே...//

சிறுமி என்னும் முறையில் அது அத்துடன் நிற்க,
இன்றைய தமிழ்ச்சூழலில் ஈடிபஸ் சிக்கல்/ இலக்கியம் என்பது பேசப்படாத பொருளாகவே இருக்கின்றது. (காமலோகம் தவிர்த்து- இளைய ஆண்களால் எழுதப்படும் பாலியல்பிரதிகளில் பெரும்பாலானவை நடுத்தர வயதுப்பெண்களுடனான உற்வைப் பேசுபவையாகவே இருக்கின்றன. இலக்கிய தரம் என்ற அளவில் அவற்றிற்கு ஏற்படும் தோல்விகளால் அவை வெறும் 'களவாக' வாசிக்கும் பிரதி வகைக்குள்ளேயே நின்றுவிடுகின்றன. இன்னும் ஷகீலா போன்ற நடுத்தரவயதுப்பெண்களை வைத்து திரைப்படங்கள் தயாரிப்பவர்களது முக்கியமான இலக்கு பதினம வயது பையன்களே. தமிழ்சமூகம் ஈடிபஸ் சிக்கல் வகைமாதிரியில் எவ்வளவு தூரம் தன்னை ஆட்படுத்திக்கொண்டுள்ளது என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா என்ன?) தமிழ்ச்சூழலில் பெண்ணியம் பேசுவோர் கூட பெண்ணை புனிதப்படுத்தி/ பெண்ணுடலைக் கொண்டாடும் வகைமாதிரியில் இருந்து வெளியில் வருவதாக தெரியவில்லை. (ஒரு சிலரைத் தவிர..) ஆக, இவ்வகை பிரதிகள் தமிழுக்கு இப்போது கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஈடிபஸ்- எலக்ற்ரா என இருவகை மாதிரியிலும் தமிழில் பிரதிகளைப் பெறக்கூடியதாக இருக்கின்ற போதும் அவை அனைத்தும் ஆண்களாலேயே எழுதப்பட்டுள்ளன. இது தொடர்பான பெண்ணின் பார்வை என்பது தமிழில் இல்லை என்றே சொல்லலாம். பெண்ணியம் சார்ந்து இதன் முக்கியத்துவம் என்னவென்றால், 'ஆண்' மீதான எதிர்ப்புணர்வு பெண்ணைக் 'கொண்டாடும்' இயல்புடன் வைக்கப்படுகின்றதென்பதற்கு அப்பால், ஈடிபஸ் மனச்சிக்கல் மீதான பார்வையற்ற நிலைமை ஏதோ ஒரு விதத்தில் ஆணதிகாரம் தன்னை 'பெண்' மீது நிறுவி நிற்கின்றதென கொள்ளமுடியும். சமப்பாலுறவு எனும் பார்வைக்கு முதல் 'ஆண்' மீதான மறுப்பு என்பதை நிறுவும் வழி பெண்களால் புனையப்படும் ஈடிபஸ் சிக்கல் வகைமாதிரியான பிரதிகளே. அது அடக்கும் 'ஆணை' மறுத்து அடங்கும் 'ஆணை' விரும்பி நிற்பது. ஆயினும் அவ்வகைத்தெரிவுகளுக்கு அப்பால் பெண்மை சமப்பாலுறவை தெரிவு செய்கின்றது. அதன்மூலம் தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கின்றது. ஈடிபஸ் 'மனசிக்கல்?' தொடர்பான விவாதங்கள் இன்னும் எமக்கு அவசியமானவையே. ஆயினும்,
//..ஆண், பெண் என்ற வித்தியாசம் கடந்த சூழலை நோக்கிய சமூகப்பார்வையில் மேற்படி கட்டுரை தனது மதிப்பை இழக்கின்றது. ஆரம்ப பெண்ணியத்துக்கு பின்பான பெண் மீதானஆணதிகாரம் ஒரு கட்டத்தில் பெண்ணை 'கொண்டாடுவதன்' மூலம் நிலைநிறுத்தப்பட்டது. இன்றைய உலகு அதை தாண்டிய பரிமாறும் ஆண், பெண் இயல்புகள் உள்ள வெறுமனே பௌதீகஉடல் சார் ஆண், பெண் வேறுபாடு மட்டுமேயென்ற தளத்தில் தன்னை தகவமைத்துகொள்ள முற்படுகின்றது. ஆயினும் இன்னும் ஆணாதிக்க கட்டமைப்பும், ஆண், பெண் என்ற வித்தியாசமான அணுகுமுறையும் பெரும்பாலும் நிலைகொண்டுள்ள இலங்கை போன்ற சமூகத்தில் இக்கட்டுரையின் தேவையை நிராகரிக்க முடியாது..//
என்பது உண்மையே...

Friday, March 13, 2009

உரையாடல் - 4 (x-group, சுதன், சேகர்) - [[மீள்வாசிப்பு]]



இவ்வுரையாடல் x-group என்னும் தளத்தில் சிறுவர் இராணுவம் என்னும் பதிவில் இடம்பெற்றது.

If I do not forgive my enemy, he has power over me.
If I cannot forgive, we cannot move forrward.
My enemy and I both need forgiveness and both need to change.

'சிறுவர் ராணுவம்' என்னும் கருத்தியல் என்பது முற்றுமுழுதாக மேற்கின் சமூக ஓட்ட அனுபவத்தின் வெளிப்பாடு எனக்கூற முடியும். மேற்கு வெறுப்பாளர்கள் போல் இக்கருத்தியலை முழுமையாக நிராகரிக்கும் எண்ணம் எமக்கு எப்போதும் இருந்ததில்லை. நாம் அவ்வகையான கருத்தியலை எமக்கான தளமாகக் கட்டமைத்ததும் இல்லை. இன்று மூன்றாமுலக நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் பல சிறுவர் ராணுவங்களையும் மனித உரிமை மீறல்களையும் காட்டி கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. அதே வேளையில் மேற்குலகின் வர்த்தக நலன் பொருந்திய அரசாங்ககளின் மேலாதிக்கம் காரணமாக உள்நாட்டுத் தேசிய சக்திகளால் அக்கருத்தியல் முழுமையாக நிராகரிக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

நாம் எப்போதும் இருவகைப்பட்ட கருத்தியல் போக்குகளுக்கு இடையில் அவற்றின் சாதக நிலமைகளை ஆராய்ந்தவாறு எமது கருத்தியலை அதன் நிலையாமை அம்சத்துடன் கட்டமைத்து வருவது புதிய விடயம் அல்ல. மார்க்சியர்களது போதாமையுடன் ஒரேயடியாக மேற்கின் வலதுசாரியத்துக்குள்ளும் சமூகத்தின் பாதகமான அம்சங்களுடனான தாராளவாதத்திற்குள்ளும் மூழ்கிக்கிடப்பவர்களுக்கு எம்மிடம் செய்திகள் இல்லை. அவர்கள் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையோ அல்லது அவர்களது துயரத்தையோ எப்போதும் விளங்கிக் கொள்ளப் போவதில்லை. அதேநேரம் தொழிலாளி வர்க்கத்தின் உள்ளார்ந்த துயரங்களையோ அல்லது அவர்களது பொருளாதார மீட்சியையோ கிஞ்சித்தும் உணர்ந்து கொள்ளாமல் மார்க்சிய பானத்தை அருந்திப் போதையேறிக் கிடக்கும் நடுத்தரவர்க்க மார்க்சிய வெறியர்களுக்கும் எம்மிடம் எடுத்துக் கொள்ள எதுவித கருத்துக்களும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களது கருத்தியலை வாழ வைக்கிறோம் பேர்வழி என்று மேடைகளில் அவர்கள் வாழவைப்பதை எங்களுக்கு முன்னரே பல தலைமுறைகள் பார்த்தாகிவிட்டது. சிறுவர் ராணுவம் என்னும் கருத்தியல் பலராலும் பல புள்ளிகளில் இருந்து நோக்கப்பட்டு பல விதங்களில் வாதாடப்படலாம். இதற்காகவே இவ்விடயத்தைச் சொல்ல வேண்டி இருந்தது.

தற்போதைய 'சிறுவர் ராணுவம்' பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் நாம் சமூகக்கட்டமைப்புக்களது தோற்றம் வளர்ச்சி பற்றிப் பார்ப்பது அவசியமானது. மனிதனது ஆரம்பகாலங்களையும் சமூகக்குழுக்களது வளர்ச்சியையும் நாம் இவ்விடத்தில் பார்க்க வேண்டியது அவசியமானது. உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதை மட்டும் நொக்கமாகக் சமூகக்குழுக்களில் சிறுவர் ராணிவத்தினர் இருந்தே வந்திருக்கின்றார்கள். அங்கே சிறுவர் ராணுவம் என்ற பதம் பாதிக்கபடவில்லை. அவர்களது உணவுத்தேவை பூர்த்தி செய்யப்படுவதற்குமப்பால் தமது குழுவைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு ஆயுதங்களும் வன்முறையும் தேவைப்பட்டிருக்கின்றது. சிறிய சமூகக்குழுக்களின் இருப்பிற்கு வன்முறை தேவைப்பட்ட போது அங்கே சிறுவர்கள் பாவிக்கப்பட்டே வந்திருக்கின்றனர். இங்கே, பொருளாதார அடிப்படையிலான வர்க்கப் போக்குக் காணப்படவில்லை. அதன் பின்பு பொருளாதார அடிப்படையிலான சமூகப் போக்கு நிகழத் தொடங்கியது. அங்கே, பலம்பெற்றவர்கள் மேலும் பலம் பெறவும் தமது அதிகாரத்தைக் தக்க வைப்பதற்கு வன்முறையைப் பிரயோகித்தார்கள். அவர்களது தேவையை தீர்த்து வைப்பதற்கு வயதெல்லை பார்க்கப்படவில்லை.

இப்போக்கு காலனித்துவ எதிர்ப்புப் போராட்ட காலங்கள் வரை நீடித்தே உள்ளது. பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்ற போது கூட சிறுவர் ராணுவம் பயன்படுத்தப்பட்டே வந்திருக்கின்றது. இன்றுவரை மேற்குல நாடுகள் 16 வயதிற்குப் பின்னரே ராணுவப்பயிற்சியை வழங்கத் தொடங்கிவிடுகின்றன. (18 வயதிற்குப் பின்னர் போரில் ஈடுபடுத்தினாலும் 16 வயதிலேயே ராணுவப்பயிற்சி தொடங்கி விடுகின்றது.) ஒடுக்கப்படும் சமூகங்களைப் பொறுத்தவரை தாய் தந்தையரை அரச இயந்திர வன்முறைக்கு இழந்தவர்கள் இயல்பாகவே போராளிக்குழுக்களுடன் வேறு போக்கிடம் இல்லாமலும் பழிவாங்கும் உணர்வுடனும் வன்முறைக் குழுக்களுடம் சேர்ந்து கொள்கின்றனர். இன்னொரு பக்கத்தில் போராளிக்குழுக்களால் பலாத்தகாரமாக இணைத்துக் கொள்ளப்படுதல் என்னும் செயற்பாடு. இம்மூன்று விடயங்களுக்குள் வைத்து சிறுவர் ராணுவம் பற்றி உரையாட முடியும்.

முதலாம் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் சிறுவர் ராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் பின்பும் காலனியாதிக்கத்திற்கு எதிரான போர்களிலும் சிறுவர் ராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அவ்வாறே சோசலிசப் புரட்சிகளின் போதும் சிறுவர் ராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தேசம் அல்லது நாடு என்ற வரைமுறைகளுக்குட்பட்ட பரப்புகள் சிறுவர் போராளிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் வேறு. அதே நேரம் தமது இருப்பே கேள்விக்குறியாகும் போது முழுச்சமூகமுமே அதற்கெதிராகப் போராடும் போது சிறுவர் ராணுவம் என்ற கருத்துத் தகர்ந்து போகின்றது. அங்கே தனியே உடல்கள் வெறும் இருப்பிற்கான ஆயுதங்களாக மாறிப்போகின்றன. பாலஸ்தீனத்திற்குச் சென்று கல்லெறியும் சிறுவனிடம் கல்லெறியாதே என்ற உபதேசத்தைக் கூறும் தைரியம் நமது முன்னாள் குழந்தைப் போராளியும் இந்நாள் ஜனநாயகவாதியுமான நண்பர்களிடம் மட்டுமே உண்டு. இரு அரசுகளுக்கிடையிலான போர்கள் வெவ்வேறு காரணங்களுக்கானவை. அங்கே இராணுவ அமைப்பு என்பதே மக்களுக்கு அவசியமானதாகவோ அல்லது கட்டாயமானதாகவோ இருக்கும் என்ற அவசியமுமில்லை. ஆனால், மக்கள் போராட்டம் இடம்பெறும் தருணங்களில் வயதெல்லைகள் மீறப்படுவதை நாம் வரலாறு நெடுகிலும் பார்த்தே வந்திருக்கின்றோம். இவ்விடயத்தை இவ்விடத்தில் நிறுத்துகின்றேன்.

இவ்விடத்தில் தமிழ்ச்சூழலில் சிறுவர் போராளிகள் பற்றி இருக்கும் மூன்று பக்கசர்பான வாதங்களையும் நாம் பார்த்துவிடுதல் முக்கியமானது.
1.
புலியெதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் சிறுவர் ராணுவம் என்ற கருத்தியலை முன்னிறுத்துகின்றார்கள். சிறுவர் ராணுவம் என்பத்ற்குப் பின்னால் உள்ள ஒரு பக்கத்தை மட்டும் தமது அரசியலுக்கு ஏற்றபடி எடுத்துக் கொள்கின்றார்கள். அதையே தீவிரமாக வலியுறுத்தவும் செய்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் சொல்லும் அதே வசனங்களையும் கருத்தியலையும் கிளிப்பிள்ளை போன்று பின்பற்றுகின்றார்கள். மனித உரிமைகள் பற்றிய கருத்தியல்களின் கீழ் இவர்களது கருத்தியல் வலுப்பெறுகின்றது.
2.
புலி ஆதரவுக்கருத்தாளர்கள் கண்மூடித்தனமாக தேசவிடுதலையின் பெயரால் சிறுவர் ராணுவம் என்பதன் பாதகநிலை பற்றிய எதுவித பிரக்ஞையுமற்று ஆதரிக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமது பிள்ளைகளை மிகுந்த பணச்செலவுகளுடம் கல்வி கற்க வைக்கின்றார்கள். அவர்களது பிள்ளைகள் குழந்தைப் போராளியானால் அதை விரும்பாத குழுவினர் இவ்வகைக்குள் வருகின்றார்கள்.
3.
மூன்றாவதாக நடைமுறை பற்றிய எதுவித தெளிவுகளுமற்ற நடுநிலமையை கருத்தியலில் வலியுறுத்தியவாறு நடைமுறையை விட்டு விலக்கி கருத்தியலை அன்னியமாக்கி கற்பனைவாதம் பேசுவோர். இவர்கள் இருதரப்பையும் எதிர்பதாகக் கூறிச் சுலபமாக கருத்தியல் கோட்டையக் கட்டிக் கொண்டிருப்பார்கள். இவ்வகைக்குள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல தரப்பினர் வருவார்கள். அவர்கள் பல பெயர்களால் அழைக்கப்படுவார்கள். சில சிவப்பு நிற உள்ளாடை அணிவார்கள். சிலர் கறுப்பு நிற மேலாடை அணிவார்கள். அவர்களது நோக்கம் கருத்தியல் ரீதியாக தம்மை யாரும் தாக்கிவிடாத பிரதிகளை ஏற்படுத்துவது மட்டுமே. நடைமுறை பற்றி எதுவித பிரக்ஞையுமற்று வெறும் கற்பனைத்தளத்தில் இய்ங்குபவர்கள்.
உதாரணமாக - மேற்குலகு தனது பொருளாதார நலன்களை வலுப்படுத்துவத்ற்கு மட்டுமே சிறுவர் ராணுவம் என்ற கருத்தியலைப் பயன்படுத்துகின்றது என்றும் மேற்குலகினது கருத்தியலை முற்றுமுழுதாக எதிர்க்க வேண்டும் என்றும் அடிக்கடி கூறிக்கொண்டிருப்போர்.

இங்கே மேற்கூறிய சிறுவர் ராணுவம் என்ற கருத்தை விட மேற்கூறிய மூன்று தரப்பினருக்கும் அவரவர் அரசியலே முக்கியமாகின்றது. நாம் தெளிவாகக்கீறிய அரசியல் வெளிகளுக்குள் நின்று மாத்திரம் இவ்விடயத்தைப் பார்த்துவிட முடியாது. தனியான தத்துவ ரீதியான பார்வைகளோ அல்லது தனியே மனித உரிமைகளை மையமா வைத்து அணுகும் பார்வைகளோ அல்லது தனியே அனைத்தையும் பொருளாதார அடிப்படையில் வைத்து அணுகும் பார்வைகளோ இவ்வுலகின் போக்கை உணர்ந்து கொள்ள நமக்கு உதவப்போவதில்லை. பலதளங்களிலும் பல்வேறு கோணங்களிலுமான பன்முகப்பார்வையே எமக்கு இக்காலத்தில் மிக முக்கியமானது. அதுவே எமக்கு இயக்கத்தைச் சாத்தியப்படுத்த உதவும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இங்கே, நாம் மீண்டும் முன்னர் கூறிய விடயத்திற்குப் போகின்றோம். சிறுவர் ராணுவங்கள் எங்கே உருவாகின்றனர் அல்லது எங்கே உருவாக்கப்படுகின்றனர். நான் முன்னரே கூறியது போன்று சிறுவர் ராணுவங்களை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்க முடியும்.
1.
முறையான அரச இயந்திரத்தின் அங்கமான ராணுவ அமைப்பு. இந்நிலையை முன்வைத்தே ஐக்கிய நாடுகள் சபையினது பிரகடனங்களுக்கான ஆரம்பப்புள்ளி தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. இவ்விடத்தில் மனித உரிமைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த சிறுவர் உரிமைகள் தொடர்பான விடயங்களை இணைத்துப் பார்க்க முடியும். தனது வாழ்க்கையின் போக்கைத் திர்மானிப்பதற்கான முடிவை எடுக்க முடியாத வயதென்ற கருத்தும் அதற்கான ஆரம்பத் தயார்ப்படுத்தல்களுக்கான கருத்தும் இவ்விடத்தில் முக்கியமாகவே படுகின்றன. இவ்விடத்தில் ஐக்கிய நாடுகள் சபையினது பிரகடனத்தின் தேவையௌம் சாதகநிலையையும் பற்றி நாம் நிசயமாகப் பேசியே ஆகவேண்டும்.
2.
போராளிக்குழுக்களுடன் தாம் விரும்பி இணைந்து கொள்வோர். இவ்விடத்தில் இவ்வகைக்குள் அடங்குவோரைப் பலவிதமாகப் பார்க்க முடியும். ஆயினும் முக்கியமாக இரண்டுவிதமாகப் பார்க்க முடியும்.
அ) வேறு போக்கிடமற்றதும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கொண்டதுமான பார்வை. அதுமட்டுமல்லாது தான் சார்ந்த சமூகக்குழு ஒன்றுக்கான போராட்டத்தில் வயதெல்லைகள் தாண்டிய போராட்ட உணர்வு. இதனை நாம் பல இடங்களிலும் பார்க்க முடியும்.
ஆ) அடிப்படைவாதக் கருத்தியல்களால் உந்திவிடப்பட்ட சமூகத்தில் இருந்து தோன்றும் சிறுவர் போராளிகள் பற்றிய பார்வை. இங்கே கருத்தியல்கள் அவர்களது சுய விருப்பதைத் தீர்மானிக்கின்றன. மத, இன, தேசியக் கருத்தியல்கள் தமக்கான சாதக வெளிகளைக் கடந்து வன்மத்தை உற்பத்தி செய்யும் போது நாம் இவ்வகையான நிலைகளைக் காண முடியும். வன்முறை ஊக்குவிப்புச் சமூகத்தை மட்டுமே விளைவாக்ககூடிய இவ்வகையான சுயவிருப்பு சிறுவர் போராளிகள் தொடர்பாகவும் நமக்கு மிகுந்த கவனம் தேவை எனவே நினைக்கின்றேன்.
3.
போராளிக்குழுக்களால் பலாத்தகாரமாக இணைக்கப்படும் சிறுவர்கள். சிறுவர்களது சிறுபிராயம் தொலைவது மட்டுமல்லாது சமூகத்தைப் பற்றிய பார்வையையே இது மாற்றிவிடுகின்றது.

சிறுவர் ராணுவம் என்பது முற்றுமுழுதாக கண்மூடித்தனமாக எதிர்க்கப்பட வேண்டியது என்ற கருத்தியல் எமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. அதன் வயதெல்லையும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மட்டும் அல்லது அதன் முழுமையான எதிர்ப்பில் இருந்து மட்டுமே எமது சிந்தனைகள் உருவாகின்றன என்பதே சோகம். இது சாதாரண வாசகர்களுக்கானதல்ல தமிழ்ச்சுழலில் இயங்கும் அறிவுஜீவிகள் எனக்கூறப்படுவோருக்கும் பொருந்தக்கூடியது. குறித்த சம்பவத்திற்கு குறித்த நபர் எவ்வாறு கட்டுரை எழுத்துவார் என்பது இன்று பல இளையோருக்கு முன்னரே தெரிந்து விடுகின்றது.

இவ்விடத்தில் ஒரு விடயம் கட்டாயம் கூறப்படவேண்டும். சிறுவர் பாலியல் இற்கும் சிறுவர் பாலியல் விபச்சாரம் என்பதற்கும் என்ன வித்தியாசம்? மேற்கு நாடுகளில் 15 வயது ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ 21 வயது ஆணோ பெண்ணோ உறவு வைத்திருப்பின் பாரதூரமான குற்றமாக கரும் மனநிலை ஏன் 12 வயது ஆணோ பெண்ணோ அதே வயது ஆணோ பெண்ணுடனோ உறவு வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள விழைகின்றது? சிறுவர்களுக்கிடையிலான பாலியல் தேவை என்பது அவரவர் வயதினருடன் பகிரப்படக்கூடியது என்ற கருத்தை இன்றைய உளவியலாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அது மட்டுமல்லாது ஒருவரது ஆரோக்கியமான பாலியல் வளர்ச்சிக்கு அவர்களது ஒத்த வயதினருடனான உரையாடலோ அல்லது சிலவிதமான வெளிப்பாடுகளோ ஆரோக்கியமான பாலியல் வளர்ச்சிக்கு உகந்தவை என்ற கருத்தும் வலுப்பட்டே வருகின்றது.

இவ்விடத்தில் சிறுவர் விபச்சாரம் என்ற கருத்து அதில் இருந்து மாறுபட்டுள்ளது. அது மாற்றுக்கருத்துக்கு இடமின்றி கண்ட்க்கப்படுகின்றது. இவ்விடத்தில் நாம் மீண்டும் சிறுவர் ராணுவம் என்ற கருத்தை சிறுவர் பாலியல் அல்லது சிறுவர் விபச்சாரம் என்ற கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சில விடைகள் தானாகவே கிடைத்துவிடும். அவ்விடைகள் மேற்கின் கருத்தியல் எவ்விடங்களில் மீறப்பட வேண்டும் என்ற தெளிவுக்கு வர உதவும். மேற்கு வெறுப்பாளர்களுக்கும் மேற்கு ஆதரவாளர்களுக்கும் இச்செய்தி அவசியமென்பதே எமது நிலைப்பாடு. இவ்விடத்தில் நாம் தீர்வெதனையும் கூறவரவில்லை. எமது நிலைப்பாடு எதுவாக இருக்கிறதென்ற உங்களது வினாவே சிந்தனையின் பிறப்பிடமாக இருக்கும்.

2 - (அ) என்ற பகுதியில் நாம் கவனம் கொள்வதாக நினைப்போர் Innocent Voices என்ற அற்புதமான திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம்.
http://www.youtube.com/watch?v=fb-uFc62Gx4
மேலதிகமாக வாசிக்க விரும்புவோருக்கானது.
http://philosophy.rutgers.edu/FACSTAFF/BIOS/PAPERS/MCMAHAN/ChildSoldiers.pdf.

நமது ஏற்கனவேயான உரையாடல்களின் சில பகுதிகளைக் கீழே தருகின்றோம்.
1.
/சிறுவர்களின் கைகளில் பலவந்தமாகத் திணிக்கப்படும் ஆயுதங்களின் கனத்தில், சிறுவர்கள் எழுப்பிடும் ஓலம் யாராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாதது. சிறுவர் ராணுவம் தொடர்பிலும் சிறுவர் நலன் தொடர்பிலும் சிறீலங்கா அரசைக் குற்றம் சாட்டுவதை விடுத்து, நாம் செல்வதற்கான மிக நீண்ட பாதையை பற்றி யோசித்து பார்த்தல் எமது சமூகத்தின் தேவைப்பாடாக உள்ளது. மற்றவர்களின் குற்றத்திரையில் நாம் எம்மை மறைத்துவிடுதல் என்பது எமக்கான தேவைப்பாடுகளை மறுதலிக்கும் செயலாகும். இதன் மூலம் நாம் எவ்வகையிலும் முன்னேற்றகட்டத்திற்கு எம்மையோ எமது சமூகத்தையோ நகர்த்திவிட முடியாது என்பதே உண்மையாகும். அது தொடர்பான விவாதங்கள் மூலம் எமக்கு தேவையான விடயங்களை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளுதலே எமக்கு உகந்தது என நான் நினைக்கின்றேன். அத்துடன்,
கீழே உள்ள சில குரல்களைக் கேளுங்கள். வன்முறையை மூலதனமாகக் கொண்டியங்கும் சமூகத்தால் எப்போதுமே உண்மையான விடுதலையச் சாத்தியப்படுத்திவிட முடியாது. சமூகம் ராணுவ ரீதியாக விடுதலையப் பெற்றுக்கொண்டாலும் சமூகத்தின் ஒவ்வொரு கூறுகளையும் விடுதலைப்பாதைக்கு இட்டுச்செல்ல மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. கட்டாய சிறுவர் ராணுவத்தைக் கொண்டுள்ள சமூகம் விடுதலைக்கு நெடுந்தூரம் நடக்க வேண்டியுள்ளது./

2.
/சிறுவர் ராணுவம் என்பதன் கருத்துப்போக்கையும் ஆராய்வதே முக்கியமானதாகும். வன்முறை சமூகத்தின் கூறுகளாகி அல்லல்படும் சிறுவர்களின் முதன்மைத் தெரிவாக வன்முறையே இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. மற்றும் பல்வேறு காரணங்களால் அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள், இழப்பின் வேதனையில் தம்மைப் போராளிக்குழுக்களுடன் இணைத்துக் கொள்ளுதலின் உளவியல் என்பது ஆராயப்பட வேண்டியது. அவர்களின் முதன்மைத் தெரிவாக அது அமைந்துவிடுதல் என்பது சாதாரணமானதே. அதில் அவர்கள் அடையும் தற்காலிக ஆறுதல், அவர்களை தாம் சமூகத்தின் பிரதிநிதி என சிந்திக்க தூண்டுகின்றது. இணைவின் மூலம் தமது இழப்பை அவர்கள் மீளப்பெற்றுக்கொள்கின்றார்கள். இதில் நாம் பார்க்கவேண்டிய விடயம் என்னவென்றால் ராணுவக்குழுக்கள் சிறுவர்களைப் பயன்படுத்தும் முறைமை மற்றும் ராணுவக்குழுக்களிடம் சிறுவர் உரிமையின் பாலுள்ள கரிசனை. அதைவிடுத்து தனியே சிறுவர் ராணுவம் பற்றி நாம் பேசுதல் என்பது வீணானதே./

3.
/சிறுவர் உரிமை தொடர்பாக சிறீலங்கா அரசாங்கத்திடம் இருக்கும் கரிசனை உலகமே அறிந்தது. வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை கட்டிக்காப்பதற்காக, உல்லாச பிரயாணிகளின் வருகையை அதிகரிக்கும் தேவை சிறீலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. அதன் மூலமே அது பெருமளவான வெளிநாட்டுச் செலவாணியைப் பெற்றுக் கொள்கின்றது. அதற்கான தனது நாட்டில் மறைமுகமான சிறுவர் பாலியலை ஊக்குவிக்கின்றது. சிறுவர் தொடர்பான கரிசனையையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அது முன்னெடுப்பதில்லை. அதன் ஒரு விளைவே சிறுவர் ராணுவம் என்னும் பிரச்சனை. ஆனால், சிறுவர் ராணுவம் தொடர்பில் பரந்தளவிலான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது புலிகளுக்கு எதிராக. அத்ன இதய சுத்தியும், சமூக அபிவிருத்திச் சுட்டியும் இதற்கு சமாந்தரமாக வைத்து நோக்கப்படவேண்டும் என்பதே எனது கருத்து.
சிறுவர் உரிமை எனும் கோசத்தை முன்வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்திலிருந்து மாறுபட்டு சிறுவர் உரிமை தொடபாக பேசவேண்டும் என்பதே எனது விருப்பம. இது தொடர்பான விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்./

பின்குறிப்பு: 1
"The army was a nightmare. We suffered greatly from the cruel treatment we received. We were constantly beaten, mostly for no reason at all, just to keep us in a state of terror. I still have a scar on my lip and sharp pains in my stomach from being brutally kicked by the older soldiers. The food was scarce, and they made us walk with heavy loads, much too heavy for our small and malnourished bodies. They forced me to learn how to fight the enemy, in a war that I didn't understand why was being fought."
- Emilio, recruited by the Guatemalan army at age 14-

பின்குறிப்பு: 2
கொலையுண்டு போன
என் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப்பசியாற்றி
தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்
இன்னுமா "தாய் நிலம்"
புதல்வர்களைக் கேட்கிறது?

போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற 'தாய்நிலமே'
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்
இன்னமும் காயவில்லை.

கடித்துக் குதறி
நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலும்
உலகெங்கிலுமாக
எத்தனை குஞ்சுகளை விழுங்கிவிட்டாய்.
இன்னும் அடங்காதோ உன் பசி?

விண்ணேறி மண் தொட்டு
மீண்ட பின்னும்
சமாதானம் வேண்ட
யுத்தம் தேவையோ?
பற்றி எரிக ஆயுத கலாசாரம்!

என் மழலைகளை விடு
நாளைய உலகம்
அவர்களுக்காய் மலரட்டும்!

-ஒளவை விக்னேஸ்வரன்-




Friday, January 23, 2009

உரையாடல் - 3 (பெயரிலி, அமீபா) - [[மீள்வாசிப்பு]]

இவ்வுரையாடல் அலைஞனின் அலைகள் என்னும் தளத்தில் 'வன்மையாகக் கண்டிக்கிறோம் :-)' என்னும் பதிவில் இடம்பெற்றது.

நாம் ஏற்கனவே கூறியமாதிரி Mainstream ஐ நோக்கி எவ்வித கேள்விகளையும் கேட்டதேயில்லை. எப்போதும் Mainstream மீதும் அதன் தவறான போக்குகள் மீதும் என்றும் மாறாத கடுமையான விமர்சனம் உண்டு. எமது கடுமையான விமர்சனங்களை எப்போதும் நாம் முன்வைத்ததே இல்லை. தாம் போகும் தவறான பாதைகளை என்றைக்குமே Mainstream விளங்கிக் கொண்டதில்லை. இப்பூமியில் அதை விளக்க முற்பட்ட ஒருசிலரை நாம் எப்போதும் மறந்துவிட முடியாது. அவர்கள் இவ்வுலகின் கலகக்காரர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்வுலகின் புரட்சியாளர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்வுலகின் தத்துவாசிரியர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்வுலகின் வழிகாட்டிகளாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்களது போக்கினாலும் செயல்களினாலும் Mainstream தனது பாதையை மாற்றியவாறே நகர்ந்திருக்கின்றது. பாதையை மாற்றியவர்களை நினைவுகூர்வது எம்மை எப்போதும் புதியபாதையை அமைக்கும் செயற்பாட்டில் வீறுகொண்டெழ வைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் நண்பர்களே..!

Mainstream க்கு எதிராக குரல்கொடுப்பவர்களை நோக்கி நாம் ஏன் சதா குரல்கொடுக்கின்றோம்? என்ற கேள்விக்கான விடை எப்போதும் எம்மிடம் உண்டு. Mainstream க்கும் அதிகாரத்திற்கும் எதிராகக் குரல்கொடுக்கவும் கேள்வி கேட்கவும் கூப்பாடு போடவும் இன்றைக்கு பல தயாரிப்புக்கள் எம்மிடம் உண்டு. ரஷ்ய தயாரிப்பு, சீன தயாரிப்பு, கியூப தயாரிப்பு, அமெரிக்க தயாரிப்பு, லண்டன் தயாரிப்பு, ஜேர்மனிய தயாரிப்பு, பிரான்சிய தயாரிப்பு, லத்தீன் அமெரிக்க தயாரிப்பு, இந்திய தயாரிப்பு என பலவகையான Brand கள் எம்மிடம் உண்டு.

அவ்வாறே Mainstream க்கு எதிராகக் குரல்கொடுக்க பல காரணங்களும் நம்மிடம் உண்டு. வரலாற்றில் பெயரைப் பதிவு செய்தல், சமூகத்தில் வித்தியாசமானவராக நம்மைக் காட்டிக் கொள்ளுதல், கலகக்காரன் எனப்பெயர் பெறுதல், இவற்றின் மூலம் பெண்களின் மனதில் இடம்பிடித்தலும் மடியின் அடியில் இடம்கேட்டலும், இவ்வாறே கலகக்கார ஆண்களைக் கொள்ளை கொள்ளுதல், இயலுமெனில் கலக்குரலுக்காகப் பணம்பெறுதல் எனப்பலவகையான காரணங்களும் இன்று எம்மிடம் வலுத்துவிட்டது. ஆக, இன்றைய அதிகாரத்திற்கு எதிரான குரல்களும் Mainstream மீதான விமர்சனக்குரலை எதிர்ப்பவர்களும் தமக்கான அறத்துடன் கேள்விகளற்ற தளத்தில் உலாவரத் தொடங்கிவிட்டார்கள். Mainstream இற்கு எதிரான தளம் விம்மிப் பெருத்துவிட்டது. அதுமட்டுமல்லாது அத்தளம் கேள்வி கேட்கப்படக்கூடாத தளமாக தன்னை கட்டமைக்க எத்தனிக்கின்றது. கேள்வி கேட்பவர்களை Mainstream இன் பாதகமான முத்திரையை குத்தி வாயைப்பொத்துவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது மிக ஆபத்தான நிலமையாகும். அதற்குள் கலகம் செய்யும் தருணம் வந்துவிட்டதாகவே உணர்கின்றோம்.

Mainstream இன் ஆபத்துக்களை சதா சுட்டிக்காட்டும் அதற்கு எதிரானவர்களாகவும் அதற்கான மாற்றீடுகளை வைத்திருப்பதாகக் கூறிக் கொள்பவர்களும் Mainstream ஐ விட ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இங்கே தாம் நாம் எமது விமர்சனத்தை முன்வைக்க விரும்புகின்றோம். Mainstream க்கு எதிரானவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் எவ்வாறு பிழையான வகையில் சாதாரண மக்களை வழிநடத்த முற்படுகின்றார்கள் என்பதும் அடிப்படைவாதங்களை உற்பத்தி செய்கின்றார்கள் என்பதும் நாம் மிக அவதானமாகப் பரிசீலிக்க வேண்டிய விடயங்கள்.

ரயாகரன் விடயத்தை நாம் கூர்மையாக அவதானிக்க வேண்டியிருக்கின்றது. ரயாகரனை விமர்சிப்பதற்கு முன்னராக ரயாகரன் கட்டமைக்கும் அரசியல் என்னவாக இருக்கின்றது என்பதைக் கவனமாக ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. ரயாகரனின் மக்கள் மையமான அரசியல் எப்போதும் விரிவுபெற வேண்டியது. குறுக்கல்களை தன்னுள் அனுமதிக்காமல் வளர்ச்சி பெற வேண்டியது. ஆயினும் ரயாகரனின் அரசியல் கருத்துக்கள் எப்போதாவது அதை அனுமதித்திருக்கின்றதா என்றால் இல்லை என்ற மிகச் சோகமான பதிலே எமக்குக் கிடைக்கின்றது.

பின்னவீன காலம் விளிம்பு அடையாளங்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்திய போது, அதன் முற்போக்கமான விடயம் சிலசனாதன மார்க்சியர்களைத் தவிர பெரும்பாலான அறிவுஜீவிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயினும் பிற்காலத்தில் விளிம்பு அடையாளங்கள் அரசியலாக்கப்பட்ட போதும் சரி அரசியல், அடையாளங்களை மீறவிடாமல் மூலதனதிற்காகவும் அதிகாரத்திற்காகவும் அதைக் குறுக்கிய போதும் சரி அதன் பாதகமான அம்சங்கள் அனைவராலும் உணரப்பட்ட தருணங்களை நாம் இன்று காண்கின்றோம். இவ்விடத்திலேயே நவ மார்க்சியர்கள் வர்க்க அடையாளம் என்ற தனி அடையாளம் தவிர்த்தும் பல தளங்களிலுமான சிறுபான்மை அடையாளங்களை முன்னிறுத்துவதை நாம் அவதானிக்கின்றோம். ரயாகரன் போன்ற 'மார்க்சியர்கள்' வர்க்க அடையாள முதன்மைப்படுத்தல்களில் இருந்து எப்போதும் வெளிவந்ததில்லை. அவற்றிற்குப் பல காரணங்கள் உண்டு.

நவ மார்க்சியர்களுக்கு தனியே பொருளாதார அடிப்படையிலான வர்க்க அடையாளத்தில் இருந்து மார்க்சியத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருந்தது. அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது அவ்வாறான தெரிவை மேற்கோள்ளுமாறே. அதுமட்டுமல்லாது தனி அடையாளம் எப்போதும் அதன் தீவிர தன்மையில் குறுக்கல்களை நோக்கி நகரக்கூடியது. குறுக்கல்கள் எப்போதும் அடிப்படைவாதங்களை மட்டுமே உற்பத்தி செய்பவை. அடிப்படைவாதங்கள் பாசிச மனநிலை கொண்டலையும். இவ்வகையான பாசிச மனநிலையே இன்றைய ரயாகரனது தெரிவாக இருக்கின்றது. தான் நிற்கும் இடத்தை ரயாகரன் சரியாக உணரவில்லை என்பதே சோகம். ஏனெனில் அவரது குரல் மக்களுக்கானது. அவ்விடத்தில் நாம் அவருக்காகக் கவலைப்பட வேண்டியுள்ளது.

ரயாகரனது நிலைப்பாடுகள் போன்றதே இன்றைக்கு வேறுபல மார்க்சியர்களது நிலைப்பாடுகளும். அடிப்படைவாதங்களை வகைதொகையின்றி உற்பத்தி செய்வதை அவர்கள் எப்போதும் கனசச்சிதமாகச் செய்துகொண்டேயிருக்கின்றார்கள். Collective of Identities, சிறுபான்மை வாழ்வுகள், சிறுபான்மை என்னும் பன்மை போன்ற விடயங்களை எப்போதும் உணர்ந்து கொள்ளாது மார்க்சியத்தை வாழவைக்கின்றோம் பேர்வழியென்று மார்க்சியத்திற்கு எதிரிகளைக் கட்டமைப்பதையும் அடிப்படைவாத மனநிலையை வளர்த்துச் செல்பவர்களுமாக நம்முன் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். சிவசேகரம், நாவலன், ரயாகரன், சிறீரங்கன் போன்றவர்கள் மீது நாம் இவ்விமர்சனத்தை முவைக்க முடியும். (யமுனா ராஜேந்திரனை முற்றுமுழுதாக இவ்வகைக்குள் சேர்க்க முடியாது. மேற்கூறியவர்களிடமிருக்கும் அடிப்படைவாதம் ஒப்பீட்டளவில் ய. ரா விற்கு இருப்பதாகத் தெரியவில்லை. ய.ரா வை நினைக்கும் போது எமக்கு எஸ்.வி.ஆர் உம் ஞாபகத்தில் வந்து போகின்றார்.)

நாம் சொல்லும் இவ்விடயத்திற்கு இவர்களிடமிருந்து வரக்கூடிய பதிலையும் நாமே இவ்விடத்தில் சொல்லிவிடுகின்றோம். 'எஸ்.வி. ஆர் உம் ய.ரா வும் மார்க்சியத்தை சீர்குலைப்பதற்கு ஏகாதிபத்தியவாதிகள் உற்பத்தி செய்த கருத்துக்களின் அடிவருடிகள்' என்பதே ரயாகரனதும் சிவசேகரத்தினதும் நாவலனதும் சிறீரங்கனது பதிலாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு மிகநிச்சயமாகவே உண்டு. இவ்விடயம் மதவாதிகளது செயற்பாட்டிற்கு ஒப்பானது.

இதற்கான மிகநிச்சயமான காரணம் இவர்கள் மார்க்சியத்தால் கவரப்பட்டு எவ்வாறுதான் வாழ்ந்தாலும் பொருளாதாரச் சிறுபான்மை மக்களது மனநிலையை எப்போது உணர்ந்து கொள்ளாதவர்கள். மார்க்சியத்தின் எதிரிகள் பூர்ஷ்வா வர்க்கத்தில் இருந்தே தோன்றுவார்கள் என்பது எப்போதும் மிகநிச்சயமான உண்மையே. மார்க்சியத்தை பூர்ஷ்வாக்கள் உள்வாங்குவது ஆதரிப்பது என்பது வேறு பூர்ஷ்வாக்கள் கருத்தியல் தளத்தில் அதனைச் செழுமைப்படுத்துவதென்பது வேறு. மேற்படி அனைவரிடமும் எம்மை எதிர்ப்பதற்கு எளிய சமன்பாடு இருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு நிச்சயமகவே உண்டு. அவர்களது கருத்தியலின் பாதக நிலையை அவர்கள் எப்போதும் அறிந்து கொள்வதில்லை என்பது அதற்கான சூழ்நிலையோ மனநிலையோ அவர்களிடம் இல்லை என்பதும் கேலிக்குரிய விடயம் அல்ல. மாறாக சோகமான விடயம். ஏனெனில் இவர்கள் சிலவிடயங்களை நம்புகின்றார்கள். அதைக் கூறுகிறார்கள். அவ்வளவே. நேரடியாக மக்களுக்கு எதிராக எப்போதும் இயங்காதவர்கள்.

புலிகளது தோல்வி மக்களது வெற்றியல்ல என்ற எளிய அடிப்படையை விளங்கிக் கொள்ள முடியாதவர்களைப் பற்றி அதிகம் பேசுவதென்பது எமக்கு உவப்பானதல்ல என்ற போதிலும் சிலவிடயங்களைப் பதிவு செய்தே ஆகவேண்டியுள்ளது. ரயாகரன் பற்றிய விமர்சனத்தை நாம் செய்து 15 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்றுவரைக்கும் அவர் தனது தரப்பில் இருக்கும் தவறுகளை கொஞ்சமாவது திருத்திக்கொள்ளவுமில்லை.

15 மாதங்களுக்கு முன்னர் நாம் ரயாகரனுக்கு சொன்ன விடயங்களை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றோம். அதை மீண்டும் மீண்டும் ரயாகரனுக்குச் சொல்ல வேண்டியுள்ளது. அவருக்கு மட்டுமல்லாது அவருடன் சேர்த்து 4 பேருக்கும் சொல்ல வேண்டியுள்ளது.
/ரயாகரன்.
நீங்கள் சுட்டிக்காட்டும் எதிரிகள் பெரும்பாலானோர் உங்கள் மக்களே. நீங்கள் நேசிக்கும் மக்களே. அவர்களை உங்கள் எதிரி என நீங்கள் கட்டமைப்பது எவ்வளவு மோசமானது. ரயாகரன், இன்று இளஞர்களாக இருப்பவர்களுக்கு ஒரே ஒரு இயக்கத்தை மட்டுமே தெரியும். அது தான் புலிகள். அவர்கள் புலிகள் மீதான விமர்சனக்கருத்தைக் கொண்டிருந்தாலும் புலிகளால் மட்டுமே ஏதோவொரு தீர்வைத் தர முடியும் என நம்புகிறார்கள். உங்களது கடைசிப் பதிவு மிகவும் மோசமானது. உங்களை நீங்களே ஒருவிதமான பாசிச மனநிலைக்கு கொண்டு செல்கின்றீர்கள். கருத்தியல் மீதான அதீத பற்று அடிப்படவாத மனநிலையை வளர்த்துச் செல்லும். அதனால் வன்முறையை மட்டுமே சாத்தியமாக்க முடியும். விடுதலையை அல்ல. உலகம் எப்போதுமே அடிப்படைவாத மனநிலைகளுக்குள்ளேயே தன்னைத் திணித்து பல கோடிப்பேர்களைக் கொன்றொழித்துவிட்டது. இயங்கியல் வழி சிந்திப்பவர்களால் எப்போதுமே அடிப்படைவாத மனநிலையில் இருந்து சிந்திக்க முடியாது. சிந்திக்க கூடாது. அது எவகையிலும் ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றை உருவாக்கிவிட போவதில்லை. எல்லோரையும் இருவிதமான வகைமாதிரிக்குள் அடக்க பார்க்கின்றீர்கள். அது எவ்வளவு கொடுமை தெரியுமா ரயாகரன்?/

சமூகத்தை கணித்தாலோ அல்லது சமன்பாடுகளாலோ எப்போதும் விளங்கிக்கொள்ள முடியாது. அதை அடிக்கடி வலியுறுத்த வேண்டியுள்ளது மிகப்பெரும் சோகமே.
/இராயகரனது சமன்பாடு அவரை புலியை எதிர்க்கும்படி சொல்கின்றது. அதன்படியே அதை அவர் எதிர்க்கின்றார். அவ்வாறே அவரது சமன்பாடு புலியெதிர்ப்புகும்பலை எதிர்க்கும்படி சொல்கின்றது. அதன்படியே அதையும் எதிர்க்கின்றார். இதில் பிரச்சனை என்னவென்றால் அவரது சமன்பாடும் அவர் அச்சமன்பாட்டை நம்பும் விதமும் தான். அச்சமன்பாடு மட்டுமே மக்களை காக்கும் என நம்புகின்றார். ஒருசமன்பாடே வெவ்வேறு சூழ்நிலைகளுக்குள் வாழும் வெவ்வேறு கலாச்சார மக்களுக்கெல்லாம் எல்லா காலங்களிலும் ஒரேவிதமான தீர்வை தரும் என்று 'உண்மையாகவே' நம்புகின்றார். அங்கேதான் பிழை விடுகின்றார். எவ்வாறு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அல்லாவுக்கும் குர்ரானுக்கும் தங்கள் விசுவாசத்தை காடுகின்றார்களோ, இந்து அடிப்படைவாதிகள் மததுக்காக, அப்பாவி இஸ்லாமியர்களை உயிரோடு கொளுத்துகிறார்களோ, ஹிட்லர் எதற்காக யூதர்களை கொன்று குவித்தாரோ, அவ்வாறே வேறொரு தளத்தில் அதற்கு சமாந்தரமான மனவுணர்வுடன் தனது சமன்பாட்டை பூஜிக்கின்றார். செயற்பாட்டு தளம் சமன்பாடுகளை தனது முன்னோக்கிய நகர்வுக்கு மட்டுமே பயன்படுத்தும். சமன்பாட்டுடன் தேங்கிப்போகாது./

Thursday, January 22, 2009

உரையாடல் - 2 (பெயரிலி, அமீபா, சிறீரங்கன்.) - [[ மீள்வாசிப்பு ]]


இவ்வுரையாடல் அலைஞனின் அலைகள் என்னும் தளத்தில் 'பரந்த-அபத்தலியல்வாதம் (Pan-Absurdism) & பரந்த அபத்தக்கவிதை (Pan-Absurd Poetry): ஓர் அறிமுகம்' என்னும் பெயரிலியின் பதிவில் இடம்பெற்றது.

பெயரிலி அபத்தவாதம் பற்றி எழுதி வைத்திருந்ததை மேலும் கீழும் நக்கலாக சிலவிடயங்களை இட்டு நிரப்பி பிரசுரித்ததும் அதற்குக் கீழே நானும் சிறீரங்கனும் பின்னூட்டமிட்டு மகிழ்ந்ததும் தான் இவ்வுரையாடலில் முக்கியமான விடயங்களாகின. என்னைப் பொறுத்தவரை பெயரிலி சீரியசாக எழுதிய பிரதி ஒருகட்டத்தில் பெயரிலிக்கே வேடிக்கையாகிப் போய்விட அவர் அதை parody தன்மையாகப் பிரசுரம் செய்தது கவனிக்கத்தக்கது. ஆயினும், நாம் அபத்தவியலைப் பற்றிக் கூறக்கிடைத்த சந்தர்ப்பமாகவும் அந்நேரத்தில் மார்க்சியத்தின் கூட்டுமனநிலை பற்றிய விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையாலும் அதற்கு முன்னும் பின்னும் அருகேயும் உள்ள விடயங்களைக் கூறக் கிடத்த சந்தர்ப்பமாகவும் பயன்படுத்த எத்தனித்தோம். அந்நேரத்தில் உரையாடலைப் பரவலாகச் சாத்தியமாக்கிவிட வேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கிருந்த அதே நேரத்தில் எழுத்தாளராக நாம் பரிணமித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் மிகுந்திருந்தது. ஆக, சந்தர்ப்பம் கிடைத்த இடத்தில் எல்லாம் பின்னூட்டம் இட்டு மகிழ்ந்த காலங்கள் அவை. அக்கட்டத்தில் பெயரிலியின் தளம் அதற்கான சிறந்த களமாகவும் எப்போது சச்சரவுகள் நிரம்பிய தளமாகவும் காணப்பட்டது எமது உரையாடலைச் சாத்தியமாக்க உதவக்கூடும் என்ற நம்பிக்கை எமக்கிருந்தது மட்டுமல்லாது பெயரிலி சிலவகையான கலகங்களை செய்துகொண்டிருந்தார். (அதிகாரத்திற்கெதிராகக் கலகம் செய்து கொண்டிருந்த நமது ஈழத்துக் கலகக்காரர்கள் எல்லாம் அப்போது கலகம் முடித்து அதிகாரத்துடன் பாலே நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.) எமக்கு கலகக்கார வழிகாட்டிகள் எவரும் இருக்கவுமில்லை. parody யுடன் parody அல்லாதவனவும் parody அல்லாதவற்றுடன் parody களும் உரையாடித்தள்ள வேண்டியதன் அவசியம் உங்களுக்குப் புரியாததல்ல.

தமிழ் எழுத்துக்களின் கலகக்குரல்கள் உருவாக்கிய வேற்றுமை பண்புகள் சமூகத்தின் வேறுமாதிரியை உருவாக்கியது. ஒவ்வொரு போக்கிற்கும் எதிரான குரல்கள் கலக்குரல்களாகவே அமைவதுண்டு. அவையே பாத்தியை மறித்து தண்ணீர் மாற்றுவது போல புதிய பாதைகளைத் திறந்து விடுபவை. நிலைப்பட்ட கருத்தியல்களை உடைத்துப் போடுவதற்கு கலகக்காரர்கள் தேவைப்படுகின்றார்கள். கலக்குரல்கள் வெட்டிய பாத்தியில் செல்லும் தண்ணீரை பிரித்து பலபாத்திகளுக்கும் பாய்ச்சுகின்றது. வெட்டிய பாத்தி வழியே கட்டமைக்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் செழுப்படைந்த பயிர்ப்பிரதேசங்கள் தவிர்த்து வாடிநின்ற பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முற்படுவது கலகக் குரல்களே. எச்சமூகப்போக்கும் அவற்றை மறுத்துவிட முடியாது. ஈழத்துத் தமிழ்ச்சூழலில் சோபாசக்தியின் குரல் அவ்வாறானதொரு குரலே.

இவ்விடத்தில் கூட்டுமனநிலை தொடர்பான பித்தில் தமிழ்மணம் தொடர்பான சமூகம் தன்னை தேக்கிக்கொண்டிருந்தது. அம்மனநிலைக்கு எதிராக தனிமனம் என்பதை நிறுத்த வேண்டிய தேவை எமக்கிருந்தது. இங்கே, நம் கூட்டுமனநிலையை முற்றாக விலக்குபவர்கள் அல்லர். ஆயினும் தனிமனநிலை கருத்தியல் பக்கம் மூடப்பட்டிருந்தது போன்ற உணர்வு எம்மை கூட்டுமனநிலைக்கு எதிராக தனிமனநிலையை முன்வைக்கத் தூண்டியது. தனிமனநிலை ஏற்பின் அல்லது அங்கீகரிபின் பின் ஊட்டுமனநிலைக்கும் தனுமனநிலைக்கும் இடையிலான புள்ளிகளைக் கண்டடைவதே எமது நோக்கமாக இருந்தது. ஆயினும் அதற்கு சிறீரங்கன் எம்மை விடவில்லை. தனிமனநிலையின் பாதகமான அம்சங்களை அவர் எம்முன் வைத்து உரையாடலைத் தொடங்கினார். அவ்விடத்தில் முற்றுமுழுதான நனிநிலை மறுப்பு நிலையை உடைக்க வேண்டிய நிலைப்பாட்டை நாம் எடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. அவ்வுடைப்பின் பின்னர் அவர் முன்வைத்த காரணிகளை ஏறுக்கொண்டு அடுத்தகட்ட உரையாடலை ஆரம்பிக்க வேண்டிய தேவை தொடர்பாக நாம் ஆவலுடன் இருந்தோம். ஆயினும், இன்றுவரை அது எமக்குச் சாத்தியப்படவே இல்லை என்ற வருத்தம் எமக்கு உண்டு.

சிறீரங்கன் அவர்கள் எமது இன்னூட்டத்தின் ஒருபகுதியைப் பிடித்து தமது உரையாடலைத் தொடங்கிய போதே அதன் ஆரோக்கியமின்மைபற்றி நாம் உணர்ந்திருந்தோம். ஆயினும் கார்ல் பொப்பரின் சாதக அம்சங்களைக் கொண்டு உரையாடலைத் தொடர்ந்தோம். சிறீரங்கன் சொல்வது போன்று கார்ல் பொப்பர் மார்க்சியத்தை கருவறுக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய குழந்தை அல்ல. அவரது சிலவகைப்பட்ட கருத்தியலை ஏற்றுக்கொள்ள முடியத சனாதன மார்க்சியர்கள் அவரை மக்கள் விரோதியாகக் கட்டி அழகு பார்த்தார்கள். இன்றைய நவ மார்க்சியர்கள் சிலர் அவரது சாதகமான கருத்துக்களை உள்வாங்கியுள்ளார்கள். ஹெபர்மாசினது கருத்தியலின் அடித்தளத்தில் கார்ல்பொப்பரின் கருத்தியல் இழையோடுவதை உணர்ந்துகொள்ள முடியும். இன்றைய் ஹெபர்மாஸ் கூட மார்க்சியத்தின் அடிப்படைகள் மீது கேள்விகளயும் விமர்சனங்களையும் முன்வைத்தார். ஆயினும், ஹேபர்மாஸ் ஃபிராங்பர்ட் பள்ளியின் சிந்தனை மரபின் தற்போதைய காவலர் என்ற வகையில் சனாதன மார்க்சியர்கள் வாய்பொத்தி மவுனித்து காதுகொடுத்து கேட்டிருக்கின்றனர். இன்று ஹேபர்மாஸ் இருக்கும் இடத்தில் கார்ல் பொப்பர் இருந்திருந்தால் சிலவேளை சனாதன மார்க்சியர்கள் ஆகா மார்க்சியம் அருமை என இன்புற்றிருந்திருக்கக்கூடும் என்பது மார்க்சியர்கள் மீது நாம் காணும் பலமான விமர்சனமாக இருக்கின்றது.

கருத்தியல் தேக்கம் என்பது எப்போதும் எதிரிகளைக் கடமைக்கும். எதிரிகளைக் கட்டமைக்கும் தன்மையின் மூலம் மட்டுமே அவர்களது கருத்தியல் இருப்பு சாத்தியமாகும். அவர்களால் எதிரிகளைக் கட்டமைக்க முடியாமல் போனால் அவர்களது இருப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தமது வேலையைச் செவ்வனே செய்கின்றார்கள். ஃபிராங்பர்ட் மார்க்சியப் பள்ளி இருந்திருக்காவிட்டால் மார்க்சியம் என்னும் மானுடநேயத் தத்துவம் என்று சிலவேளை நூலகங்களில் மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடும். பிராங்க்பர்ட் சிந்தனை மரபு கூட விமர்சனமின்றி வளர்ந்த மரபல்ல. அவர்கள் எதிர்கொண்ட விமர்சனங்களும் எண்ணிலடங்காதவை. இன்று, நவமார்க்சியர்கள் அழ்காக இருத்தலியல் மார்க்சியம், அமைப்பியல் மார்க்சியம் பற்றி பேசக்கூடியதாக இருக்கின்றதென்றால் அதற்கான உழைப்பை நாம் மறுத்துவிட முடியாது.

இன்றைய மானுடவியலாளர்கள் கூறும் சமூகப்பிரச்சனை என்பதன் சூழல்தான் அதன் முக்கிய பரப்பு என்பதை இன்றைய தத்துவவாதிகள் இலகுவாக நிராகரித்து வருகின்றார்கள். அதனை எப்போதும் நிராகரிகவே முடியாது. ஒரு பிரச்சனையத் தீர்வு காண்பதற்கு ஐரோப்பிய சூழலில் ஐரோப்பியனால் கண்டுபிடிக்கபடும் கருவி என்பதை நாம் கவனத்துடன் அணுக வேண்டும். அதைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். கீழைத்தேயப் பார்வையை முன்னிறுத்திய எட்வர்ட் சைத் போன்றவர்கள் பெரும்பாலும் கருத்துயல் ரீதியான பார்வைகளை முன்வைத்தாலும், அவை பலதளங்களுக்கும் மிக முக்கியமானவை. வாழ்வின் போக்கு என்பது பலவிதமான் கண்ணிகளை எதிர்கொள்வது. ஒவ்வொரு கண்ணியும் பல்சாத்தியப்பாடுகளுக்கான வெளிவழிகளைக் கொண்டிருக்கும். நாம் தெரிவு செய்த வழி அந்நேரத்தின் மற்றைய வழிகளின் நிரகரிப்புக்கான சாத்தியங்கள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. தெரிவுசெய்த வெளிவழியின் பயணத்தின் பின்பு எதிர்கொள்ளும் உதிய கண்ணி என்பது ஏற்கனவே எதிர்கொண்ட கண்ணியின் குழந்தை என்பதை நாம் எப்போதும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். இங்கே தான் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீது எமது சந்தேகத்தை பலமாக முன்வைக்க வேண்டும்.

மார்க்சியத்தை விஞ்ஞானம் என ஏற்றுக்கொள்வதன் முட்டாள்தனத்தை நாம் இன்றைக்கு உங்களுக்குப் புரிய வைக்கத் தேவை இல்லை. சமூகவியலின் மாற்றத்துடன் தனது மானுடநேயத்தன்மையை மார்க்சியம் மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் எப்போதும் சமூகவியலுக்கு மேல் கொண்டு போய் விஞானத்தை வைத்து அழகு பார்ப்பவர்கள் அல்லர். சமூகவியலுக்கு மேல் விஞ்ஞானம் அமர்ந்திருந்து அருள்பாலிக்கவும் முடியாது. கூடாது. விஞ்ஞனத்திற்கு மேல் சமூகவியலைப் பொருத்திக் கொள்ளும் போது மட்டுமே மானுடநேயத்துடன் இயங்க முடியும். இன்றைக்கு மானுடவியல் evolutionary anthropology மற்றும் socila anthroplogy என்று பிளவுண்டு கிடக்கின்றது. இவ்விடத்தில் evolutionary anthropology ஐ நாம் social anthroplogy க்கு கீழே கொண்டுபோய் வைக்க வேண்டும். விஞ்ஞானம் 'உண்மைகள்' மிது கட்டப்படுவது. ஆயினும் விஞ்ஞான உண்மைகள் என்பது சமூகத்தின் கட்டமைப்பில் இருந்து உருவாகுபவை. அதை தீர்மானிக்க ஆயிரம் காரணிகள் இருக்கின்றன. இதை நாம் மனதில் வைத்துக் கொண்டால் பலபிரச்சனைக்ளுக்கு இலகுவில் தீர்வு கண்டுவிடலாம். இதை நான் எப்போதும் சிறீரங்கனுக்கு சொல்லவேண்டியிருக்கப் போகின்றது என்பது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியவிடயம் அல்ல. மாறாக மிகுந்த கவலையை உருவாக்குவது.

உரையாடல் - 2 இல் சிறீரங்கனுடனான ஊடாட்டம் எனக்கு சந்தோசம் தருவதாக அமையவில்லை. அவரது தனிப்பட்ட சிலநிலைப்பாடுகள் மீது அவரை நாம் ஆதரிக்க முன்வருகின்ற போதிலும் கருத்தியல் மீதான அதீத பிடிப்பு உருவாக்கம் ஒதுக்கும் வெளிகள் மற்றும் மாறாக் கருத்தியல் வன்முறை என்பது ஒப்பீட்டளவில் இராயகரன் அவர்களை விட சில சாதக அம்சங்களைக் கொண்டிருக்கும் போதிலும் பொதுவாகப் பார்க்கும் போது தவறான விடயங்கள் எனவே கூறமுடிகின்றது. இவர்களின் தேக்கம் இவர்களுக்கு பின் வருகின்றவர்களை தேங்கிப் போகச்செய்கின்றது. உதாரணமாக மயூரன் போன்றவர்களின் கருத்துக்கள் இவர்களின் பாதையில் பூத்த செடிகளே. இவர்கள் தவறுவிடும் தருணம் இக்கட்டமே என்பதை இவர்கள் புர்ந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டில் இருந்து உருவாகும் நூற்றுக்கணகான இளைய அறிவுஜீவிகளுக்கு உல்கத்தில் இன்று எந்த மார்க்சியர்களிடமும் இல்லாத கருத்தியல்களை விதைத்து பிழையான பாதையில் அழிநடத்தப் போகின்றார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ந்திருக்க முடியவில்லை. இவர்கள் கால மார்க்சியத்தை முதலாளித்துவம் தனக்குச் சார்பாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டது. இவர்களும் அதே மார்க்சிய வாரிசுகளை உருவாக்கும் போது அவர்களும் முதலாளித்துவ அங்கமாக தமது புரட்சியை நடாத்துவர்கள் என்பது நிச்சயம். எழுச்சி பெறக்கூடிய சமூகத்தின் தோல்வி இது என்பதை ஒருவராவது உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே இதனை இங்கே பதிவு செயக்கூடியதாக இருக்கின்றது. சிறீரங்கன் என்கின்ற தனிநபர் மீதான நேசம் எப்போதும் எமக்கு பொங்கிவழிகின்றது இராயகரன் மீதான நேசம் போலவே.

உரையாடல்- 1 (இரயாகரன், பெயரிலி, மயூரன், அமீபா) - [[ மீள்வாசிப்பு ]]


இவ்வுரையாடல் அலைஞனின் அலைகள் என்னும் தளத்தில் இரயாகரனுக்கு மேலதிகமாக ஒரேயொரு கேள்வி (அல்லது வேண்டுகோள்) என்னும் பெயரிலியின் பதிவில் இடம்பெற்றது.

இவ்வுரையாடலில் இரயாகரன் பங்குபற்றாத போதும் அவரை மையமாக வைத்தே உரையாடல் ஆரம்பமாகியது. இவ்வுரையாடலில் இரயாகரனுடனான ஊடாட்டம் எமக்கு முக்கியமானதாக இருந்தது. இதில் இருந்து புதியவகையான புள்ளிகளை உருவாக்க வேண்டிய தேவை அவசியமாகப்பட்டது. இவ்வுரையாடலின் பின்பு ஏதோவொரு விதத்திலான இரயாகரனின் இருப்பின் அவசியத்தை நாம் உணர்ந்து கொண்டபோதும் நிலையாக வரையப்பட்ட தளத்தில் இருந்தான மாற்றமற்ற கருத்துக்களின் போதனை சமூகத்திற்கு வேறுவகையில் பின்னடைவு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. பொருளாதார அடிப்படையை மட்டும் வைத்து கருத்தியல்களை வளர்த்தெடுப்பதையும் சிதைப்பதையும் நாம் கடந்திருக்க வேண்டும். அனைத்துச் செயற்பாடுகளையும் பொருளாதார மையமாக யோசிக்கமுடியும் அணுக முடியும் என்ற கருத்தாக்கத்தில் இருந்து லெனினே விடுபட்டிருந்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் என நினைக்கின்றேன். அதற்கருகான புள்ளிகளினது வேறுவகையான அணுகுமுறைகளினதும் தேவை மறுக்கப்பட முடியாதது. வர்க்கப் புரட்சியின் ஆரம்பத்திற்கு பொருளாதார மைய அணுகுமுறையின் அவசியம் ஜேர்மன் மற்றும் சோவியத்யூனியனில் அவசியப்பட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆயினும், புரட்சியின் நீட்சிக்கும் அதன் தொடர்ச்சிக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் அவசியமாகின. சனாதன மார்க்சியவாதிகள் அதன்பின்னரும் மார்க்சிய நூல்களுக்குள் அனைத்தையும் கண்டுபிடித்துவிடலாம் எனத்தேடித்திரிந்தது எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

மார்க்சியப் பொருள்முதல்வாதம் பொருளாதார மையமான தத்துவம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. உலகின் அனைத்துவகையான போக்குகளையும் பொருளாதார மைய அரசியலை வைத்து 'விளக்கி' விடவும் முடியும். அவை அவை வெறும் விளக்கமாகவும் சுயதிருப்திக்கான கண்டுபிடிப்புகளாகவும் மாத்திரமே எஞ்சிப்போகும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. அவை ஒற்றைப்பரிமாணமான கருத்தியல் கட்டுமானம் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. அவற்றின் 'முக்கியத்துவத்தில்' அல்லது 'மையப்படுத்தலில்' மறைந்திருக்கும் புள்ளிகளை வெளித்தெரிய வைக்கவேண்டிய தேவை அனைத்துவகையான அறிவுஜீவிகளுக்குமானது. தேங்கும் ஒற்றைப்போக்கென்பது பாசிசத்தை உருவாக்கும் புள்ளி என்பதை நாம் நம்புகின்றோம். உடைப்புகள் என்பது எப்போதும் பொருளாதார மேலாதிக்கத்திற்கு மாத்திரமானதல்ல. அவை பலதளங்களிலும் நிகழ அவற்றிற்கு சுதந்திரம் உண்டு. பொருளாதார மையப்புள்ளிக்கு மேலதிகமாக வேறுபுள்ளிகளில் நிகழும் உடைப்புகளை நாம் இலகுவாக பொருளாதார அடிப்படையை வைத்து நிராகரித்துவிட முடியாது. பலவகையான புள்ளிகனின் இருப்பையும் நாம் மறுதலித்து விட முடியாது. ஒற்றைமைய சார்பியல் பார்வை என்பது விலக்கும் புள்ளிகளை உருவாக்குவது. அவற்றின் விலக்கல்களையும் ஒடுங்கல்களையும் பொருளாதார மைய பார்வையை வலியுறுத்துவோர் எதிர்கொண்டே ஆக வேண்டும். (இதுபற்றிய விரிவான பார்வைகளை வேறு உரையாடல்களில் பார்ப்போம்.) இராயகரனின் பார்வைக் கட்டுமானத்தை விளக்கவே நாம் மேற்கூறிய விடயங்களைக் கூறவேண்டி இருந்தது. அவரது பார்வைக் கட்டுமானம் என்பது பொருளாதார மைய அரசியலுக்கு மிக உகந்தது. ஆயினும் அதில் இருந்து மாறுபட்ட புள்ளிகளையும் வேறு தொடர்ச்சிகளையும் தனது பார்வைக் கட்டுமானம் சார்ந்து நிராகரித்து நிற்பதுதான் வேதனையானது. உலகை ஒற்றைத் தொலைநோக்கியால் பார்த்துவிட முடியாது.

இனி, இரயாகரனது பதிவை முன்வைத்து சிலவிடயங்களைக் கூற நினைக்கின்றோம். இராயகரன் மக்கள் நலன் என்ற தளத்தில் இருந்து தனது உரையாடலை நகர்த்திச் செல்கின்றார். அவர் வேண்டுகோள் விடுக்கும் மக்களில் குறிப்பிட்ட சதவிகத்திலானோர் புலிகளை ஆதரிப்போர். ஆதரிக்காதவர்களில் பெரும்பாலோனோர் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக புலிகளை விட வேறு மாற்றுச் சக்தி இல்லை என்று நம்புபவர்கள். குறைவான சதவிகிதத்திலானோர் புலிகளை மாற்றுக்கருத்தின்றி எதிர்ப்பவர்கள். நிரந்தரப் புலி எதிர்ப்பாளர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்திலானோர் பேரினவாதம் தனது இருப்பை நியாயப்படுத்தும் நோக்கில் வழங்கும் சலுகைகளைப் பெறுபவர்கள். மிகுதி எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானோர் புலிகளால் பலவிதத்திலும் பாதிக்கப்பட்டவர்கள். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், அதிகாரம் பறிபோனவர்கள், சகோதரங்கள் சொந்தங்களை இழந்தோர், (புலிகளால் சுடப்பட்டு) தெளிவான எதிர்காலத்திட்டத்துடன் நகரமுடியாமல், ஓரிலக்கை மட்டுமே வைத்து நகரும் புலிகள் போன்ற இயக்கத்தினர் அரச இயந்திரத்திற்கு எதிராக போராடும் போதான மக்கள் எதிர் நிலைப்பாடுகளால் நொந்து போன சமூகத்தினர் இவ்வகைக்குள் வருகின்றனர். இங்கே, நான் சொல்ல வருவது இராயகரன் நிற்கும் தளத்தில் நின்றவாறு புலிகளை எதிர்ப்பவர்கள் மிகக்குறைவான சதவிகிதத்தினரே.

நிராகரிப்பின் அரசியலின் காலம் முடிவடைந்து விட்டது. எதையும் முற்றாக நிராகரித்து செய்யப்படும் அனைத்து அரசியல்களும் வெவ்வேறு பார்வைகளில்- ஒவ்வொன்று சார்பாகவும்- நிராகரிப்பு அரசியலாகவே கொள்ளப்படும் அபாயக்காலகட்டம் இது. வித்தியாசங்களின் பெருக்கத்தில் ஒடுக்கப்படும் வர்க்கம் மாத்திரமல்ல ஒடுக்கும் வர்க்கமும் சேர்ந்தே பிளவுற்றுப் போய்விட்டது. அவற்றிகு இடையே முதலாளித்துவம் தன்னை வாழவைத்தவாறேயிருக்கிறது. உலகசந்தையின் வடிவம் மாறிவிட்டது. புதிய வடிவத்திற்குள் முதலாளித்துவம் தன்னைப் பொருத்தியிருக்கிறது. இங்கே, முதலாளித்துவத்தின் தெளிவான வரைபடம் எம்மிடம் இல்லை. அதற்கான தெளிவான வரைபடம் வரும் போது மாத்திரமே புதிய வர்க்கத்தை அடையாளப்படுத்த முடியும். அதை மீளுருவாக்கம் செய்து வெளிப்படுத்த முடியும் என நம்புகின்றனர் நவ மார்க்சியர்கள். இங்கே, நான் சொல்ல வருவது இதில் இருந்து இன்னும் வித்தியாசப்பட்டது. தேசியவாதக் கருத்தியலும் அதற்குப் பின்னர் சோசலிசப் பெண்ணியம் என்னும் கருத்தியலும் வளர்ச்சிபெற்ற போது அக்காலத்தைய மார்க்சியர்கள் அதை இலகுவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அக்கட்டத்திலேயே, எதிர்காலம் பிளவுக்கான காலம் என்பதை உணர்ந்து மார்க்சியர்கள் செயற்பட்டிருக்க வேண்டும். இன்று மார்க்சியர்கள் பின்னமைப்பியல்வாதிகளை மார்க்கிய விமர்சகர்களாக மார்க்கியத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டியவர்களாகக் கொள்ள முடிகின்றது. ஆயினும் நாம் இன்னமும் இது குழப்பவாதத்தில் முடியும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பிளவின் பின்பான காலத்தில் எதையும் ஒன்றிணைக்க முடியாது மார்க்கியர்கள் திண்டாடுவதில் பிரயோசனம் இருக்கப்போவதில்லை. பிளவை வகைதொகையற்று ஏற்றுக்கொள்ளும் போதும் அங்கீகாரத்தின் சமநிலைக்கு சமூகம் தன்னை தற்காலிகமாக நிலைநிறுத்த எத்தனிக்கும். அக்கட்டத்தில் சில ஒத்த புள்ளிகளைக் கண்டடைய முடியும். பிளவுகளுக்குள் இயங்குவதற்கான மனநிலையை வளர்த்துக்கொள்வது தான் எம்முன் உள்ள தெரிவே தவிர மாறாக பிளவை எதிர்ப்பதும் அதனை மறுதலிப்பதும் அல்ல. நிராகரிப்பு அரசியலின் காலம் தன்னை முடித்துக்கொண்டு விட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் இயக்கத்தின் இருப்பை மறுத்து எதுவும் செய்துவிட முடியாது என்ற நிலையில் இருந்து மட்டுமே அதனுடன் தொடர்புபட்ட மக்களை அவர்களின் அரசியலை மேற்கொள்ள முடியும். மாறாக நாம் நிராகரிப்பின் அரசியலில் இருந்து என்ன செய்தாலும் அதுவும் மக்கள் விரோதமானதே. இராயகரன் எதிர்க்கும் புலிகளின் அழிவின் பின்னர் சமூகத்தில் இருந்து அந்நியப்படப்போகும் சமூகக்கூட்டம் மக்கள் இல்லையா. புலிகளுடன் சேர்ந்து சமூக நோக்கோடு யாரும் வேலை செய்துவிடவில்லையா? அவர்களையும் நாம் பாசிஸ்டுகள் எனக்கூறி நிராகரிக்கும் காலம் கடந்துவிட்டது. நாம் எப்போதும் ஒரேகருத்தில் இருப்பதென்பதே ஒருவித பாசிச நிலைதான். சூழல் என்பது எப்போதும் மாறுவது. அதற்கேற்றவாறு எம்மை மாற்றிக்கொள்ள முடியாவிட்டால் நாம் ஏதோவொருவிதத்தில் அந்நியமாகி நிற்கின்றோம் என்பதே பொருள். நாம் வளர்க்கும் நிராகரிப்பின் கருத்தியல்வெளிக்குள் அகப்பட்ட மக்கள் கூட்டம் என்பதும் எமது நேசத்திற்கு உட்பட்டதே. இராயகரன் ஆசைப்படும் புலிகளின் அழிவு என்பது ஒருவகையில் அவர் நேசிக்கும் மக்கள் கூட்டத்தின் அழிவுதான். அதை அவர் எப்போதும் விளங்கிக் கொள்ளவில்லை என்பது எமக்கு மிகவும் துயரமானது.

மக்கள் சார்பு என்பது எப்போதும் நிரந்தரமான கருத்தியல் அல்ல. அது யாந்திரிக வடிவமும் அல்ல. அது காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றக்கூடியது. காலத்திற்கு ஏற்றவாறு தனது கருத்தியலைக் கூட மாற்றக்கூடியது. நாம் ஒரே கருத்தியலில் இருந்தவாறு பார்க்கும் பார்வை என்பதே கூட மக்கள் எதிர்நிலைப்பாடாக இருக்கலாம். மேலும், பொருளாதார அடிப்படை சார்ந்தே மக்கள் பார்வை என்பது பன்மையிலானது. ஒன்றுக்கொன்று முரணான பார்வைகளை வழங்கும் மக்கள் கூட்டம் எமக்கும் முன் இருப்பதில் நாம் வியப்படையத் தேவை இல்லை. முரண்களுக்குள் இயங்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்காக எமது மனதை தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும். மக்கள் நிலைச்செயற்பாடு என்று கூறிக்கொள்பவர்கள் கூட அவற்றை தெளிவாக விளங்கிக்கொண்டவர்கள் அல்ல.

மக்கள் அரசியல் என்பதை நாம் எப்போதும் யாந்திரிகமாகக் கட்டமைத்து வைத்திருக்க முடியாது. ஈழத்து மக்களினதும் அதைச்சுற்றியுள்ள மக்களினது மனநிலை தொடர்பாக நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டும். மார்க்சிய- பொருளாதார அடிப்படையை முன்னிறுத்தித் தீர்மானிக்கப்படும் மக்கள் அரசியல் பார்வை என்பது மிகவும் குறுக்கலாக, 'மக்கள்' நிராகரிக்கும் பார்வையாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது. மார்க்சிய-லெனினிய அடிப்படையிலான கருத்தியல் மூலம் கட்டமைக்கப்பட்ட இராயகரனின் பார்வை என்பதை நாம் இவ்விடத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் போதாமைகளை முன்னிறுத்தி அதற்குப் பின் மார்க்சியர்கள் நீண்ட தூரம் பயணம் செய்துவிட்டார்கள். இராயகரனின் பார்வையில் உள்ள அடிப்படைகளின் நியாயங்களை எவராலும் மறுக்கவே முடியாது. ஆயினும் தன்னை மாற்றியமைக்க முயற்சிக்கும் மார்க்சியத்தொடர்ச்சியை அவர் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அல்லது குறைந்தபட்சம் போஸ்ட் மார்க்சிய உரையாடல்கள் ஏன் நிகழ்கின்றன என்றாவது அவருக்குள் கேள்விகள் எழ் வேண்டும். இங்கே, மேற்கினது போஸ்ட் மார்க்சிய சிந்தனைகள் கூட எமது சமூகத்திற்கு எவ்வாறு பொருத்தப்பாடாக உள்ளது என்ற கேள்வி எமக்கு முக்கியமானது. போஸ்ட் மார்க்சியர்களினது பெரும்பாலான உரையாடல்கள் அமெரிக்க-ஐரோப்ப மையவாத சமூகப் பரப்புகள் தொடர்பான உரையாடல்களே. இராயகரன் குறைந்த பட்சம் இந்திய மார்க்சியரான இஜாஸ் அஹமட் இனது பிரதிகள் பற்றியாவது தனது உரையாடல்களைத் திசைதிருப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மிகுதியாகி நிற்கின்றது.

அமெரிக்க-ஐரோப்ப மைய வாத போஸ்ட்-மார்க்சிய உரையாடல்களில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் விடயங்கள் தவிர்த்து எமக்கு முக்கியமான விடயமாகப்படுவது கிராம்சிய அடிப்படை மார்க்சியம் ஆகும். மூன்றாமுலக நாடுகளினது முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஏகாதிபத்தியப் பிரசனைகள் ஆகும். தென்னமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய நாடுகளினது மார்க்சியத்தை வரையறுக்க வேண்டிய தேவை எமக்கு முன்னுள்ள கடமையாகும். இதனை இராயகரன் நிச்சயமாக புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். தென்னமெரிக்க நாடுகளினது போராட்டங்களில் இருந்து நாம் எமது கருத்தியலுக்குத் தேவையான விடயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இடதுசாரியத் தேசியத்தை முன்னிறுத்தியவாறு நகர்ந்த விதம் பற்றிய தெளிவு எமக்கிருக்க வேண்டும். அங்கே இருந்த சர்வதேசியவாதிகள் எவ்வாறு அதற்கெதிராகச் செயற்பட்டார்கள் என்றதெளிவையும் நாம் பெற்றுக்கொண்டே ஆகவேண்டும். அவ்வாறே வர்க்கம் என்பதை முறையாக வலுப்படுத்த முடியாத ஆபிரிக்க சமூகத்தில் மார்க்சியத்தை அதேமாதிரி நடைமுறைப்படுத்த முயற்சிக்கக் கூடாது. இங்கே கறுப்பு மார்க்சியத்தினதும் ஆபிரிக்க மார்க்சியத்தினதும் சில வரையறைகளையும் நடைமுறைகளையும் நாம் நிச்சயமாக அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறே ஆசிய பரப்புகளில் மார்க்சியத்தில் செயற்பாடுகளை நாம் வரையறுக்க வேண்டும். மார்க்சியத்தின் இவ்வகையான பிளவும் பிளவனுமதிப்பினூடான ஒன்றுபடுதலும் மட்டுமே சர்வதேசியக் கருத்தியலை பலப்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இராயகரன் இதனை அறிந்துகொள்ளும் போது மாத்திரமே அவரது மக்கள் அரசியலை உண்மையாக மேற்கொள்ளுவார். அல்லது மார்க்சியத்தின் போதாமைகளினூடாக தம்மை வலுவாக நிலைநிறுத்த எத்தனிக்கும் முதலாளித்துவத்திற்கு சார்பாக அவர் மறைமுகமாக இயங்குவதை அவர் எப்போதுமே அறியப்போவதில்லை. நாம் இராயகரனிடம் இருந்து எதிர்பார்ப்பது ஈழத்து மார்க்சியம் தொடர்பான அவரது பிரதிகளையே தவிர சர்வதேசியப் புரட்சிகளினது பதாகைகளை அல்ல. ஈழத்து மார்க்சியத்தை பற்றிய வரையறைகளை அவர் உருவாக்கத் தொடங்கும் போது அவர் தனது முற்சாய்வுகளைக் களைந்தே ஆகவேண்டும். முற்சாய்வுகளில் இருந்து மக்கள் சார்பான அரசியலை மேற்கொண்டுவிட முடியாது என்பதை யார்தான் அவருக்குச் சொல்லிவிட முடியும். பிரபாகரன் எவ்வாறு கதவுகளை இறுகச் சாத்தியவாறு நிற்கான்றாரோ, அதைவிட மேலதிகமாக இராயகரன் கதவுகளை மாத்திரமல்லாது படலையையும் சேர்த்தே சாத்தியவாறு நிற்கின்றார். இதுதான் மக்கள் விரோதத்தின் பக்கம் என்பதை அவருக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவது என்பதுதான் எனக்கு முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி.

இரயாகரனை நோக்கி பெயரிலி கேட்ட கேள்விகளில் எம்மால் சில உடன்பாடுகளை எட்ட முடிந்தாலும் அவர் இரயாரனை ஆதரிக்கும் காரணங்கள் பலவற்றில் எம்மால் உடன்படமுடியவில்லை. விஸ்வானந்த தேவரின் கருத்துக்களை காப்பாற்றுவதென்பது நாம் பிறப்பதற்கு முன்னர் 25 வருடங்களுக்கு முன்னர் அவர்கூறிய கருத்துக்களை காவித்திரிவதல்ல. மாறாக அதனைச் செழுமைப்படுத்துவதே என்பதே இராயகரன் மீது நாம் காணும் குறையாக இருக்கின்றது. பிரெஞ்சுப் புரட்சியில் பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைப்பாடுகளில் இருந்தும் அதன் வெளியில் இருந்தும் வலதுசாரிய அரசியல் தன்னை நிரப்பிக் கொண்டதை நாம் மறந்துவிட முடியாது. கருத்துக்களை இறுக்கமாகப் பற்றி நிற்பதே பாசிச நிலையாகும். தனது கருத்துக்களை மாற்றத்திற்கு உட்படுத்தாதவன் தான் உண்மையான பாசிஸ்ட் ஆவான். லெனின் தேசியம் தொடர்பான கருத்தியல்களை முன்னெடுத்த போது மார்க்சிய வெறியர்கள் இருக்கவில்லை என நினைக்கின்றேன். இருந்திருந்தால் லெனினை அன்டி-மார்க்சிஸ்ட் என முத்திரை குத்தி அடித்திருப்பார்கள். அவ்வாறே இன்றைக்கு சர்த்தர் நவ மார்க்சியர்கள் கொண்டாடப்படுகின்றார். இருத்தலியம், இருத்தலிய மார்க்சியம் எனப் பணிவன்போடு அழைக்கப்படுகின்றது. அவ்வாறே பின் மார்க்சியர்களை இன்றைய மார்க்சியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளத்தலைபடுகின்றார்கள். தெரிதாவை மார்க்சியத்தை வளப்படுத்தியவர் எனச் சொல்லும்பார்வை கூட நவ மார்க்சியர்களிடம் வந்திருக்கின்றது. ஆக, மார்க்சியத்தை எதிர்த்தே சமூக தத்துவ மரபு வளரவேண்டியிருப்பதாக இருக்கும் இப்போக்கு எவ்வளவு கேவலமானது என்பதை மார்க்சிய அடிப்படைவாதிகள் விளங்கிக்கொள்ளப் போவதில்லை.

இவ்வாறே, இலங்கையில் தேசிய இனவிடுதலைப் போராடத்தின் ஆரம்பத்தில் மார்க்சியர்கள் எடுத்த நிலைப்பாடுகளை இராயகரன் அறியாமல் இருக்கப்போவதிலை. விச்வானந்த் தேவன் சனாதன மார்க்சியர்களுடன் தான் பிரச்சனைப்பட்டார். தேசியமறுப்பு மார்க்சியர்களுடனான பிரச்சனையின் பின்புதான் அவரால் புதிய கருத்தியலின் பக்கம் சாய முடிந்தது. அந்நேரத்தில் ரஷ்ய சார்பு மார்க்சியர்கள் எடுத்தநிலைப்பாடுகளை மல்லிகை இதழ்களில் இருந்து நாம் விபரமாக அறிந்துகொள்ள முடியும். இதுதான் மார்க்சியர்களின் வரலாறு. மார்க்ஸ் என்ற மக்கள் நலனுக்காக அறிவுழைப்பைச் சாத்தியமாக்க்கிய பேராசான் இவற்றை அனுமதிப்பாரா என்பதைக் கூட மார்க்சிய மதவாதிகள் உணர்ந்துகொள்ளப் போவதில்லை.

இன்று அமைப்பின் பெயர்களை வைத்தே அதனை என்.ஜீ.ஓ வா இல்லையா என தீர்மானிக்குமளவிற்கு மார்க்சிய வாரிசுகள் வளர்ந்துவிட்டார்கள். சில சமன்பாடுகளின் மூலம் அனைத்துவகையான பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணும் வசதியை நமது இன்றைய புதிய 'மார்க்சியர்கள்' பெற்றிருக்கின்றார்கள். அவ்வகையான ஒருவர்தான் மார்க்சியத்தின் அடிப்படை கூடத் தெரியாதது மட்டுமல்லாது அதனை அறிந்துகொள்ள எதுவித முனைப்புமற்ற மயூரன் என்னும் பேர்வழி. மயூரனினது கருத்தியல் தெளிவை மேற்கூறிய உரையாடலில் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். மயூரன் கூறுகிறார் "மார்க்சீயத்தை கருவறுப்பது எப்படி என்று இரவுபகலாக சிந்திப்பதும் பண்பாட்டின் உதிரிகளாய் அலைவதும்தான்." இதைத்தான் சர்த்தர் காலத்திலேயும் அமைப்பியலின் காலத்திலேயும் பிரெஞ்சு மாணவர் புரட்சியின் போதும் சரி தற்போது பிரசண்டவின் நேபாள மார்க்சியத்தினை கட்சிக்குள்ளேயே மறுதலிக்கத் தொடங்கியுள்ள சில மார்க்சியர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

சோவியத் யூனியனின் உடைவை ஜனநாய சக்திகளின் வெற்றியாகவும் அதற்குப் பின் மார்க்சியத்தைச் செழுமைப்படுத்த வேண்டிய வரைக்கும் உரையாடும் போஸ்ட் மார்க்சியர்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், மயூரன் போன்ற ஈழ்த்து இளைய விடிவெள்ளிகள் சனாதன மார்க்சியர்களிடம் கடன்வாங்கிய அதே மனநிலையைத் தக்கவைத்து தம்மை சமூகத்தில் பலமாக நிறுவிக்கொள்கின்றனர். மார்க்சியர்கள் மீதான விமர்சனத்திற்கு "ஆட்சியில் அமெரிக்கா உங்கள் கைகளில் நாசிசத்தின் மூலவர்களின் கோட்பாட்டுப்புத்தகங்கள்" என்று இலகுவாகக் கூறி தமது மேதமையை நிலைநாட்டிக் கொள்கின்றனர். இதுதான் இவர்களது 'எப்போதுக்குமான' பதிலாக இருக்கிறது. இவர்களுக்கான தொடர்ச்சி என்பதில் பலர் இவர்களுக்கு பின்னாலே நிற்கக் கூடும். வாரிசுகள் உருவாக்குவதென்பது எதிர்காலத்தில் தமது கருத்தியலைக் காப்பாற்றுவதற்காக அல்ல. மாறாகச் செழுமைப்படுத்துவதற்காகவே என்பதை எப்போதும் உணர்ந்துகொள்ளாதவர்களும் நிலைப்பட்ட கருத்தியல் மூலம் சமூகத்தைத் தேங்கிப்போகச்செய்பவர்களும் மக்கள் அரசியல் செய்பவர்கள் அல்லர். அவர்கள் மக்கள் எதிர் அரசியல் செய்பவர்களே.

உரையாடல் - 1 இராயகரனை நோக்கி முன்வைக்கப்பட்டதாயினும் அதன் தொடர்ச்சித்தடத்தில் அதே வழியில் தன்னை நிலைநிறுத்த எத்தனிக்கும் மயூரனும் வந்து கலந்து கொண்டது உரையாடலை இன்னும் சிறப்பாகச் செய்ய உதவியது. இங்கே சமூகப்பகுப்பாய்வு மற்றும் தத்துவமரபிலான அவர்களது போதாமைகள் மட்டுமல்லாது அரசியல் தத்துவ ரீதியாக அவர்கள் காவித்திரியும் போதாமைகள் தொடர்பாகவும் எமது கவனம் அமைந்தது. இவ்வுரையாடலின் பின்பும் இருவருமே தமது கருத்தியலை சிக்கெனப்பற்றிப் பிடித்திருப்பதை அவர்களது எழுத்தின்வழி நாம் கண்டவாறே இருக்கின்றோம். இராயகரனாவது வாழ்க்கையின் நடுப்பகுதியைக் கடந்தவர். ஆயினும் மயூரன் தனது இளம்வயதில் போதாமைகளை வைத்திருப்பது எமது எதிர்காலச் சமூகத்தை எவ்வாறு பாதிக்கப் போகின்றது என்பதாக இன்றும் எமது கவனம் செலுத்தப்படுகின்றது.

இராயகரன் என்ற மனிதனின் தனிப்பட்ட சமூக அக்கறை தொடர்பாக எம்மகுள்ளது மிக மிக உயர்வானது. அவர் சலூகைகளுக்கும் ஆதிக்க உணர்வுக்கும் அடிபணிபவர் அல்லர். ஆனால், அவரது சமூக அக்கறையும் அதன் தீவிரத் தன்மையும் எவ்வாறு சமூக விரோதமாகின்றது என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இவ்விடத்தில் மயூரனை இராயகரன் இடத்தில் வைத்துப் பார்க்க முடியாது என்பதையும் சொல்லவேண்டியிருக்கிறதென்பதில் வருத்தப்படுகின்றோம். மார்க்சியத்தை - அதன் உயிர்ப்பை இவர்களிடம் இருந்து காப்பாற்ற நாம் தொடர்ச்சியாகக் கருத்தியல் தளத்தில் செயற்படவேண்டியிருக்கிறது. ஏனெனில் இவர்களது சனாதனக் கருத்தியல்களின் மூலமே இன்று முதலாளித்துவம் உயிர் வாழ்கின்றது. இதுதான் எமது இன்றைய நிலைப்பாடு.




18 உரையாடல்களும் 15 மாதங்களும்.. [[ மீள்வாசிப்பு ]]

இணையவெளியில் உரையாடலை ஆரம்பித்து அண்ணளவாக 15 மாதங்கள் பூர்த்தியாகிவிட்டன. இதுவரையான 15 மாதங்களில் 18 உரையாடல்களை நிகழ்த்தியாயிற்று. இதனூடாக பல்வேறுபட்டவர்களுடன் உரையாடல் சாத்தியமாகியிருக்கின்றது. இன்னும் பலருடன் உரையாடல் சாத்தியமாகாத போதிலும் ஊடாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறதெனக் கூறமுடியும். அதை விட பல வாசகர்களுடனும் கருத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. 15 மாதத்திற்கு முற்பட்ட கருத்தியல் சூழலுடன் ஒப்பிடும் போது தற்போது அச்சூழல் பலவிதத்தில் மாறியிருக்கிறதெனக் கூற முடியும்.

எமது எழுத்து பெரும்பாலும் எழுத்தாளர்களுக்கானதாகவே இருந்திருக்கிறது. எழுத்தாளர்களுடனான உரையாடல், எழுத்தாளன் முன்வைத்த கருத்து தேங்கிப்போவதையோ, நிலைத்து 'கல்வெட்டாகிக்' கனத்து நிற்பதையோ எமது உரையாடல் தகர்த்தெறிந்தது. அதுமட்டுமல்லாது, எழுத்தாளன் முன்வைத்த தீர்க்கமான கருத்துக்கு எதிராக அல்லது அதை மறுக்க நினைத்த தீர்க்கமான கருத்திற்கு எதிராக எமது உரையாடலை நிகழ்த்தினோம். கருத்தியலின் 'நிலையாமையை' வலியுறுத்துவதாக எமது உரையாடலை தயார்ப்படுத்தினோம். கருத்துக்களுக்கு எதிர்நிலைப்பாடு எடுத்து 'விவாதம்' புரிவதைத் தவிர்த்து அதனை 'உரையாடலாக' மாற்ற நினைத்தோம். எழுத்துக்களினதும், நிகழும் உரையாடல்களினதும் போக்கை மறுத்தும், விடுபடல்களினது இடைவெளியை நிரப்பியும் சுருள் உரையாடல் (Spiral Discourse) 1* ஒன்றுக்கு தமிழ்சமூகத்தைத் தயார்ப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இச்சுழற்சி உரையாடல் மூலம் அனைத்துவகைத் துவித எதிர் இருமைக் (Binary opposition) 2*கட்டமைப்பு மனநிலையையும் தகர்த்தல் எமது நோக்கமாயிருந்தது. விடுபடல்களை நிகழ்த்தியவாறு ஓரிழையில் தொங்கியவாறு சென்றுகொண்டிருந்தவர்களின் கண் முன்னே 'இழைக்கொத்துக்களைக்' காட்டி நையாண்டி பண்ணினோம். புதிய புதிய இழைகளில் அவர்களைத் தொற்றவைத்து அவர்களது 'துவித எதிர் இருமை' மனநிலையைத் தகர்க்க நினைத்தோம்.

மனித மனங்கள் எப்போதும் துவித எதிர் இருமை மனநிலையினூடாகத் தம்மைக் கட்டமைத்தே பழக்கப்பட்டவை. தமிச்சமூகம் தனது வாழ்வின் பெரும்பகுதியை தமிழ்ச்சினிமாவுடன் ஊடாடியே கழிக்கின்றது. தமிழ்ச்சூழலில் பிறந்த ஒருவன்/ஒருத்தி தமிழ்ச்சினிமாவின் பாதிப்பில் இருந்து தனியே வாழ்ந்துவிடமுடியாது. தமிழ்ச்சினிமாவின் நேரடியான பாதிப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலும் அதன் மறைமுகத்தாக்கத்திற்கு ஆளாவதை தவிர்த்துவிடவே முடியாது. ஏனெனில் நாம் ஊடாட நினைக்கும் அல்லது தவிர்க்க முடியாமல் ஊடாடும் புள்ளிகள் தமிழ்ச்சினிமாவின் தாக்கத்திற்கு உட்பட்டிருப்பதை நாம் வாழ்வில் பலமுறை உணர்ந்திருப்போம். அண்மைக்காலத்திற்கு சற்று முன்னர்வரை தமிழ்ச்சினிமா முற்றுமுழுதாக துவித எதிர் இருமைக் கட்டமைப்பிற்குள்ளேயே இயங்கியது எனக் கூறமுடியும். அதன் இயக்கம் என்பதே த்வித எதிர்மையின் எதிரெதிர் துருவ இயங்குகையாகவே காணப்பட்டது. ஆண்மை x பெண்மை, நல்லது x தீயது, கதாநாயகன் x வில்லன், தேசபக்தி x தீவிரவாதம் என்றவாறாக அதன்போக்கு இக்கட்டமைப்பிற்குள் தீவிரமாக இயங்கியது. உலகக நிகழ்ச்சிப்போக்கின் அனைத்து போக்கையும் தனிநபர் சார்ந்து இவ்வகைப்பட்டுக்குள் அடக்கிவிட முடிகின்றபோதிலும் தமிழ்ச்சினிமாவின் போக்கு சற்று வித்தியாசப்பட்டது. துவித எதிர் இருமைகளினதும் உச்சப்புள்ளிகளின் இருப்பும் அதன் இயக்கமாகியது. இதனால் அதன் தொடர்ச்சிக்கும் வெற்றிக்கும் இவ்வெதிர் நிகழ்வுப்பரப்பிற்குள் பிம்பங்களைக் கட்டமைத்து ரீல்களை ஓட்ட வேண்டியிருந்தது. எமது அனைத்து வகையான கலைகளும் சினிமாவில் தங்கிப் போய் இருக்கின்றன. கலைகள் சமூகத்துடன் ஊடாடுபவை உரையாடுபவை என்பதன் அடிப்படையிலும் தமிழ்நாட்டில் சினிமா அரசியலுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருப்பதன் அடிப்படையிலும் அவற்றின் தாக்கம் அதன் வாழ்நிலைப்பரப்பிற்குள் அகப்பட்ட அனைத்திலும் தனது செல்வாக்கைச் செலுத்தியது எனக்கூறமுடியும்.

தமிழ் மரபில் 3* துவித எதிர் இருமை மனநிலை ஆழமாக உன்றி நிலைத்திருப்பதைக் காண்கின்றோம். அவற்றில் இருந்து விடுபட வேண்டியதன் அவசியம் எம்மால் இன்னும் உணரப்படவும் இல்லை. நாம் இத்தாக்கத்தில் இருந்து வெளியேறியவர்கள் எனக்கூறவில்லை. நாம் அதில் இருந்து விடுபட எத்தனிக்கும் மனநிலையைச் சார்ந்தவர்களாக இருக்கின்றோம். எமது சமூகத்தில் அதன் தாக்கத்தை குறைக்க ஆசைப்படுபவர்களாக இருக்கின்றோம். அம்மனநிலையைக் கடந்து 'பலசாத்தியப்பாடுகள்' என்னும் கருத்தியலையும் நிலையான சாத்தியம் என்னும் நிலையைக் கடந்து நிலைய்ற்ற சாத்தியங்கள் என்னும் கருத்தியலை தோற்றுவிப்பவர்களாக அதனை ஊக்குவிப்பவர்களாக இருக்க ஆசைப்படுகின்றோம். பொதுமனநிலையை பல்சாத்திய மனநிலைக்கு மாற்றுவதனூடாக பொதுமனநிலை கட்டமைத்திருக்கும் பாசிசக்கூறுகளைக் களைய நினைக்கின்றோம். இக்களைவின் மூலம் விளிம்புநிலைச்சாத்தியங்கள் தமக்கான உற்சாகத்துடன் வெளிக்கிளம்பும் என்பது எமது நிலைப்பாடாயிருக்கின்றது. சிறுபான்மை இன மக்களின் உளவெளிப்பாடுகள், சிறுபான்மை மத மக்களின் வெளிப்பாடுகள், சிறுபான்மைப் பாலியல் கருத்துடையோரின் வெளிப்பாடுகள், சாதிய ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் வெளிப்பாடுகள் போன்றவற்றினது சமூகரீதியான அங்கீகாரத்திற்கு துவித எதிர் இருமை மனநிலையைக் கடந்த உரையாடல்கள் அவசியம். வெறுமனே விளிம்பின் மீதான அளவற்ற துதிபாடுகையும் கொண்டாட்டமும் துவித எதிர் இருமை மனநிலையை மேலும் இறுக்குவதோடும் பிளக்கப்பட கருத்தியலின் உச்சநிலைக்கு இருசாராரையும் அழைத்துச் செல்லும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை. அதன்வழியான பயணம் என்பது எம்மை ஒரு முட்டுச்சந்தில் நிறுத்தும். எமது செயற்பாடுகள் அனைத்தும் ஒருவித செயலற்ற நிலையை( Deadlock ) 4* அடைந்து பாசிச நிலையில் எம்மைத் தக்கவைக்கும் என்பதை நாம் நம்புகின்றோம்.

இவற்றின் கேள்விகளில் இருந்தே எமது உரையாடல்கள் ஆரம்பமாகின. 'எமக்கான' 'தீர்க்கமான' கருத்துக்களை நாம் கொண்டிருக்கவில்லை. அனைத்துவகையான கருத்தியல்களையும் உள்வாங்கிக்கொள்ளுமாறு எமது மனதை தயார்ப்படுத்தி வைத்திருந்தோம். அதில் இருந்து எமது உரையாடலை நகர்த்திச் செல்லக்கூடியதாக இருந்தது. எம்மால் வெற்றிகரமாக எமது உரையாடல்களை நகர்த்திச்செல்ல முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் எமக்கு எவ்வித மனத்தடங்கலும் இல்லை. ஏனெனில் எமது உரையாடல்கள் அனைத்தையும் வன்மம் நிரம்பியவர்களுடனும், முடிவுகளைக் கொண்டாடுபவர்களுடனும், குழுவாத மனநிலைக்குத் தம்மைப் பொருத்திக் கொண்டவர்களுடனும், தமக்கான கருத்தியலைக் கண்டடைந்து விட்ட புழங்காகிதத்தில் இருந்தவர்களுடனும், புதிய கருத்தியல்கள் தமது இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுடனும், பழிவாங்கும் உணர்ச்சியுடன் இருந்தவர்களுடனும், அதிகார மோகத்திற்கு ஆட்பட்டிருந்தவர்களுடனும், தாம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு சார்பானவர்கள் என்ற நம்பிக்கையினூடே சுயதிருப்திப் பட்டுக் கொண்டிருந்தவர்களுடனும் நிகழ்த்த வேண்டி இருந்தது. அவர்களது நம்பிக்கை அவர்களது விருப்பு சார்ந்து எதிர்நிலைப்பாடு எடுத்து 'விவாதம்' புரிந்த சந்தர்ப்பங்களும் உண்டு. சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முன்முடிவுகளுடன் அணுகுபவர்கள் தம்மை மட்டுமல்லாது அச்சமூகத்தின் அதன்பின்வரும் பெரிந்தொகையான மக்கள் கூட்டத்தையும் கருத்தியல் சிதைவுக்கு உள்ளாக்குகின்றார்கள் என்ற 'உண்மை' தெரியாமல் இருக்கின்றார்கள் என்பது வருத்தத்திற்குரியது. தமது சுய விருப்பு வெறுப்புகள் எழுத்தின் மீது கவியும் போது ஆரம்பிக்கும் நச்சுச்சூழல் அதன்பின்னே வருகின்ற அனைவருடைய மனதிலும் நஞ்சை வளர்த்துச் செல்லும் என்பது தெரியாமல் போவது துரதிஸ்டமானது. இவ்வகையான கட்டங்களைத் தாண்டியதாக புதிய தலைமுறை இருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதனைக் கருத்தியல் ரீதியாகச் சாத்தியமாக்க எழுத்தாளர்களுடன் உரையாடலை ஆரம்பிக்க வேண்டி இருந்தது. தற்போதைய இணையத் தொழில்நுட்பம் அதைச் சாத்தியமாக்கிய மிகவும் உதவி புரிந்தது எனக்கூறமுடியும்.

எமது 18 உரையாடல்களும் தத்துவம், அரசியல், சமூகவியலுடன் இணைந்த தொழில்நுட்பம் என்றவாறாகப் பல்வேறுபட்ட புள்ளிகளைக் கடந்து சென்றபோதிலும் அதன் மையச்சரடாக இருப்பது சமூகக்கருத்தியல்களைத் தீர்மானிக்கும் தத்துவத்துடன் தொடர்பான பரப்பே. சமூகக்கருத்தியலைத் தீர்மானிப்பதிலும் அதனி மாற்றியமைப்பதிலும் குறித்த மொழியில் அமைந்த எழுத்திற்குப் பெரும்பங்குண்டு. அதனை எழுதுபவர்களினது மனநிலையே சில மாற்றங்களை வேண்டி நிற்கும் நிலையில் நாம் வாசகர்களுடன் உரையாடுவதிலும் பார்க்க எழுத்தாள்ர்களுடன் உரையாடப் பெரிதும் விரும்பினோம். எமது ஆரையாடல்கள் மூலம் எழுத்தாளர்களின் மனநிலையில் சிலவகையான மாற்றங்களை ஏற்படுத்துவது மாத்திரமன்றி உரையாடலை அவதானிக்கும் வாசகனுக்கும் ஒற்றைப்பரிமாணம் தவிர்ந்த தளத்தில் எண்ணச்சிதறல்கள் ஏற்படும் என்பது எமக்கான நம்பிக்கையாக இருந்தது. கருத்தியலில் செயலற்ற நிலை (Deadlock) என்பது பலூன் மாதிரியானது. இயங்குகைக்கான பெருமளவுசக்தியைத் தேக்கியவாறு தன்னை இறுக்குக்கொண்டிருப்பது. அதன்மீது விழும் சிறிய ஊசிக்குத்து ஒன்று அதனை சிதறடித்துவிடப் போதுமானது. எமது உரையாடல்கள் எழுத்தாளர்களுடன் நிகழ்ந்த போதிலும் Deadlock நிலையைக் கடந்தவர்கள் வாசகர்கள் என்பது வியப்பானது. வாசகர்கள் புதிய மனத்துடன் உரையாடலை அணுகுவார்கள். அவர்களிடன் எதுவித முன்முடிவுகளும் இருக்காது. அவர்கள் அச்சூழலை இலகுவாகக் கடப்பார்கள். எழுத்தாளர்களுடன் எமக்கு நிகழ்ந்த உரையாடல்கள் வாசகர்கள் சிலகட்டங்களைத் தாண்டிப் போக உதவியது என்பதை நாம் சிலருடனான உரையாடல்களில் கண்டிருக்கிறோம். ஆயினும் சில எழுத்தாளர்கள் எமது உரையாடல்மூலம் பலவிடயங்களை உள்வாங்கிய போதிலும் எதுவித மாற்றமும் அற்று அன்றுபோல் என்றும் வீற்றிருப்பது எமக்கு மகிழ்ச்சியான விடயம் அல்ல. அவர்களை நினைத்தல்ல, அவர்களைத் தொடரும் சூழலையும் அதன்மீது கவியப்போகும் 'இருளை'யும் நினைத்தே எமது கவலை.

15 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விடத் தற்போது ஆக்கபூர்வமான உரையாடல்கள் அதிகரித்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது கருத்தியல் சூழலும் மாறியிருக்கின்றது. முன்பிருந்த இறுக்கமான கருத்தியல் சூழலில் சற்று நெகிழ்வு ஏற்பட்டிருப்பது போன்று உணர்கின்றோம். நாம் உரையாடத் தொடங்கியதன் நோக்கம் சிறிதளவு நிறைவேறியிருக்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்தி. எமது உரையாடல் தான் இச்சூழலை மாற்றியது என்ற புருடா கதைகளை முன்வைப்பது எமது நோக்கமல்ல. ஆயினும், எமது உரையாடல் சூழலின் மாற்றத்திற்கு சிறிதளவில் பங்களித்திருக்கும் என்ற நம்பிக்கை எம்மை மேலும் பரவலாக உரையாட வைக்கும். அந்த அளவில் அவ்வகை நம்பிக்கைகளை எமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். நாம் தனிப்பதிவு ஆரம்பித்து ஒற்றைப் பரிமாணத்தில் எழுத்துக்களை உருவாக்கி அதனைப் பாராட்டிவரும் பின்னூட்டங்களை அனுமதித்து ஆனந்திக்கும் மனநிலை எமக்கெப்போதும் இருந்ததில்லை. கவர்ச்சிகரமாக (துன்பகரமாக?) எழுத்துக்களைப் பிரசவித்து ரசிகன்/ரசிகைளைத் தேடி பேசி இன்புற்றிருக்கும் மனநிலையும் எம்மிடம் இருந்ததில்லை. எம்மைப் பெரிய பிம்பமாகக் கட்டமைத்து சுயதிருப்திக்குள்ளாகி வாழும் மனநிலையும் எமக்கில்லை. மாறாக, எழுத்தாளர்களுடன் உரையாடலை ஆரம்பித்து அனைத்துவகையான ஒற்றைப்பரிமாண சூழல்களையும் தகர்க்த்தெறியும் மனநிலையும் பெருவிருப்பும் எம்மிடம் இருந்தன. தனித்தளம் வைத்திருந்து எழுத்தைக் காட்சிப்படுத்துவதன் ஊடாக சமூககருத்தியல் மாற்றத்தை விரைவாக எதிர்பார்க்க முடியாது. அது மிகமெதுவானது. மீறல்களை அனுமதிக்கும் இயல்பை அவற்றினூடு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியாது. ஆனால், உரையாடல்கள் அவ்வாறில்லை. அவை தேக்கம் என்பதை இல்லாமல் செய்யக்கூடியவை. உரையாடல் என்பது குளத்தில் நீச்சல் அடிப்பது போன்றது. நீச்சல்களின் பெருக்கத்தில் குளம் காணாமல் போய்விடும். நீச்சல் மட்டுமே வெளித்தெரியும். ஒருவர் மூழ்கும்போது மட்டுமே குளமும் அதன் ஆளமும் வெளித்தெரியும். குளத்தின் ஆழத்தை இல்லாமல் ஆக்க முடியாது. ஆனால், நாம் குளத்தை இல்லாமல் ஆக்குகின்றோம். எமது நீச்சல் நிகழும் இடத்தில் குளம் காணாமல் போய்விடுகின்றது. நீச்சல் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. குளம் தனது ஆளத்தைப் பறைசாற்ற வளர்த்து நிற்கும் தாமரைச் செடிகள் எமக்குப் பொருட்டல்ல. அவற்றைக் கண்டு நாம் எப்போதும் அஞ்சியதுமில்லை.

இனி, நாம் நிகழ்த்திய உரையாடல்களை மீள்வாசிப்பு செய்ய நினைக்கின்றோம். எமது உரையாடல்களே குளமாகி பற்வைகளைத் தம்மிடம் வரவழைக்கின்றன. அதை நீச்சல்குளமாக மாற்ற வேண்டிய பொறுப்பு எமக்கு நிச்சயமாகவே உண்டு. எமது உரையாடல்களின் மீள்வாசிப்பினூடே எம்மோடு உரையாடியவர்கள் பற்றிய விபரங்களையும் பார்த்துச் செல்வோம்.

பிற்குறிப்பு:
இங்கே, மொழியின் துவித எதிர் இருமையை எம்மால் கடக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கின்றோம்.

Footnotes.
1. http://www.ischool.utexas.edu/~palmquis/courses/discourse.htm
2. http://www.nationmaster.com/encyclopedia/Binary-opposition
3. http://murugan.org/research/zvelebil-tamil_traditions-intro.htm
4. http://en.wikipedia.org/wiki/Deadlock