Friday, January 23, 2009

உரையாடல் - 3 (பெயரிலி, அமீபா) - [[மீள்வாசிப்பு]]

இவ்வுரையாடல் அலைஞனின் அலைகள் என்னும் தளத்தில் 'வன்மையாகக் கண்டிக்கிறோம் :-)' என்னும் பதிவில் இடம்பெற்றது.

நாம் ஏற்கனவே கூறியமாதிரி Mainstream ஐ நோக்கி எவ்வித கேள்விகளையும் கேட்டதேயில்லை. எப்போதும் Mainstream மீதும் அதன் தவறான போக்குகள் மீதும் என்றும் மாறாத கடுமையான விமர்சனம் உண்டு. எமது கடுமையான விமர்சனங்களை எப்போதும் நாம் முன்வைத்ததே இல்லை. தாம் போகும் தவறான பாதைகளை என்றைக்குமே Mainstream விளங்கிக் கொண்டதில்லை. இப்பூமியில் அதை விளக்க முற்பட்ட ஒருசிலரை நாம் எப்போதும் மறந்துவிட முடியாது. அவர்கள் இவ்வுலகின் கலகக்காரர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்வுலகின் புரட்சியாளர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்வுலகின் தத்துவாசிரியர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்வுலகின் வழிகாட்டிகளாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்களது போக்கினாலும் செயல்களினாலும் Mainstream தனது பாதையை மாற்றியவாறே நகர்ந்திருக்கின்றது. பாதையை மாற்றியவர்களை நினைவுகூர்வது எம்மை எப்போதும் புதியபாதையை அமைக்கும் செயற்பாட்டில் வீறுகொண்டெழ வைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் நண்பர்களே..!

Mainstream க்கு எதிராக குரல்கொடுப்பவர்களை நோக்கி நாம் ஏன் சதா குரல்கொடுக்கின்றோம்? என்ற கேள்விக்கான விடை எப்போதும் எம்மிடம் உண்டு. Mainstream க்கும் அதிகாரத்திற்கும் எதிராகக் குரல்கொடுக்கவும் கேள்வி கேட்கவும் கூப்பாடு போடவும் இன்றைக்கு பல தயாரிப்புக்கள் எம்மிடம் உண்டு. ரஷ்ய தயாரிப்பு, சீன தயாரிப்பு, கியூப தயாரிப்பு, அமெரிக்க தயாரிப்பு, லண்டன் தயாரிப்பு, ஜேர்மனிய தயாரிப்பு, பிரான்சிய தயாரிப்பு, லத்தீன் அமெரிக்க தயாரிப்பு, இந்திய தயாரிப்பு என பலவகையான Brand கள் எம்மிடம் உண்டு.

அவ்வாறே Mainstream க்கு எதிராகக் குரல்கொடுக்க பல காரணங்களும் நம்மிடம் உண்டு. வரலாற்றில் பெயரைப் பதிவு செய்தல், சமூகத்தில் வித்தியாசமானவராக நம்மைக் காட்டிக் கொள்ளுதல், கலகக்காரன் எனப்பெயர் பெறுதல், இவற்றின் மூலம் பெண்களின் மனதில் இடம்பிடித்தலும் மடியின் அடியில் இடம்கேட்டலும், இவ்வாறே கலகக்கார ஆண்களைக் கொள்ளை கொள்ளுதல், இயலுமெனில் கலக்குரலுக்காகப் பணம்பெறுதல் எனப்பலவகையான காரணங்களும் இன்று எம்மிடம் வலுத்துவிட்டது. ஆக, இன்றைய அதிகாரத்திற்கு எதிரான குரல்களும் Mainstream மீதான விமர்சனக்குரலை எதிர்ப்பவர்களும் தமக்கான அறத்துடன் கேள்விகளற்ற தளத்தில் உலாவரத் தொடங்கிவிட்டார்கள். Mainstream இற்கு எதிரான தளம் விம்மிப் பெருத்துவிட்டது. அதுமட்டுமல்லாது அத்தளம் கேள்வி கேட்கப்படக்கூடாத தளமாக தன்னை கட்டமைக்க எத்தனிக்கின்றது. கேள்வி கேட்பவர்களை Mainstream இன் பாதகமான முத்திரையை குத்தி வாயைப்பொத்துவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது மிக ஆபத்தான நிலமையாகும். அதற்குள் கலகம் செய்யும் தருணம் வந்துவிட்டதாகவே உணர்கின்றோம்.

Mainstream இன் ஆபத்துக்களை சதா சுட்டிக்காட்டும் அதற்கு எதிரானவர்களாகவும் அதற்கான மாற்றீடுகளை வைத்திருப்பதாகக் கூறிக் கொள்பவர்களும் Mainstream ஐ விட ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இங்கே தாம் நாம் எமது விமர்சனத்தை முன்வைக்க விரும்புகின்றோம். Mainstream க்கு எதிரானவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் எவ்வாறு பிழையான வகையில் சாதாரண மக்களை வழிநடத்த முற்படுகின்றார்கள் என்பதும் அடிப்படைவாதங்களை உற்பத்தி செய்கின்றார்கள் என்பதும் நாம் மிக அவதானமாகப் பரிசீலிக்க வேண்டிய விடயங்கள்.

ரயாகரன் விடயத்தை நாம் கூர்மையாக அவதானிக்க வேண்டியிருக்கின்றது. ரயாகரனை விமர்சிப்பதற்கு முன்னராக ரயாகரன் கட்டமைக்கும் அரசியல் என்னவாக இருக்கின்றது என்பதைக் கவனமாக ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. ரயாகரனின் மக்கள் மையமான அரசியல் எப்போதும் விரிவுபெற வேண்டியது. குறுக்கல்களை தன்னுள் அனுமதிக்காமல் வளர்ச்சி பெற வேண்டியது. ஆயினும் ரயாகரனின் அரசியல் கருத்துக்கள் எப்போதாவது அதை அனுமதித்திருக்கின்றதா என்றால் இல்லை என்ற மிகச் சோகமான பதிலே எமக்குக் கிடைக்கின்றது.

பின்னவீன காலம் விளிம்பு அடையாளங்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்திய போது, அதன் முற்போக்கமான விடயம் சிலசனாதன மார்க்சியர்களைத் தவிர பெரும்பாலான அறிவுஜீவிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயினும் பிற்காலத்தில் விளிம்பு அடையாளங்கள் அரசியலாக்கப்பட்ட போதும் சரி அரசியல், அடையாளங்களை மீறவிடாமல் மூலதனதிற்காகவும் அதிகாரத்திற்காகவும் அதைக் குறுக்கிய போதும் சரி அதன் பாதகமான அம்சங்கள் அனைவராலும் உணரப்பட்ட தருணங்களை நாம் இன்று காண்கின்றோம். இவ்விடத்திலேயே நவ மார்க்சியர்கள் வர்க்க அடையாளம் என்ற தனி அடையாளம் தவிர்த்தும் பல தளங்களிலுமான சிறுபான்மை அடையாளங்களை முன்னிறுத்துவதை நாம் அவதானிக்கின்றோம். ரயாகரன் போன்ற 'மார்க்சியர்கள்' வர்க்க அடையாள முதன்மைப்படுத்தல்களில் இருந்து எப்போதும் வெளிவந்ததில்லை. அவற்றிற்குப் பல காரணங்கள் உண்டு.

நவ மார்க்சியர்களுக்கு தனியே பொருளாதார அடிப்படையிலான வர்க்க அடையாளத்தில் இருந்து மார்க்சியத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருந்தது. அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது அவ்வாறான தெரிவை மேற்கோள்ளுமாறே. அதுமட்டுமல்லாது தனி அடையாளம் எப்போதும் அதன் தீவிர தன்மையில் குறுக்கல்களை நோக்கி நகரக்கூடியது. குறுக்கல்கள் எப்போதும் அடிப்படைவாதங்களை மட்டுமே உற்பத்தி செய்பவை. அடிப்படைவாதங்கள் பாசிச மனநிலை கொண்டலையும். இவ்வகையான பாசிச மனநிலையே இன்றைய ரயாகரனது தெரிவாக இருக்கின்றது. தான் நிற்கும் இடத்தை ரயாகரன் சரியாக உணரவில்லை என்பதே சோகம். ஏனெனில் அவரது குரல் மக்களுக்கானது. அவ்விடத்தில் நாம் அவருக்காகக் கவலைப்பட வேண்டியுள்ளது.

ரயாகரனது நிலைப்பாடுகள் போன்றதே இன்றைக்கு வேறுபல மார்க்சியர்களது நிலைப்பாடுகளும். அடிப்படைவாதங்களை வகைதொகையின்றி உற்பத்தி செய்வதை அவர்கள் எப்போதும் கனசச்சிதமாகச் செய்துகொண்டேயிருக்கின்றார்கள். Collective of Identities, சிறுபான்மை வாழ்வுகள், சிறுபான்மை என்னும் பன்மை போன்ற விடயங்களை எப்போதும் உணர்ந்து கொள்ளாது மார்க்சியத்தை வாழவைக்கின்றோம் பேர்வழியென்று மார்க்சியத்திற்கு எதிரிகளைக் கட்டமைப்பதையும் அடிப்படைவாத மனநிலையை வளர்த்துச் செல்பவர்களுமாக நம்முன் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். சிவசேகரம், நாவலன், ரயாகரன், சிறீரங்கன் போன்றவர்கள் மீது நாம் இவ்விமர்சனத்தை முவைக்க முடியும். (யமுனா ராஜேந்திரனை முற்றுமுழுதாக இவ்வகைக்குள் சேர்க்க முடியாது. மேற்கூறியவர்களிடமிருக்கும் அடிப்படைவாதம் ஒப்பீட்டளவில் ய. ரா விற்கு இருப்பதாகத் தெரியவில்லை. ய.ரா வை நினைக்கும் போது எமக்கு எஸ்.வி.ஆர் உம் ஞாபகத்தில் வந்து போகின்றார்.)

நாம் சொல்லும் இவ்விடயத்திற்கு இவர்களிடமிருந்து வரக்கூடிய பதிலையும் நாமே இவ்விடத்தில் சொல்லிவிடுகின்றோம். 'எஸ்.வி. ஆர் உம் ய.ரா வும் மார்க்சியத்தை சீர்குலைப்பதற்கு ஏகாதிபத்தியவாதிகள் உற்பத்தி செய்த கருத்துக்களின் அடிவருடிகள்' என்பதே ரயாகரனதும் சிவசேகரத்தினதும் நாவலனதும் சிறீரங்கனது பதிலாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு மிகநிச்சயமாகவே உண்டு. இவ்விடயம் மதவாதிகளது செயற்பாட்டிற்கு ஒப்பானது.

இதற்கான மிகநிச்சயமான காரணம் இவர்கள் மார்க்சியத்தால் கவரப்பட்டு எவ்வாறுதான் வாழ்ந்தாலும் பொருளாதாரச் சிறுபான்மை மக்களது மனநிலையை எப்போது உணர்ந்து கொள்ளாதவர்கள். மார்க்சியத்தின் எதிரிகள் பூர்ஷ்வா வர்க்கத்தில் இருந்தே தோன்றுவார்கள் என்பது எப்போதும் மிகநிச்சயமான உண்மையே. மார்க்சியத்தை பூர்ஷ்வாக்கள் உள்வாங்குவது ஆதரிப்பது என்பது வேறு பூர்ஷ்வாக்கள் கருத்தியல் தளத்தில் அதனைச் செழுமைப்படுத்துவதென்பது வேறு. மேற்படி அனைவரிடமும் எம்மை எதிர்ப்பதற்கு எளிய சமன்பாடு இருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு நிச்சயமகவே உண்டு. அவர்களது கருத்தியலின் பாதக நிலையை அவர்கள் எப்போதும் அறிந்து கொள்வதில்லை என்பது அதற்கான சூழ்நிலையோ மனநிலையோ அவர்களிடம் இல்லை என்பதும் கேலிக்குரிய விடயம் அல்ல. மாறாக சோகமான விடயம். ஏனெனில் இவர்கள் சிலவிடயங்களை நம்புகின்றார்கள். அதைக் கூறுகிறார்கள். அவ்வளவே. நேரடியாக மக்களுக்கு எதிராக எப்போதும் இயங்காதவர்கள்.

புலிகளது தோல்வி மக்களது வெற்றியல்ல என்ற எளிய அடிப்படையை விளங்கிக் கொள்ள முடியாதவர்களைப் பற்றி அதிகம் பேசுவதென்பது எமக்கு உவப்பானதல்ல என்ற போதிலும் சிலவிடயங்களைப் பதிவு செய்தே ஆகவேண்டியுள்ளது. ரயாகரன் பற்றிய விமர்சனத்தை நாம் செய்து 15 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்றுவரைக்கும் அவர் தனது தரப்பில் இருக்கும் தவறுகளை கொஞ்சமாவது திருத்திக்கொள்ளவுமில்லை.

15 மாதங்களுக்கு முன்னர் நாம் ரயாகரனுக்கு சொன்ன விடயங்களை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றோம். அதை மீண்டும் மீண்டும் ரயாகரனுக்குச் சொல்ல வேண்டியுள்ளது. அவருக்கு மட்டுமல்லாது அவருடன் சேர்த்து 4 பேருக்கும் சொல்ல வேண்டியுள்ளது.
/ரயாகரன்.
நீங்கள் சுட்டிக்காட்டும் எதிரிகள் பெரும்பாலானோர் உங்கள் மக்களே. நீங்கள் நேசிக்கும் மக்களே. அவர்களை உங்கள் எதிரி என நீங்கள் கட்டமைப்பது எவ்வளவு மோசமானது. ரயாகரன், இன்று இளஞர்களாக இருப்பவர்களுக்கு ஒரே ஒரு இயக்கத்தை மட்டுமே தெரியும். அது தான் புலிகள். அவர்கள் புலிகள் மீதான விமர்சனக்கருத்தைக் கொண்டிருந்தாலும் புலிகளால் மட்டுமே ஏதோவொரு தீர்வைத் தர முடியும் என நம்புகிறார்கள். உங்களது கடைசிப் பதிவு மிகவும் மோசமானது. உங்களை நீங்களே ஒருவிதமான பாசிச மனநிலைக்கு கொண்டு செல்கின்றீர்கள். கருத்தியல் மீதான அதீத பற்று அடிப்படவாத மனநிலையை வளர்த்துச் செல்லும். அதனால் வன்முறையை மட்டுமே சாத்தியமாக்க முடியும். விடுதலையை அல்ல. உலகம் எப்போதுமே அடிப்படைவாத மனநிலைகளுக்குள்ளேயே தன்னைத் திணித்து பல கோடிப்பேர்களைக் கொன்றொழித்துவிட்டது. இயங்கியல் வழி சிந்திப்பவர்களால் எப்போதுமே அடிப்படைவாத மனநிலையில் இருந்து சிந்திக்க முடியாது. சிந்திக்க கூடாது. அது எவகையிலும் ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றை உருவாக்கிவிட போவதில்லை. எல்லோரையும் இருவிதமான வகைமாதிரிக்குள் அடக்க பார்க்கின்றீர்கள். அது எவ்வளவு கொடுமை தெரியுமா ரயாகரன்?/

சமூகத்தை கணித்தாலோ அல்லது சமன்பாடுகளாலோ எப்போதும் விளங்கிக்கொள்ள முடியாது. அதை அடிக்கடி வலியுறுத்த வேண்டியுள்ளது மிகப்பெரும் சோகமே.
/இராயகரனது சமன்பாடு அவரை புலியை எதிர்க்கும்படி சொல்கின்றது. அதன்படியே அதை அவர் எதிர்க்கின்றார். அவ்வாறே அவரது சமன்பாடு புலியெதிர்ப்புகும்பலை எதிர்க்கும்படி சொல்கின்றது. அதன்படியே அதையும் எதிர்க்கின்றார். இதில் பிரச்சனை என்னவென்றால் அவரது சமன்பாடும் அவர் அச்சமன்பாட்டை நம்பும் விதமும் தான். அச்சமன்பாடு மட்டுமே மக்களை காக்கும் என நம்புகின்றார். ஒருசமன்பாடே வெவ்வேறு சூழ்நிலைகளுக்குள் வாழும் வெவ்வேறு கலாச்சார மக்களுக்கெல்லாம் எல்லா காலங்களிலும் ஒரேவிதமான தீர்வை தரும் என்று 'உண்மையாகவே' நம்புகின்றார். அங்கேதான் பிழை விடுகின்றார். எவ்வாறு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அல்லாவுக்கும் குர்ரானுக்கும் தங்கள் விசுவாசத்தை காடுகின்றார்களோ, இந்து அடிப்படைவாதிகள் மததுக்காக, அப்பாவி இஸ்லாமியர்களை உயிரோடு கொளுத்துகிறார்களோ, ஹிட்லர் எதற்காக யூதர்களை கொன்று குவித்தாரோ, அவ்வாறே வேறொரு தளத்தில் அதற்கு சமாந்தரமான மனவுணர்வுடன் தனது சமன்பாட்டை பூஜிக்கின்றார். செயற்பாட்டு தளம் சமன்பாடுகளை தனது முன்னோக்கிய நகர்வுக்கு மட்டுமே பயன்படுத்தும். சமன்பாட்டுடன் தேங்கிப்போகாது./

Thursday, January 22, 2009

உரையாடல் - 2 (பெயரிலி, அமீபா, சிறீரங்கன்.) - [[ மீள்வாசிப்பு ]]


இவ்வுரையாடல் அலைஞனின் அலைகள் என்னும் தளத்தில் 'பரந்த-அபத்தலியல்வாதம் (Pan-Absurdism) & பரந்த அபத்தக்கவிதை (Pan-Absurd Poetry): ஓர் அறிமுகம்' என்னும் பெயரிலியின் பதிவில் இடம்பெற்றது.

பெயரிலி அபத்தவாதம் பற்றி எழுதி வைத்திருந்ததை மேலும் கீழும் நக்கலாக சிலவிடயங்களை இட்டு நிரப்பி பிரசுரித்ததும் அதற்குக் கீழே நானும் சிறீரங்கனும் பின்னூட்டமிட்டு மகிழ்ந்ததும் தான் இவ்வுரையாடலில் முக்கியமான விடயங்களாகின. என்னைப் பொறுத்தவரை பெயரிலி சீரியசாக எழுதிய பிரதி ஒருகட்டத்தில் பெயரிலிக்கே வேடிக்கையாகிப் போய்விட அவர் அதை parody தன்மையாகப் பிரசுரம் செய்தது கவனிக்கத்தக்கது. ஆயினும், நாம் அபத்தவியலைப் பற்றிக் கூறக்கிடைத்த சந்தர்ப்பமாகவும் அந்நேரத்தில் மார்க்சியத்தின் கூட்டுமனநிலை பற்றிய விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையாலும் அதற்கு முன்னும் பின்னும் அருகேயும் உள்ள விடயங்களைக் கூறக் கிடத்த சந்தர்ப்பமாகவும் பயன்படுத்த எத்தனித்தோம். அந்நேரத்தில் உரையாடலைப் பரவலாகச் சாத்தியமாக்கிவிட வேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கிருந்த அதே நேரத்தில் எழுத்தாளராக நாம் பரிணமித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் மிகுந்திருந்தது. ஆக, சந்தர்ப்பம் கிடைத்த இடத்தில் எல்லாம் பின்னூட்டம் இட்டு மகிழ்ந்த காலங்கள் அவை. அக்கட்டத்தில் பெயரிலியின் தளம் அதற்கான சிறந்த களமாகவும் எப்போது சச்சரவுகள் நிரம்பிய தளமாகவும் காணப்பட்டது எமது உரையாடலைச் சாத்தியமாக்க உதவக்கூடும் என்ற நம்பிக்கை எமக்கிருந்தது மட்டுமல்லாது பெயரிலி சிலவகையான கலகங்களை செய்துகொண்டிருந்தார். (அதிகாரத்திற்கெதிராகக் கலகம் செய்து கொண்டிருந்த நமது ஈழத்துக் கலகக்காரர்கள் எல்லாம் அப்போது கலகம் முடித்து அதிகாரத்துடன் பாலே நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.) எமக்கு கலகக்கார வழிகாட்டிகள் எவரும் இருக்கவுமில்லை. parody யுடன் parody அல்லாதவனவும் parody அல்லாதவற்றுடன் parody களும் உரையாடித்தள்ள வேண்டியதன் அவசியம் உங்களுக்குப் புரியாததல்ல.

தமிழ் எழுத்துக்களின் கலகக்குரல்கள் உருவாக்கிய வேற்றுமை பண்புகள் சமூகத்தின் வேறுமாதிரியை உருவாக்கியது. ஒவ்வொரு போக்கிற்கும் எதிரான குரல்கள் கலக்குரல்களாகவே அமைவதுண்டு. அவையே பாத்தியை மறித்து தண்ணீர் மாற்றுவது போல புதிய பாதைகளைத் திறந்து விடுபவை. நிலைப்பட்ட கருத்தியல்களை உடைத்துப் போடுவதற்கு கலகக்காரர்கள் தேவைப்படுகின்றார்கள். கலக்குரல்கள் வெட்டிய பாத்தியில் செல்லும் தண்ணீரை பிரித்து பலபாத்திகளுக்கும் பாய்ச்சுகின்றது. வெட்டிய பாத்தி வழியே கட்டமைக்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் செழுப்படைந்த பயிர்ப்பிரதேசங்கள் தவிர்த்து வாடிநின்ற பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முற்படுவது கலகக் குரல்களே. எச்சமூகப்போக்கும் அவற்றை மறுத்துவிட முடியாது. ஈழத்துத் தமிழ்ச்சூழலில் சோபாசக்தியின் குரல் அவ்வாறானதொரு குரலே.

இவ்விடத்தில் கூட்டுமனநிலை தொடர்பான பித்தில் தமிழ்மணம் தொடர்பான சமூகம் தன்னை தேக்கிக்கொண்டிருந்தது. அம்மனநிலைக்கு எதிராக தனிமனம் என்பதை நிறுத்த வேண்டிய தேவை எமக்கிருந்தது. இங்கே, நம் கூட்டுமனநிலையை முற்றாக விலக்குபவர்கள் அல்லர். ஆயினும் தனிமனநிலை கருத்தியல் பக்கம் மூடப்பட்டிருந்தது போன்ற உணர்வு எம்மை கூட்டுமனநிலைக்கு எதிராக தனிமனநிலையை முன்வைக்கத் தூண்டியது. தனிமனநிலை ஏற்பின் அல்லது அங்கீகரிபின் பின் ஊட்டுமனநிலைக்கும் தனுமனநிலைக்கும் இடையிலான புள்ளிகளைக் கண்டடைவதே எமது நோக்கமாக இருந்தது. ஆயினும் அதற்கு சிறீரங்கன் எம்மை விடவில்லை. தனிமனநிலையின் பாதகமான அம்சங்களை அவர் எம்முன் வைத்து உரையாடலைத் தொடங்கினார். அவ்விடத்தில் முற்றுமுழுதான நனிநிலை மறுப்பு நிலையை உடைக்க வேண்டிய நிலைப்பாட்டை நாம் எடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. அவ்வுடைப்பின் பின்னர் அவர் முன்வைத்த காரணிகளை ஏறுக்கொண்டு அடுத்தகட்ட உரையாடலை ஆரம்பிக்க வேண்டிய தேவை தொடர்பாக நாம் ஆவலுடன் இருந்தோம். ஆயினும், இன்றுவரை அது எமக்குச் சாத்தியப்படவே இல்லை என்ற வருத்தம் எமக்கு உண்டு.

சிறீரங்கன் அவர்கள் எமது இன்னூட்டத்தின் ஒருபகுதியைப் பிடித்து தமது உரையாடலைத் தொடங்கிய போதே அதன் ஆரோக்கியமின்மைபற்றி நாம் உணர்ந்திருந்தோம். ஆயினும் கார்ல் பொப்பரின் சாதக அம்சங்களைக் கொண்டு உரையாடலைத் தொடர்ந்தோம். சிறீரங்கன் சொல்வது போன்று கார்ல் பொப்பர் மார்க்சியத்தை கருவறுக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய குழந்தை அல்ல. அவரது சிலவகைப்பட்ட கருத்தியலை ஏற்றுக்கொள்ள முடியத சனாதன மார்க்சியர்கள் அவரை மக்கள் விரோதியாகக் கட்டி அழகு பார்த்தார்கள். இன்றைய நவ மார்க்சியர்கள் சிலர் அவரது சாதகமான கருத்துக்களை உள்வாங்கியுள்ளார்கள். ஹெபர்மாசினது கருத்தியலின் அடித்தளத்தில் கார்ல்பொப்பரின் கருத்தியல் இழையோடுவதை உணர்ந்துகொள்ள முடியும். இன்றைய் ஹெபர்மாஸ் கூட மார்க்சியத்தின் அடிப்படைகள் மீது கேள்விகளயும் விமர்சனங்களையும் முன்வைத்தார். ஆயினும், ஹேபர்மாஸ் ஃபிராங்பர்ட் பள்ளியின் சிந்தனை மரபின் தற்போதைய காவலர் என்ற வகையில் சனாதன மார்க்சியர்கள் வாய்பொத்தி மவுனித்து காதுகொடுத்து கேட்டிருக்கின்றனர். இன்று ஹேபர்மாஸ் இருக்கும் இடத்தில் கார்ல் பொப்பர் இருந்திருந்தால் சிலவேளை சனாதன மார்க்சியர்கள் ஆகா மார்க்சியம் அருமை என இன்புற்றிருந்திருக்கக்கூடும் என்பது மார்க்சியர்கள் மீது நாம் காணும் பலமான விமர்சனமாக இருக்கின்றது.

கருத்தியல் தேக்கம் என்பது எப்போதும் எதிரிகளைக் கடமைக்கும். எதிரிகளைக் கட்டமைக்கும் தன்மையின் மூலம் மட்டுமே அவர்களது கருத்தியல் இருப்பு சாத்தியமாகும். அவர்களால் எதிரிகளைக் கட்டமைக்க முடியாமல் போனால் அவர்களது இருப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தமது வேலையைச் செவ்வனே செய்கின்றார்கள். ஃபிராங்பர்ட் மார்க்சியப் பள்ளி இருந்திருக்காவிட்டால் மார்க்சியம் என்னும் மானுடநேயத் தத்துவம் என்று சிலவேளை நூலகங்களில் மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடும். பிராங்க்பர்ட் சிந்தனை மரபு கூட விமர்சனமின்றி வளர்ந்த மரபல்ல. அவர்கள் எதிர்கொண்ட விமர்சனங்களும் எண்ணிலடங்காதவை. இன்று, நவமார்க்சியர்கள் அழ்காக இருத்தலியல் மார்க்சியம், அமைப்பியல் மார்க்சியம் பற்றி பேசக்கூடியதாக இருக்கின்றதென்றால் அதற்கான உழைப்பை நாம் மறுத்துவிட முடியாது.

இன்றைய மானுடவியலாளர்கள் கூறும் சமூகப்பிரச்சனை என்பதன் சூழல்தான் அதன் முக்கிய பரப்பு என்பதை இன்றைய தத்துவவாதிகள் இலகுவாக நிராகரித்து வருகின்றார்கள். அதனை எப்போதும் நிராகரிகவே முடியாது. ஒரு பிரச்சனையத் தீர்வு காண்பதற்கு ஐரோப்பிய சூழலில் ஐரோப்பியனால் கண்டுபிடிக்கபடும் கருவி என்பதை நாம் கவனத்துடன் அணுக வேண்டும். அதைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். கீழைத்தேயப் பார்வையை முன்னிறுத்திய எட்வர்ட் சைத் போன்றவர்கள் பெரும்பாலும் கருத்துயல் ரீதியான பார்வைகளை முன்வைத்தாலும், அவை பலதளங்களுக்கும் மிக முக்கியமானவை. வாழ்வின் போக்கு என்பது பலவிதமான் கண்ணிகளை எதிர்கொள்வது. ஒவ்வொரு கண்ணியும் பல்சாத்தியப்பாடுகளுக்கான வெளிவழிகளைக் கொண்டிருக்கும். நாம் தெரிவு செய்த வழி அந்நேரத்தின் மற்றைய வழிகளின் நிரகரிப்புக்கான சாத்தியங்கள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. தெரிவுசெய்த வெளிவழியின் பயணத்தின் பின்பு எதிர்கொள்ளும் உதிய கண்ணி என்பது ஏற்கனவே எதிர்கொண்ட கண்ணியின் குழந்தை என்பதை நாம் எப்போதும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். இங்கே தான் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீது எமது சந்தேகத்தை பலமாக முன்வைக்க வேண்டும்.

மார்க்சியத்தை விஞ்ஞானம் என ஏற்றுக்கொள்வதன் முட்டாள்தனத்தை நாம் இன்றைக்கு உங்களுக்குப் புரிய வைக்கத் தேவை இல்லை. சமூகவியலின் மாற்றத்துடன் தனது மானுடநேயத்தன்மையை மார்க்சியம் மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் எப்போதும் சமூகவியலுக்கு மேல் கொண்டு போய் விஞானத்தை வைத்து அழகு பார்ப்பவர்கள் அல்லர். சமூகவியலுக்கு மேல் விஞ்ஞானம் அமர்ந்திருந்து அருள்பாலிக்கவும் முடியாது. கூடாது. விஞ்ஞனத்திற்கு மேல் சமூகவியலைப் பொருத்திக் கொள்ளும் போது மட்டுமே மானுடநேயத்துடன் இயங்க முடியும். இன்றைக்கு மானுடவியல் evolutionary anthropology மற்றும் socila anthroplogy என்று பிளவுண்டு கிடக்கின்றது. இவ்விடத்தில் evolutionary anthropology ஐ நாம் social anthroplogy க்கு கீழே கொண்டுபோய் வைக்க வேண்டும். விஞ்ஞானம் 'உண்மைகள்' மிது கட்டப்படுவது. ஆயினும் விஞ்ஞான உண்மைகள் என்பது சமூகத்தின் கட்டமைப்பில் இருந்து உருவாகுபவை. அதை தீர்மானிக்க ஆயிரம் காரணிகள் இருக்கின்றன. இதை நாம் மனதில் வைத்துக் கொண்டால் பலபிரச்சனைக்ளுக்கு இலகுவில் தீர்வு கண்டுவிடலாம். இதை நான் எப்போதும் சிறீரங்கனுக்கு சொல்லவேண்டியிருக்கப் போகின்றது என்பது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியவிடயம் அல்ல. மாறாக மிகுந்த கவலையை உருவாக்குவது.

உரையாடல் - 2 இல் சிறீரங்கனுடனான ஊடாட்டம் எனக்கு சந்தோசம் தருவதாக அமையவில்லை. அவரது தனிப்பட்ட சிலநிலைப்பாடுகள் மீது அவரை நாம் ஆதரிக்க முன்வருகின்ற போதிலும் கருத்தியல் மீதான அதீத பிடிப்பு உருவாக்கம் ஒதுக்கும் வெளிகள் மற்றும் மாறாக் கருத்தியல் வன்முறை என்பது ஒப்பீட்டளவில் இராயகரன் அவர்களை விட சில சாதக அம்சங்களைக் கொண்டிருக்கும் போதிலும் பொதுவாகப் பார்க்கும் போது தவறான விடயங்கள் எனவே கூறமுடிகின்றது. இவர்களின் தேக்கம் இவர்களுக்கு பின் வருகின்றவர்களை தேங்கிப் போகச்செய்கின்றது. உதாரணமாக மயூரன் போன்றவர்களின் கருத்துக்கள் இவர்களின் பாதையில் பூத்த செடிகளே. இவர்கள் தவறுவிடும் தருணம் இக்கட்டமே என்பதை இவர்கள் புர்ந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டில் இருந்து உருவாகும் நூற்றுக்கணகான இளைய அறிவுஜீவிகளுக்கு உல்கத்தில் இன்று எந்த மார்க்சியர்களிடமும் இல்லாத கருத்தியல்களை விதைத்து பிழையான பாதையில் அழிநடத்தப் போகின்றார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ந்திருக்க முடியவில்லை. இவர்கள் கால மார்க்சியத்தை முதலாளித்துவம் தனக்குச் சார்பாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டது. இவர்களும் அதே மார்க்சிய வாரிசுகளை உருவாக்கும் போது அவர்களும் முதலாளித்துவ அங்கமாக தமது புரட்சியை நடாத்துவர்கள் என்பது நிச்சயம். எழுச்சி பெறக்கூடிய சமூகத்தின் தோல்வி இது என்பதை ஒருவராவது உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே இதனை இங்கே பதிவு செயக்கூடியதாக இருக்கின்றது. சிறீரங்கன் என்கின்ற தனிநபர் மீதான நேசம் எப்போதும் எமக்கு பொங்கிவழிகின்றது இராயகரன் மீதான நேசம் போலவே.

உரையாடல்- 1 (இரயாகரன், பெயரிலி, மயூரன், அமீபா) - [[ மீள்வாசிப்பு ]]


இவ்வுரையாடல் அலைஞனின் அலைகள் என்னும் தளத்தில் இரயாகரனுக்கு மேலதிகமாக ஒரேயொரு கேள்வி (அல்லது வேண்டுகோள்) என்னும் பெயரிலியின் பதிவில் இடம்பெற்றது.

இவ்வுரையாடலில் இரயாகரன் பங்குபற்றாத போதும் அவரை மையமாக வைத்தே உரையாடல் ஆரம்பமாகியது. இவ்வுரையாடலில் இரயாகரனுடனான ஊடாட்டம் எமக்கு முக்கியமானதாக இருந்தது. இதில் இருந்து புதியவகையான புள்ளிகளை உருவாக்க வேண்டிய தேவை அவசியமாகப்பட்டது. இவ்வுரையாடலின் பின்பு ஏதோவொரு விதத்திலான இரயாகரனின் இருப்பின் அவசியத்தை நாம் உணர்ந்து கொண்டபோதும் நிலையாக வரையப்பட்ட தளத்தில் இருந்தான மாற்றமற்ற கருத்துக்களின் போதனை சமூகத்திற்கு வேறுவகையில் பின்னடைவு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. பொருளாதார அடிப்படையை மட்டும் வைத்து கருத்தியல்களை வளர்த்தெடுப்பதையும் சிதைப்பதையும் நாம் கடந்திருக்க வேண்டும். அனைத்துச் செயற்பாடுகளையும் பொருளாதார மையமாக யோசிக்கமுடியும் அணுக முடியும் என்ற கருத்தாக்கத்தில் இருந்து லெனினே விடுபட்டிருந்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் என நினைக்கின்றேன். அதற்கருகான புள்ளிகளினது வேறுவகையான அணுகுமுறைகளினதும் தேவை மறுக்கப்பட முடியாதது. வர்க்கப் புரட்சியின் ஆரம்பத்திற்கு பொருளாதார மைய அணுகுமுறையின் அவசியம் ஜேர்மன் மற்றும் சோவியத்யூனியனில் அவசியப்பட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆயினும், புரட்சியின் நீட்சிக்கும் அதன் தொடர்ச்சிக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் அவசியமாகின. சனாதன மார்க்சியவாதிகள் அதன்பின்னரும் மார்க்சிய நூல்களுக்குள் அனைத்தையும் கண்டுபிடித்துவிடலாம் எனத்தேடித்திரிந்தது எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

மார்க்சியப் பொருள்முதல்வாதம் பொருளாதார மையமான தத்துவம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. உலகின் அனைத்துவகையான போக்குகளையும் பொருளாதார மைய அரசியலை வைத்து 'விளக்கி' விடவும் முடியும். அவை அவை வெறும் விளக்கமாகவும் சுயதிருப்திக்கான கண்டுபிடிப்புகளாகவும் மாத்திரமே எஞ்சிப்போகும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. அவை ஒற்றைப்பரிமாணமான கருத்தியல் கட்டுமானம் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. அவற்றின் 'முக்கியத்துவத்தில்' அல்லது 'மையப்படுத்தலில்' மறைந்திருக்கும் புள்ளிகளை வெளித்தெரிய வைக்கவேண்டிய தேவை அனைத்துவகையான அறிவுஜீவிகளுக்குமானது. தேங்கும் ஒற்றைப்போக்கென்பது பாசிசத்தை உருவாக்கும் புள்ளி என்பதை நாம் நம்புகின்றோம். உடைப்புகள் என்பது எப்போதும் பொருளாதார மேலாதிக்கத்திற்கு மாத்திரமானதல்ல. அவை பலதளங்களிலும் நிகழ அவற்றிற்கு சுதந்திரம் உண்டு. பொருளாதார மையப்புள்ளிக்கு மேலதிகமாக வேறுபுள்ளிகளில் நிகழும் உடைப்புகளை நாம் இலகுவாக பொருளாதார அடிப்படையை வைத்து நிராகரித்துவிட முடியாது. பலவகையான புள்ளிகனின் இருப்பையும் நாம் மறுதலித்து விட முடியாது. ஒற்றைமைய சார்பியல் பார்வை என்பது விலக்கும் புள்ளிகளை உருவாக்குவது. அவற்றின் விலக்கல்களையும் ஒடுங்கல்களையும் பொருளாதார மைய பார்வையை வலியுறுத்துவோர் எதிர்கொண்டே ஆக வேண்டும். (இதுபற்றிய விரிவான பார்வைகளை வேறு உரையாடல்களில் பார்ப்போம்.) இராயகரனின் பார்வைக் கட்டுமானத்தை விளக்கவே நாம் மேற்கூறிய விடயங்களைக் கூறவேண்டி இருந்தது. அவரது பார்வைக் கட்டுமானம் என்பது பொருளாதார மைய அரசியலுக்கு மிக உகந்தது. ஆயினும் அதில் இருந்து மாறுபட்ட புள்ளிகளையும் வேறு தொடர்ச்சிகளையும் தனது பார்வைக் கட்டுமானம் சார்ந்து நிராகரித்து நிற்பதுதான் வேதனையானது. உலகை ஒற்றைத் தொலைநோக்கியால் பார்த்துவிட முடியாது.

இனி, இரயாகரனது பதிவை முன்வைத்து சிலவிடயங்களைக் கூற நினைக்கின்றோம். இராயகரன் மக்கள் நலன் என்ற தளத்தில் இருந்து தனது உரையாடலை நகர்த்திச் செல்கின்றார். அவர் வேண்டுகோள் விடுக்கும் மக்களில் குறிப்பிட்ட சதவிகத்திலானோர் புலிகளை ஆதரிப்போர். ஆதரிக்காதவர்களில் பெரும்பாலோனோர் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக புலிகளை விட வேறு மாற்றுச் சக்தி இல்லை என்று நம்புபவர்கள். குறைவான சதவிகிதத்திலானோர் புலிகளை மாற்றுக்கருத்தின்றி எதிர்ப்பவர்கள். நிரந்தரப் புலி எதிர்ப்பாளர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்திலானோர் பேரினவாதம் தனது இருப்பை நியாயப்படுத்தும் நோக்கில் வழங்கும் சலுகைகளைப் பெறுபவர்கள். மிகுதி எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானோர் புலிகளால் பலவிதத்திலும் பாதிக்கப்பட்டவர்கள். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், அதிகாரம் பறிபோனவர்கள், சகோதரங்கள் சொந்தங்களை இழந்தோர், (புலிகளால் சுடப்பட்டு) தெளிவான எதிர்காலத்திட்டத்துடன் நகரமுடியாமல், ஓரிலக்கை மட்டுமே வைத்து நகரும் புலிகள் போன்ற இயக்கத்தினர் அரச இயந்திரத்திற்கு எதிராக போராடும் போதான மக்கள் எதிர் நிலைப்பாடுகளால் நொந்து போன சமூகத்தினர் இவ்வகைக்குள் வருகின்றனர். இங்கே, நான் சொல்ல வருவது இராயகரன் நிற்கும் தளத்தில் நின்றவாறு புலிகளை எதிர்ப்பவர்கள் மிகக்குறைவான சதவிகிதத்தினரே.

நிராகரிப்பின் அரசியலின் காலம் முடிவடைந்து விட்டது. எதையும் முற்றாக நிராகரித்து செய்யப்படும் அனைத்து அரசியல்களும் வெவ்வேறு பார்வைகளில்- ஒவ்வொன்று சார்பாகவும்- நிராகரிப்பு அரசியலாகவே கொள்ளப்படும் அபாயக்காலகட்டம் இது. வித்தியாசங்களின் பெருக்கத்தில் ஒடுக்கப்படும் வர்க்கம் மாத்திரமல்ல ஒடுக்கும் வர்க்கமும் சேர்ந்தே பிளவுற்றுப் போய்விட்டது. அவற்றிகு இடையே முதலாளித்துவம் தன்னை வாழவைத்தவாறேயிருக்கிறது. உலகசந்தையின் வடிவம் மாறிவிட்டது. புதிய வடிவத்திற்குள் முதலாளித்துவம் தன்னைப் பொருத்தியிருக்கிறது. இங்கே, முதலாளித்துவத்தின் தெளிவான வரைபடம் எம்மிடம் இல்லை. அதற்கான தெளிவான வரைபடம் வரும் போது மாத்திரமே புதிய வர்க்கத்தை அடையாளப்படுத்த முடியும். அதை மீளுருவாக்கம் செய்து வெளிப்படுத்த முடியும் என நம்புகின்றனர் நவ மார்க்சியர்கள். இங்கே, நான் சொல்ல வருவது இதில் இருந்து இன்னும் வித்தியாசப்பட்டது. தேசியவாதக் கருத்தியலும் அதற்குப் பின்னர் சோசலிசப் பெண்ணியம் என்னும் கருத்தியலும் வளர்ச்சிபெற்ற போது அக்காலத்தைய மார்க்சியர்கள் அதை இலகுவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அக்கட்டத்திலேயே, எதிர்காலம் பிளவுக்கான காலம் என்பதை உணர்ந்து மார்க்சியர்கள் செயற்பட்டிருக்க வேண்டும். இன்று மார்க்சியர்கள் பின்னமைப்பியல்வாதிகளை மார்க்கிய விமர்சகர்களாக மார்க்கியத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டியவர்களாகக் கொள்ள முடிகின்றது. ஆயினும் நாம் இன்னமும் இது குழப்பவாதத்தில் முடியும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பிளவின் பின்பான காலத்தில் எதையும் ஒன்றிணைக்க முடியாது மார்க்கியர்கள் திண்டாடுவதில் பிரயோசனம் இருக்கப்போவதில்லை. பிளவை வகைதொகையற்று ஏற்றுக்கொள்ளும் போதும் அங்கீகாரத்தின் சமநிலைக்கு சமூகம் தன்னை தற்காலிகமாக நிலைநிறுத்த எத்தனிக்கும். அக்கட்டத்தில் சில ஒத்த புள்ளிகளைக் கண்டடைய முடியும். பிளவுகளுக்குள் இயங்குவதற்கான மனநிலையை வளர்த்துக்கொள்வது தான் எம்முன் உள்ள தெரிவே தவிர மாறாக பிளவை எதிர்ப்பதும் அதனை மறுதலிப்பதும் அல்ல. நிராகரிப்பு அரசியலின் காலம் தன்னை முடித்துக்கொண்டு விட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் இயக்கத்தின் இருப்பை மறுத்து எதுவும் செய்துவிட முடியாது என்ற நிலையில் இருந்து மட்டுமே அதனுடன் தொடர்புபட்ட மக்களை அவர்களின் அரசியலை மேற்கொள்ள முடியும். மாறாக நாம் நிராகரிப்பின் அரசியலில் இருந்து என்ன செய்தாலும் அதுவும் மக்கள் விரோதமானதே. இராயகரன் எதிர்க்கும் புலிகளின் அழிவின் பின்னர் சமூகத்தில் இருந்து அந்நியப்படப்போகும் சமூகக்கூட்டம் மக்கள் இல்லையா. புலிகளுடன் சேர்ந்து சமூக நோக்கோடு யாரும் வேலை செய்துவிடவில்லையா? அவர்களையும் நாம் பாசிஸ்டுகள் எனக்கூறி நிராகரிக்கும் காலம் கடந்துவிட்டது. நாம் எப்போதும் ஒரேகருத்தில் இருப்பதென்பதே ஒருவித பாசிச நிலைதான். சூழல் என்பது எப்போதும் மாறுவது. அதற்கேற்றவாறு எம்மை மாற்றிக்கொள்ள முடியாவிட்டால் நாம் ஏதோவொருவிதத்தில் அந்நியமாகி நிற்கின்றோம் என்பதே பொருள். நாம் வளர்க்கும் நிராகரிப்பின் கருத்தியல்வெளிக்குள் அகப்பட்ட மக்கள் கூட்டம் என்பதும் எமது நேசத்திற்கு உட்பட்டதே. இராயகரன் ஆசைப்படும் புலிகளின் அழிவு என்பது ஒருவகையில் அவர் நேசிக்கும் மக்கள் கூட்டத்தின் அழிவுதான். அதை அவர் எப்போதும் விளங்கிக் கொள்ளவில்லை என்பது எமக்கு மிகவும் துயரமானது.

மக்கள் சார்பு என்பது எப்போதும் நிரந்தரமான கருத்தியல் அல்ல. அது யாந்திரிக வடிவமும் அல்ல. அது காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றக்கூடியது. காலத்திற்கு ஏற்றவாறு தனது கருத்தியலைக் கூட மாற்றக்கூடியது. நாம் ஒரே கருத்தியலில் இருந்தவாறு பார்க்கும் பார்வை என்பதே கூட மக்கள் எதிர்நிலைப்பாடாக இருக்கலாம். மேலும், பொருளாதார அடிப்படை சார்ந்தே மக்கள் பார்வை என்பது பன்மையிலானது. ஒன்றுக்கொன்று முரணான பார்வைகளை வழங்கும் மக்கள் கூட்டம் எமக்கும் முன் இருப்பதில் நாம் வியப்படையத் தேவை இல்லை. முரண்களுக்குள் இயங்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்காக எமது மனதை தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும். மக்கள் நிலைச்செயற்பாடு என்று கூறிக்கொள்பவர்கள் கூட அவற்றை தெளிவாக விளங்கிக்கொண்டவர்கள் அல்ல.

மக்கள் அரசியல் என்பதை நாம் எப்போதும் யாந்திரிகமாகக் கட்டமைத்து வைத்திருக்க முடியாது. ஈழத்து மக்களினதும் அதைச்சுற்றியுள்ள மக்களினது மனநிலை தொடர்பாக நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டும். மார்க்சிய- பொருளாதார அடிப்படையை முன்னிறுத்தித் தீர்மானிக்கப்படும் மக்கள் அரசியல் பார்வை என்பது மிகவும் குறுக்கலாக, 'மக்கள்' நிராகரிக்கும் பார்வையாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது. மார்க்சிய-லெனினிய அடிப்படையிலான கருத்தியல் மூலம் கட்டமைக்கப்பட்ட இராயகரனின் பார்வை என்பதை நாம் இவ்விடத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் போதாமைகளை முன்னிறுத்தி அதற்குப் பின் மார்க்சியர்கள் நீண்ட தூரம் பயணம் செய்துவிட்டார்கள். இராயகரனின் பார்வையில் உள்ள அடிப்படைகளின் நியாயங்களை எவராலும் மறுக்கவே முடியாது. ஆயினும் தன்னை மாற்றியமைக்க முயற்சிக்கும் மார்க்சியத்தொடர்ச்சியை அவர் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அல்லது குறைந்தபட்சம் போஸ்ட் மார்க்சிய உரையாடல்கள் ஏன் நிகழ்கின்றன என்றாவது அவருக்குள் கேள்விகள் எழ் வேண்டும். இங்கே, மேற்கினது போஸ்ட் மார்க்சிய சிந்தனைகள் கூட எமது சமூகத்திற்கு எவ்வாறு பொருத்தப்பாடாக உள்ளது என்ற கேள்வி எமக்கு முக்கியமானது. போஸ்ட் மார்க்சியர்களினது பெரும்பாலான உரையாடல்கள் அமெரிக்க-ஐரோப்ப மையவாத சமூகப் பரப்புகள் தொடர்பான உரையாடல்களே. இராயகரன் குறைந்த பட்சம் இந்திய மார்க்சியரான இஜாஸ் அஹமட் இனது பிரதிகள் பற்றியாவது தனது உரையாடல்களைத் திசைதிருப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மிகுதியாகி நிற்கின்றது.

அமெரிக்க-ஐரோப்ப மைய வாத போஸ்ட்-மார்க்சிய உரையாடல்களில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் விடயங்கள் தவிர்த்து எமக்கு முக்கியமான விடயமாகப்படுவது கிராம்சிய அடிப்படை மார்க்சியம் ஆகும். மூன்றாமுலக நாடுகளினது முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஏகாதிபத்தியப் பிரசனைகள் ஆகும். தென்னமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய நாடுகளினது மார்க்சியத்தை வரையறுக்க வேண்டிய தேவை எமக்கு முன்னுள்ள கடமையாகும். இதனை இராயகரன் நிச்சயமாக புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். தென்னமெரிக்க நாடுகளினது போராட்டங்களில் இருந்து நாம் எமது கருத்தியலுக்குத் தேவையான விடயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இடதுசாரியத் தேசியத்தை முன்னிறுத்தியவாறு நகர்ந்த விதம் பற்றிய தெளிவு எமக்கிருக்க வேண்டும். அங்கே இருந்த சர்வதேசியவாதிகள் எவ்வாறு அதற்கெதிராகச் செயற்பட்டார்கள் என்றதெளிவையும் நாம் பெற்றுக்கொண்டே ஆகவேண்டும். அவ்வாறே வர்க்கம் என்பதை முறையாக வலுப்படுத்த முடியாத ஆபிரிக்க சமூகத்தில் மார்க்சியத்தை அதேமாதிரி நடைமுறைப்படுத்த முயற்சிக்கக் கூடாது. இங்கே கறுப்பு மார்க்சியத்தினதும் ஆபிரிக்க மார்க்சியத்தினதும் சில வரையறைகளையும் நடைமுறைகளையும் நாம் நிச்சயமாக அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறே ஆசிய பரப்புகளில் மார்க்சியத்தில் செயற்பாடுகளை நாம் வரையறுக்க வேண்டும். மார்க்சியத்தின் இவ்வகையான பிளவும் பிளவனுமதிப்பினூடான ஒன்றுபடுதலும் மட்டுமே சர்வதேசியக் கருத்தியலை பலப்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இராயகரன் இதனை அறிந்துகொள்ளும் போது மாத்திரமே அவரது மக்கள் அரசியலை உண்மையாக மேற்கொள்ளுவார். அல்லது மார்க்சியத்தின் போதாமைகளினூடாக தம்மை வலுவாக நிலைநிறுத்த எத்தனிக்கும் முதலாளித்துவத்திற்கு சார்பாக அவர் மறைமுகமாக இயங்குவதை அவர் எப்போதுமே அறியப்போவதில்லை. நாம் இராயகரனிடம் இருந்து எதிர்பார்ப்பது ஈழத்து மார்க்சியம் தொடர்பான அவரது பிரதிகளையே தவிர சர்வதேசியப் புரட்சிகளினது பதாகைகளை அல்ல. ஈழத்து மார்க்சியத்தை பற்றிய வரையறைகளை அவர் உருவாக்கத் தொடங்கும் போது அவர் தனது முற்சாய்வுகளைக் களைந்தே ஆகவேண்டும். முற்சாய்வுகளில் இருந்து மக்கள் சார்பான அரசியலை மேற்கொண்டுவிட முடியாது என்பதை யார்தான் அவருக்குச் சொல்லிவிட முடியும். பிரபாகரன் எவ்வாறு கதவுகளை இறுகச் சாத்தியவாறு நிற்கான்றாரோ, அதைவிட மேலதிகமாக இராயகரன் கதவுகளை மாத்திரமல்லாது படலையையும் சேர்த்தே சாத்தியவாறு நிற்கின்றார். இதுதான் மக்கள் விரோதத்தின் பக்கம் என்பதை அவருக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவது என்பதுதான் எனக்கு முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி.

இரயாகரனை நோக்கி பெயரிலி கேட்ட கேள்விகளில் எம்மால் சில உடன்பாடுகளை எட்ட முடிந்தாலும் அவர் இரயாரனை ஆதரிக்கும் காரணங்கள் பலவற்றில் எம்மால் உடன்படமுடியவில்லை. விஸ்வானந்த தேவரின் கருத்துக்களை காப்பாற்றுவதென்பது நாம் பிறப்பதற்கு முன்னர் 25 வருடங்களுக்கு முன்னர் அவர்கூறிய கருத்துக்களை காவித்திரிவதல்ல. மாறாக அதனைச் செழுமைப்படுத்துவதே என்பதே இராயகரன் மீது நாம் காணும் குறையாக இருக்கின்றது. பிரெஞ்சுப் புரட்சியில் பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைப்பாடுகளில் இருந்தும் அதன் வெளியில் இருந்தும் வலதுசாரிய அரசியல் தன்னை நிரப்பிக் கொண்டதை நாம் மறந்துவிட முடியாது. கருத்துக்களை இறுக்கமாகப் பற்றி நிற்பதே பாசிச நிலையாகும். தனது கருத்துக்களை மாற்றத்திற்கு உட்படுத்தாதவன் தான் உண்மையான பாசிஸ்ட் ஆவான். லெனின் தேசியம் தொடர்பான கருத்தியல்களை முன்னெடுத்த போது மார்க்சிய வெறியர்கள் இருக்கவில்லை என நினைக்கின்றேன். இருந்திருந்தால் லெனினை அன்டி-மார்க்சிஸ்ட் என முத்திரை குத்தி அடித்திருப்பார்கள். அவ்வாறே இன்றைக்கு சர்த்தர் நவ மார்க்சியர்கள் கொண்டாடப்படுகின்றார். இருத்தலியம், இருத்தலிய மார்க்சியம் எனப் பணிவன்போடு அழைக்கப்படுகின்றது. அவ்வாறே பின் மார்க்சியர்களை இன்றைய மார்க்சியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளத்தலைபடுகின்றார்கள். தெரிதாவை மார்க்சியத்தை வளப்படுத்தியவர் எனச் சொல்லும்பார்வை கூட நவ மார்க்சியர்களிடம் வந்திருக்கின்றது. ஆக, மார்க்சியத்தை எதிர்த்தே சமூக தத்துவ மரபு வளரவேண்டியிருப்பதாக இருக்கும் இப்போக்கு எவ்வளவு கேவலமானது என்பதை மார்க்சிய அடிப்படைவாதிகள் விளங்கிக்கொள்ளப் போவதில்லை.

இவ்வாறே, இலங்கையில் தேசிய இனவிடுதலைப் போராடத்தின் ஆரம்பத்தில் மார்க்சியர்கள் எடுத்த நிலைப்பாடுகளை இராயகரன் அறியாமல் இருக்கப்போவதிலை. விச்வானந்த் தேவன் சனாதன மார்க்சியர்களுடன் தான் பிரச்சனைப்பட்டார். தேசியமறுப்பு மார்க்சியர்களுடனான பிரச்சனையின் பின்புதான் அவரால் புதிய கருத்தியலின் பக்கம் சாய முடிந்தது. அந்நேரத்தில் ரஷ்ய சார்பு மார்க்சியர்கள் எடுத்தநிலைப்பாடுகளை மல்லிகை இதழ்களில் இருந்து நாம் விபரமாக அறிந்துகொள்ள முடியும். இதுதான் மார்க்சியர்களின் வரலாறு. மார்க்ஸ் என்ற மக்கள் நலனுக்காக அறிவுழைப்பைச் சாத்தியமாக்க்கிய பேராசான் இவற்றை அனுமதிப்பாரா என்பதைக் கூட மார்க்சிய மதவாதிகள் உணர்ந்துகொள்ளப் போவதில்லை.

இன்று அமைப்பின் பெயர்களை வைத்தே அதனை என்.ஜீ.ஓ வா இல்லையா என தீர்மானிக்குமளவிற்கு மார்க்சிய வாரிசுகள் வளர்ந்துவிட்டார்கள். சில சமன்பாடுகளின் மூலம் அனைத்துவகையான பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணும் வசதியை நமது இன்றைய புதிய 'மார்க்சியர்கள்' பெற்றிருக்கின்றார்கள். அவ்வகையான ஒருவர்தான் மார்க்சியத்தின் அடிப்படை கூடத் தெரியாதது மட்டுமல்லாது அதனை அறிந்துகொள்ள எதுவித முனைப்புமற்ற மயூரன் என்னும் பேர்வழி. மயூரனினது கருத்தியல் தெளிவை மேற்கூறிய உரையாடலில் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். மயூரன் கூறுகிறார் "மார்க்சீயத்தை கருவறுப்பது எப்படி என்று இரவுபகலாக சிந்திப்பதும் பண்பாட்டின் உதிரிகளாய் அலைவதும்தான்." இதைத்தான் சர்த்தர் காலத்திலேயும் அமைப்பியலின் காலத்திலேயும் பிரெஞ்சு மாணவர் புரட்சியின் போதும் சரி தற்போது பிரசண்டவின் நேபாள மார்க்சியத்தினை கட்சிக்குள்ளேயே மறுதலிக்கத் தொடங்கியுள்ள சில மார்க்சியர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

சோவியத் யூனியனின் உடைவை ஜனநாய சக்திகளின் வெற்றியாகவும் அதற்குப் பின் மார்க்சியத்தைச் செழுமைப்படுத்த வேண்டிய வரைக்கும் உரையாடும் போஸ்ட் மார்க்சியர்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், மயூரன் போன்ற ஈழ்த்து இளைய விடிவெள்ளிகள் சனாதன மார்க்சியர்களிடம் கடன்வாங்கிய அதே மனநிலையைத் தக்கவைத்து தம்மை சமூகத்தில் பலமாக நிறுவிக்கொள்கின்றனர். மார்க்சியர்கள் மீதான விமர்சனத்திற்கு "ஆட்சியில் அமெரிக்கா உங்கள் கைகளில் நாசிசத்தின் மூலவர்களின் கோட்பாட்டுப்புத்தகங்கள்" என்று இலகுவாகக் கூறி தமது மேதமையை நிலைநாட்டிக் கொள்கின்றனர். இதுதான் இவர்களது 'எப்போதுக்குமான' பதிலாக இருக்கிறது. இவர்களுக்கான தொடர்ச்சி என்பதில் பலர் இவர்களுக்கு பின்னாலே நிற்கக் கூடும். வாரிசுகள் உருவாக்குவதென்பது எதிர்காலத்தில் தமது கருத்தியலைக் காப்பாற்றுவதற்காக அல்ல. மாறாகச் செழுமைப்படுத்துவதற்காகவே என்பதை எப்போதும் உணர்ந்துகொள்ளாதவர்களும் நிலைப்பட்ட கருத்தியல் மூலம் சமூகத்தைத் தேங்கிப்போகச்செய்பவர்களும் மக்கள் அரசியல் செய்பவர்கள் அல்லர். அவர்கள் மக்கள் எதிர் அரசியல் செய்பவர்களே.

உரையாடல் - 1 இராயகரனை நோக்கி முன்வைக்கப்பட்டதாயினும் அதன் தொடர்ச்சித்தடத்தில் அதே வழியில் தன்னை நிலைநிறுத்த எத்தனிக்கும் மயூரனும் வந்து கலந்து கொண்டது உரையாடலை இன்னும் சிறப்பாகச் செய்ய உதவியது. இங்கே சமூகப்பகுப்பாய்வு மற்றும் தத்துவமரபிலான அவர்களது போதாமைகள் மட்டுமல்லாது அரசியல் தத்துவ ரீதியாக அவர்கள் காவித்திரியும் போதாமைகள் தொடர்பாகவும் எமது கவனம் அமைந்தது. இவ்வுரையாடலின் பின்பும் இருவருமே தமது கருத்தியலை சிக்கெனப்பற்றிப் பிடித்திருப்பதை அவர்களது எழுத்தின்வழி நாம் கண்டவாறே இருக்கின்றோம். இராயகரனாவது வாழ்க்கையின் நடுப்பகுதியைக் கடந்தவர். ஆயினும் மயூரன் தனது இளம்வயதில் போதாமைகளை வைத்திருப்பது எமது எதிர்காலச் சமூகத்தை எவ்வாறு பாதிக்கப் போகின்றது என்பதாக இன்றும் எமது கவனம் செலுத்தப்படுகின்றது.

இராயகரன் என்ற மனிதனின் தனிப்பட்ட சமூக அக்கறை தொடர்பாக எம்மகுள்ளது மிக மிக உயர்வானது. அவர் சலூகைகளுக்கும் ஆதிக்க உணர்வுக்கும் அடிபணிபவர் அல்லர். ஆனால், அவரது சமூக அக்கறையும் அதன் தீவிரத் தன்மையும் எவ்வாறு சமூக விரோதமாகின்றது என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இவ்விடத்தில் மயூரனை இராயகரன் இடத்தில் வைத்துப் பார்க்க முடியாது என்பதையும் சொல்லவேண்டியிருக்கிறதென்பதில் வருத்தப்படுகின்றோம். மார்க்சியத்தை - அதன் உயிர்ப்பை இவர்களிடம் இருந்து காப்பாற்ற நாம் தொடர்ச்சியாகக் கருத்தியல் தளத்தில் செயற்படவேண்டியிருக்கிறது. ஏனெனில் இவர்களது சனாதனக் கருத்தியல்களின் மூலமே இன்று முதலாளித்துவம் உயிர் வாழ்கின்றது. இதுதான் எமது இன்றைய நிலைப்பாடு.




18 உரையாடல்களும் 15 மாதங்களும்.. [[ மீள்வாசிப்பு ]]

இணையவெளியில் உரையாடலை ஆரம்பித்து அண்ணளவாக 15 மாதங்கள் பூர்த்தியாகிவிட்டன. இதுவரையான 15 மாதங்களில் 18 உரையாடல்களை நிகழ்த்தியாயிற்று. இதனூடாக பல்வேறுபட்டவர்களுடன் உரையாடல் சாத்தியமாகியிருக்கின்றது. இன்னும் பலருடன் உரையாடல் சாத்தியமாகாத போதிலும் ஊடாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறதெனக் கூறமுடியும். அதை விட பல வாசகர்களுடனும் கருத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. 15 மாதத்திற்கு முற்பட்ட கருத்தியல் சூழலுடன் ஒப்பிடும் போது தற்போது அச்சூழல் பலவிதத்தில் மாறியிருக்கிறதெனக் கூற முடியும்.

எமது எழுத்து பெரும்பாலும் எழுத்தாளர்களுக்கானதாகவே இருந்திருக்கிறது. எழுத்தாளர்களுடனான உரையாடல், எழுத்தாளன் முன்வைத்த கருத்து தேங்கிப்போவதையோ, நிலைத்து 'கல்வெட்டாகிக்' கனத்து நிற்பதையோ எமது உரையாடல் தகர்த்தெறிந்தது. அதுமட்டுமல்லாது, எழுத்தாளன் முன்வைத்த தீர்க்கமான கருத்துக்கு எதிராக அல்லது அதை மறுக்க நினைத்த தீர்க்கமான கருத்திற்கு எதிராக எமது உரையாடலை நிகழ்த்தினோம். கருத்தியலின் 'நிலையாமையை' வலியுறுத்துவதாக எமது உரையாடலை தயார்ப்படுத்தினோம். கருத்துக்களுக்கு எதிர்நிலைப்பாடு எடுத்து 'விவாதம்' புரிவதைத் தவிர்த்து அதனை 'உரையாடலாக' மாற்ற நினைத்தோம். எழுத்துக்களினதும், நிகழும் உரையாடல்களினதும் போக்கை மறுத்தும், விடுபடல்களினது இடைவெளியை நிரப்பியும் சுருள் உரையாடல் (Spiral Discourse) 1* ஒன்றுக்கு தமிழ்சமூகத்தைத் தயார்ப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இச்சுழற்சி உரையாடல் மூலம் அனைத்துவகைத் துவித எதிர் இருமைக் (Binary opposition) 2*கட்டமைப்பு மனநிலையையும் தகர்த்தல் எமது நோக்கமாயிருந்தது. விடுபடல்களை நிகழ்த்தியவாறு ஓரிழையில் தொங்கியவாறு சென்றுகொண்டிருந்தவர்களின் கண் முன்னே 'இழைக்கொத்துக்களைக்' காட்டி நையாண்டி பண்ணினோம். புதிய புதிய இழைகளில் அவர்களைத் தொற்றவைத்து அவர்களது 'துவித எதிர் இருமை' மனநிலையைத் தகர்க்க நினைத்தோம்.

மனித மனங்கள் எப்போதும் துவித எதிர் இருமை மனநிலையினூடாகத் தம்மைக் கட்டமைத்தே பழக்கப்பட்டவை. தமிச்சமூகம் தனது வாழ்வின் பெரும்பகுதியை தமிழ்ச்சினிமாவுடன் ஊடாடியே கழிக்கின்றது. தமிழ்ச்சூழலில் பிறந்த ஒருவன்/ஒருத்தி தமிழ்ச்சினிமாவின் பாதிப்பில் இருந்து தனியே வாழ்ந்துவிடமுடியாது. தமிழ்ச்சினிமாவின் நேரடியான பாதிப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலும் அதன் மறைமுகத்தாக்கத்திற்கு ஆளாவதை தவிர்த்துவிடவே முடியாது. ஏனெனில் நாம் ஊடாட நினைக்கும் அல்லது தவிர்க்க முடியாமல் ஊடாடும் புள்ளிகள் தமிழ்ச்சினிமாவின் தாக்கத்திற்கு உட்பட்டிருப்பதை நாம் வாழ்வில் பலமுறை உணர்ந்திருப்போம். அண்மைக்காலத்திற்கு சற்று முன்னர்வரை தமிழ்ச்சினிமா முற்றுமுழுதாக துவித எதிர் இருமைக் கட்டமைப்பிற்குள்ளேயே இயங்கியது எனக் கூறமுடியும். அதன் இயக்கம் என்பதே த்வித எதிர்மையின் எதிரெதிர் துருவ இயங்குகையாகவே காணப்பட்டது. ஆண்மை x பெண்மை, நல்லது x தீயது, கதாநாயகன் x வில்லன், தேசபக்தி x தீவிரவாதம் என்றவாறாக அதன்போக்கு இக்கட்டமைப்பிற்குள் தீவிரமாக இயங்கியது. உலகக நிகழ்ச்சிப்போக்கின் அனைத்து போக்கையும் தனிநபர் சார்ந்து இவ்வகைப்பட்டுக்குள் அடக்கிவிட முடிகின்றபோதிலும் தமிழ்ச்சினிமாவின் போக்கு சற்று வித்தியாசப்பட்டது. துவித எதிர் இருமைகளினதும் உச்சப்புள்ளிகளின் இருப்பும் அதன் இயக்கமாகியது. இதனால் அதன் தொடர்ச்சிக்கும் வெற்றிக்கும் இவ்வெதிர் நிகழ்வுப்பரப்பிற்குள் பிம்பங்களைக் கட்டமைத்து ரீல்களை ஓட்ட வேண்டியிருந்தது. எமது அனைத்து வகையான கலைகளும் சினிமாவில் தங்கிப் போய் இருக்கின்றன. கலைகள் சமூகத்துடன் ஊடாடுபவை உரையாடுபவை என்பதன் அடிப்படையிலும் தமிழ்நாட்டில் சினிமா அரசியலுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருப்பதன் அடிப்படையிலும் அவற்றின் தாக்கம் அதன் வாழ்நிலைப்பரப்பிற்குள் அகப்பட்ட அனைத்திலும் தனது செல்வாக்கைச் செலுத்தியது எனக்கூறமுடியும்.

தமிழ் மரபில் 3* துவித எதிர் இருமை மனநிலை ஆழமாக உன்றி நிலைத்திருப்பதைக் காண்கின்றோம். அவற்றில் இருந்து விடுபட வேண்டியதன் அவசியம் எம்மால் இன்னும் உணரப்படவும் இல்லை. நாம் இத்தாக்கத்தில் இருந்து வெளியேறியவர்கள் எனக்கூறவில்லை. நாம் அதில் இருந்து விடுபட எத்தனிக்கும் மனநிலையைச் சார்ந்தவர்களாக இருக்கின்றோம். எமது சமூகத்தில் அதன் தாக்கத்தை குறைக்க ஆசைப்படுபவர்களாக இருக்கின்றோம். அம்மனநிலையைக் கடந்து 'பலசாத்தியப்பாடுகள்' என்னும் கருத்தியலையும் நிலையான சாத்தியம் என்னும் நிலையைக் கடந்து நிலைய்ற்ற சாத்தியங்கள் என்னும் கருத்தியலை தோற்றுவிப்பவர்களாக அதனை ஊக்குவிப்பவர்களாக இருக்க ஆசைப்படுகின்றோம். பொதுமனநிலையை பல்சாத்திய மனநிலைக்கு மாற்றுவதனூடாக பொதுமனநிலை கட்டமைத்திருக்கும் பாசிசக்கூறுகளைக் களைய நினைக்கின்றோம். இக்களைவின் மூலம் விளிம்புநிலைச்சாத்தியங்கள் தமக்கான உற்சாகத்துடன் வெளிக்கிளம்பும் என்பது எமது நிலைப்பாடாயிருக்கின்றது. சிறுபான்மை இன மக்களின் உளவெளிப்பாடுகள், சிறுபான்மை மத மக்களின் வெளிப்பாடுகள், சிறுபான்மைப் பாலியல் கருத்துடையோரின் வெளிப்பாடுகள், சாதிய ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் வெளிப்பாடுகள் போன்றவற்றினது சமூகரீதியான அங்கீகாரத்திற்கு துவித எதிர் இருமை மனநிலையைக் கடந்த உரையாடல்கள் அவசியம். வெறுமனே விளிம்பின் மீதான அளவற்ற துதிபாடுகையும் கொண்டாட்டமும் துவித எதிர் இருமை மனநிலையை மேலும் இறுக்குவதோடும் பிளக்கப்பட கருத்தியலின் உச்சநிலைக்கு இருசாராரையும் அழைத்துச் செல்லும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை. அதன்வழியான பயணம் என்பது எம்மை ஒரு முட்டுச்சந்தில் நிறுத்தும். எமது செயற்பாடுகள் அனைத்தும் ஒருவித செயலற்ற நிலையை( Deadlock ) 4* அடைந்து பாசிச நிலையில் எம்மைத் தக்கவைக்கும் என்பதை நாம் நம்புகின்றோம்.

இவற்றின் கேள்விகளில் இருந்தே எமது உரையாடல்கள் ஆரம்பமாகின. 'எமக்கான' 'தீர்க்கமான' கருத்துக்களை நாம் கொண்டிருக்கவில்லை. அனைத்துவகையான கருத்தியல்களையும் உள்வாங்கிக்கொள்ளுமாறு எமது மனதை தயார்ப்படுத்தி வைத்திருந்தோம். அதில் இருந்து எமது உரையாடலை நகர்த்திச் செல்லக்கூடியதாக இருந்தது. எம்மால் வெற்றிகரமாக எமது உரையாடல்களை நகர்த்திச்செல்ல முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் எமக்கு எவ்வித மனத்தடங்கலும் இல்லை. ஏனெனில் எமது உரையாடல்கள் அனைத்தையும் வன்மம் நிரம்பியவர்களுடனும், முடிவுகளைக் கொண்டாடுபவர்களுடனும், குழுவாத மனநிலைக்குத் தம்மைப் பொருத்திக் கொண்டவர்களுடனும், தமக்கான கருத்தியலைக் கண்டடைந்து விட்ட புழங்காகிதத்தில் இருந்தவர்களுடனும், புதிய கருத்தியல்கள் தமது இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுடனும், பழிவாங்கும் உணர்ச்சியுடன் இருந்தவர்களுடனும், அதிகார மோகத்திற்கு ஆட்பட்டிருந்தவர்களுடனும், தாம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு சார்பானவர்கள் என்ற நம்பிக்கையினூடே சுயதிருப்திப் பட்டுக் கொண்டிருந்தவர்களுடனும் நிகழ்த்த வேண்டி இருந்தது. அவர்களது நம்பிக்கை அவர்களது விருப்பு சார்ந்து எதிர்நிலைப்பாடு எடுத்து 'விவாதம்' புரிந்த சந்தர்ப்பங்களும் உண்டு. சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முன்முடிவுகளுடன் அணுகுபவர்கள் தம்மை மட்டுமல்லாது அச்சமூகத்தின் அதன்பின்வரும் பெரிந்தொகையான மக்கள் கூட்டத்தையும் கருத்தியல் சிதைவுக்கு உள்ளாக்குகின்றார்கள் என்ற 'உண்மை' தெரியாமல் இருக்கின்றார்கள் என்பது வருத்தத்திற்குரியது. தமது சுய விருப்பு வெறுப்புகள் எழுத்தின் மீது கவியும் போது ஆரம்பிக்கும் நச்சுச்சூழல் அதன்பின்னே வருகின்ற அனைவருடைய மனதிலும் நஞ்சை வளர்த்துச் செல்லும் என்பது தெரியாமல் போவது துரதிஸ்டமானது. இவ்வகையான கட்டங்களைத் தாண்டியதாக புதிய தலைமுறை இருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதனைக் கருத்தியல் ரீதியாகச் சாத்தியமாக்க எழுத்தாளர்களுடன் உரையாடலை ஆரம்பிக்க வேண்டி இருந்தது. தற்போதைய இணையத் தொழில்நுட்பம் அதைச் சாத்தியமாக்கிய மிகவும் உதவி புரிந்தது எனக்கூறமுடியும்.

எமது 18 உரையாடல்களும் தத்துவம், அரசியல், சமூகவியலுடன் இணைந்த தொழில்நுட்பம் என்றவாறாகப் பல்வேறுபட்ட புள்ளிகளைக் கடந்து சென்றபோதிலும் அதன் மையச்சரடாக இருப்பது சமூகக்கருத்தியல்களைத் தீர்மானிக்கும் தத்துவத்துடன் தொடர்பான பரப்பே. சமூகக்கருத்தியலைத் தீர்மானிப்பதிலும் அதனி மாற்றியமைப்பதிலும் குறித்த மொழியில் அமைந்த எழுத்திற்குப் பெரும்பங்குண்டு. அதனை எழுதுபவர்களினது மனநிலையே சில மாற்றங்களை வேண்டி நிற்கும் நிலையில் நாம் வாசகர்களுடன் உரையாடுவதிலும் பார்க்க எழுத்தாள்ர்களுடன் உரையாடப் பெரிதும் விரும்பினோம். எமது ஆரையாடல்கள் மூலம் எழுத்தாளர்களின் மனநிலையில் சிலவகையான மாற்றங்களை ஏற்படுத்துவது மாத்திரமன்றி உரையாடலை அவதானிக்கும் வாசகனுக்கும் ஒற்றைப்பரிமாணம் தவிர்ந்த தளத்தில் எண்ணச்சிதறல்கள் ஏற்படும் என்பது எமக்கான நம்பிக்கையாக இருந்தது. கருத்தியலில் செயலற்ற நிலை (Deadlock) என்பது பலூன் மாதிரியானது. இயங்குகைக்கான பெருமளவுசக்தியைத் தேக்கியவாறு தன்னை இறுக்குக்கொண்டிருப்பது. அதன்மீது விழும் சிறிய ஊசிக்குத்து ஒன்று அதனை சிதறடித்துவிடப் போதுமானது. எமது உரையாடல்கள் எழுத்தாளர்களுடன் நிகழ்ந்த போதிலும் Deadlock நிலையைக் கடந்தவர்கள் வாசகர்கள் என்பது வியப்பானது. வாசகர்கள் புதிய மனத்துடன் உரையாடலை அணுகுவார்கள். அவர்களிடன் எதுவித முன்முடிவுகளும் இருக்காது. அவர்கள் அச்சூழலை இலகுவாகக் கடப்பார்கள். எழுத்தாளர்களுடன் எமக்கு நிகழ்ந்த உரையாடல்கள் வாசகர்கள் சிலகட்டங்களைத் தாண்டிப் போக உதவியது என்பதை நாம் சிலருடனான உரையாடல்களில் கண்டிருக்கிறோம். ஆயினும் சில எழுத்தாளர்கள் எமது உரையாடல்மூலம் பலவிடயங்களை உள்வாங்கிய போதிலும் எதுவித மாற்றமும் அற்று அன்றுபோல் என்றும் வீற்றிருப்பது எமக்கு மகிழ்ச்சியான விடயம் அல்ல. அவர்களை நினைத்தல்ல, அவர்களைத் தொடரும் சூழலையும் அதன்மீது கவியப்போகும் 'இருளை'யும் நினைத்தே எமது கவலை.

15 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விடத் தற்போது ஆக்கபூர்வமான உரையாடல்கள் அதிகரித்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது கருத்தியல் சூழலும் மாறியிருக்கின்றது. முன்பிருந்த இறுக்கமான கருத்தியல் சூழலில் சற்று நெகிழ்வு ஏற்பட்டிருப்பது போன்று உணர்கின்றோம். நாம் உரையாடத் தொடங்கியதன் நோக்கம் சிறிதளவு நிறைவேறியிருக்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்தி. எமது உரையாடல் தான் இச்சூழலை மாற்றியது என்ற புருடா கதைகளை முன்வைப்பது எமது நோக்கமல்ல. ஆயினும், எமது உரையாடல் சூழலின் மாற்றத்திற்கு சிறிதளவில் பங்களித்திருக்கும் என்ற நம்பிக்கை எம்மை மேலும் பரவலாக உரையாட வைக்கும். அந்த அளவில் அவ்வகை நம்பிக்கைகளை எமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். நாம் தனிப்பதிவு ஆரம்பித்து ஒற்றைப் பரிமாணத்தில் எழுத்துக்களை உருவாக்கி அதனைப் பாராட்டிவரும் பின்னூட்டங்களை அனுமதித்து ஆனந்திக்கும் மனநிலை எமக்கெப்போதும் இருந்ததில்லை. கவர்ச்சிகரமாக (துன்பகரமாக?) எழுத்துக்களைப் பிரசவித்து ரசிகன்/ரசிகைளைத் தேடி பேசி இன்புற்றிருக்கும் மனநிலையும் எம்மிடம் இருந்ததில்லை. எம்மைப் பெரிய பிம்பமாகக் கட்டமைத்து சுயதிருப்திக்குள்ளாகி வாழும் மனநிலையும் எமக்கில்லை. மாறாக, எழுத்தாளர்களுடன் உரையாடலை ஆரம்பித்து அனைத்துவகையான ஒற்றைப்பரிமாண சூழல்களையும் தகர்க்த்தெறியும் மனநிலையும் பெருவிருப்பும் எம்மிடம் இருந்தன. தனித்தளம் வைத்திருந்து எழுத்தைக் காட்சிப்படுத்துவதன் ஊடாக சமூககருத்தியல் மாற்றத்தை விரைவாக எதிர்பார்க்க முடியாது. அது மிகமெதுவானது. மீறல்களை அனுமதிக்கும் இயல்பை அவற்றினூடு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியாது. ஆனால், உரையாடல்கள் அவ்வாறில்லை. அவை தேக்கம் என்பதை இல்லாமல் செய்யக்கூடியவை. உரையாடல் என்பது குளத்தில் நீச்சல் அடிப்பது போன்றது. நீச்சல்களின் பெருக்கத்தில் குளம் காணாமல் போய்விடும். நீச்சல் மட்டுமே வெளித்தெரியும். ஒருவர் மூழ்கும்போது மட்டுமே குளமும் அதன் ஆளமும் வெளித்தெரியும். குளத்தின் ஆழத்தை இல்லாமல் ஆக்க முடியாது. ஆனால், நாம் குளத்தை இல்லாமல் ஆக்குகின்றோம். எமது நீச்சல் நிகழும் இடத்தில் குளம் காணாமல் போய்விடுகின்றது. நீச்சல் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. குளம் தனது ஆளத்தைப் பறைசாற்ற வளர்த்து நிற்கும் தாமரைச் செடிகள் எமக்குப் பொருட்டல்ல. அவற்றைக் கண்டு நாம் எப்போதும் அஞ்சியதுமில்லை.

இனி, நாம் நிகழ்த்திய உரையாடல்களை மீள்வாசிப்பு செய்ய நினைக்கின்றோம். எமது உரையாடல்களே குளமாகி பற்வைகளைத் தம்மிடம் வரவழைக்கின்றன. அதை நீச்சல்குளமாக மாற்ற வேண்டிய பொறுப்பு எமக்கு நிச்சயமாகவே உண்டு. எமது உரையாடல்களின் மீள்வாசிப்பினூடே எம்மோடு உரையாடியவர்கள் பற்றிய விபரங்களையும் பார்த்துச் செல்வோம்.

பிற்குறிப்பு:
இங்கே, மொழியின் துவித எதிர் இருமையை எம்மால் கடக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கின்றோம்.

Footnotes.
1. http://www.ischool.utexas.edu/~palmquis/courses/discourse.htm
2. http://www.nationmaster.com/encyclopedia/Binary-opposition
3. http://murugan.org/research/zvelebil-tamil_traditions-intro.htm
4. http://en.wikipedia.org/wiki/Deadlock